Thursday, March 6, 2025

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பார்த்தபடி பயணத்தைத் தொடங்கினேன். 

கோவில் திருவிழாவிற்குப் போக வேண்டும் என்றால் ஒரு வாரம் முன்பே வீட்டில் பலகாரம் செய்யத் தொடங்கி விடுவார்கள். புதுத்துணி, சொந்தபந்தம், கடைவீதி, கறிச்சோறு, கண்ணாமூச்சி விளையாட்டு, முறுக்குமீசை தாத்தாவின் மிட்டாய்கடை, மஞ்சள் நீராட்டு என்று நினைத்து நினைத்து ஊருக்குப் போகும் நாட்களுக்காகக் காத்துக்கிடந்தது இன்று முற்றிலும் மாறி விட்டது

போனோமா சாமியக் கும்பிட்டோமா வந்தோமா என்று கிளம்பி வரும் காலம் இது. போகும் வழி எல்லாம் அம்மாவுடன் பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு  சென்றதில் பயணதூரம் சற்றும் தெரியவில்லை. காலை 5 மணிக்கு கிளம்பி கோவிலை அடைய சரியாக 9 மணிஆகிவிட்டது. நீரோடை ஒட்டிய கோவில், சுற்றி இருக்கும் கட்டிடங்களின் அமைப்புகள் மாறினாலும் அந்த ஊரின்அழகு சற்றும் குறையவில்லை. ஊர் முழுக்க மாவிலைத் தோரணம், வாசல் நிறைய வண்ணம் பூசிய கோலங்கள், ஆங்காங்கே மக்கள் கூட்டம், தேர்க்கடைகள் என இருந்தாலும் பழைய உயிரோட்டத்தை இழந்திருந்து. இந்தத் திருவிழா நாளிற்காகக் காத்துக்கிடந்த காலங்கள் மாறி இன்று திருவிழாக்கள் மக்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன. சாமி தரிசனம் பார்த்தாச்சு சரி பக்கத்துல இருக்க தன் தங்கச்சியைப்  பார்த்திட்டு போகலாம் என்று அம்மா சொல்ல சரி என்று நானும் அம்மாவும் கிளம்பினோம்

வயல்கள், அணைக்கட்டு, கரும்புத் தோட்டம் என்று மிகவும்அழகான ஊர். பல நாட்கள் கழித்து  சந்தித்த உற்சாகம் வீடு முழுவதும் நிரம்பி வழிந்தது. மதிய உணவை முடித்து விட்டு பேசிக்கொண்டு  இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை, பொழுது சாய்ந்து விட்டது. பழைய நினைவுகளைத் தன் தங்கையிடம் அசைபோட்டுக் கொண்டு இருந்த அம்மாவை வாங்க கிளம்பலாம் என்று சொல்ல மனம்  இல்லை .சரி ஒரு இரவுதானே தங்கி விட்டுப் போகலாமா என்று கேட்டதும்  அனைவரின் முகத்திலும் சந்தோஷம் பூத்துக் குலுங்கியது.

இரவு முழுவதும் அக்கா தங்கை இருவரும் பேசிக் கொண்டே இருந்தார்கள் . அடுத்த நாள் காலை வீட்டைச் சுற்றி இருக்கும் வயல்வெளிகளைப் பார்க்கக்  கிளம்பிவிட்டோம். அணையின் அழகை இரசித்துக் கொண்டு இளநீர் அருந்திவிட்டு, அங்கு மீன்பிடி சிறுவர்களிடம் பேசி சற்று பொழுதைக் கழித்தோம். பசி வயிற்றைக் கிள்ளவே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.


சித்தி வீட்டின் எதிர் வீடு  அந்த ஊரிலேயே பெரிய வீடு. முன்னர் பார்த்ததை விட இம்முறை புதுநிறம் பூசி மெருகேறி இருந்தது. மூன்று கார் முன்வாசலிலும், ஒரு பழைய மாருதி வீட்டின் பின் புறத்திலும் நின்றது . அங்கு இங்கு என்று வேலையாட்கள் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள்வீட்டின் முதலாளி அம்மா வேலை ஆட்களை கவனிக்க மாடியில் நின்று கொண்டிருந்தாள். எங்களை பார்த்ததும் சிறு புன்னகை பூத்தாள். நாங்களும் பதிலுக்குப்  புன்னகைத்துவிட்டு கேட்டைத் திறந்து சித்தி வீட்டிற்குள்ளே நுழையவும், வாசலில் ஒரு வெள்ளை இன்னோவா வந்து நின்றதுஒரு கூடையில் 5 அடுக்கு டிபன் கேரியருடன் நடுத்தர வயது இளைஞர் ஒருவர் இறங்கி எதிர்வீட்டிற்குள் சென்றார். 10 நிமிடம் கழித்து அங்கிருந்து வெளியே வந்தவர், சித்தி வீட்டிற்குள் வந்தார். அவரை உட்கார சொல்லிவிட்டு என் சித்தி டீ கொண்டு வந்து கொடுத்தாள். ஒன்றும் புரியாமல் நின்ற என்னைப் பார்த்து ஒரு குறுஞ்சிரிப்பைத் தூவிவிட்டு மீண்டும் அந்த இளைஞர் பெரிய வீட்டிற்குள் சென்றுகூடையை எடுத்து வந்து காரில் ஏறி மறைந்து விட்டார்.

என்னதான் சங்கதி என்று தெரிந்து கொண்டே தீர வேண்டும் என என் சித்தியிடம் கேட்டேன். அந்தப் பெரிய வீட்டில் 95 வயது மிக்க ஒரு பாட்டி இருக்கிறார், அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். அதில் ஒரு மகள்வழிப் பேரன்தான் இங்கு வசிக்கிறார் . அதாவது அந்தப் பாட்டியின் கொள்ளுப்பேரன் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள். அந்தப் பாட்டியின் மற்ற  இரண்டு பெண் பிள்ளைகள்தான் அவருக்கு உணவு கொடுப்பதாகவும்அவர்கள் இருவரும் வேறு வேறு ஊர்களில் இருப்பதாகவும் மாதம் ஒருவர் தினமும் காரில் உணவு அனுப்புவதாகவும் சொன்னார்கள்

'தோட்டம் துறவு என்று 100 ஏக்கர் இருக்கும், பெரிய தலைக்கட்டு. அந்தக்  காலத்தில் சீதனமாக நகைபணம் என்று அளவில்லாமல் கொண்டு வந்தவள். மூன்று பெண் பிள்ளைகளை பெற்று எடுத்து நல்ல முறையில் பெரிய இடங்களுக்குக் கல்யாணம் செய்துவைத்தவள். இன்று எள்ளுப்பேரன் பேத்தி பார்த்தவள். இருந்தும் அவள் நிலைமை என்னமோ தினமும் சாப்பிடக்  காத்துக்கிடக்கும்  அவலநிலை. வைராக்கியம் அதிகம், ஒரு சொல்லைத் தாங்க மாட்டாங்க, ஊருக்கே சோறு போட்டவங்க இன்னிக்கு ஒரு வேலை சாப்பாடு பலமைல் தூரத்துல இருந்து வரவேண்டி இருக்கு. அவங்களுக்கே இந்த நிலைமைனா நாளைக்கு நமக்கு எல்லாம் எப்படியோ' என்று முனகிக் கொண்டே சித்தி வீட்டிற்குள் சென்றாள்.

ஒரு காலத்தில் மகாராணி, இன்று? முதுமை நமக்கு எத்தனை பரிசுகளை அள்ளித் தருமோ என்று யோசித்தபடியே நானும் அம்மாவும் ஊர் திரும்பினோம். நினைவுகளையும் பல கேள்விகளையும் சுமந்த ஒருபயணம்.


4 comments:

  1. அருமையான கதை

    ReplyDelete
  2. மனிதர்கள் மனம் எவ்வளவு குறுகிப் போய் வருகிறது என்பதை சுட்டிக் காட்டியது..அருமை

    ReplyDelete
  3. //முதுமை நமக்கு எத்தனை பரிசுகளை அள்ளித் தருமோ// நச் என்று நிதர்சனத்தை அழகாக எழுதியுள்ளீர்கள்...

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...