முனீஸ் சைக்கிள் கடை என்று எழுதப்பட்ட ஃபோர்டின் வாசகத்தை வாசித்தபடியே, அந்த கடையின் முன் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார் அறுபத்தி ஐந்து வயதிருக்கும் சக்தி. அந்தக் கடையின் முன் வாயிலில் யாருமில்லை.
"சார்..சார்.. யாராவது உள்ளே இருக்கீங்களா?" என்ற அவரின் குரல் உள்ளே பழைய சைக்கிள் ஒன்றை பழுது பார்த்துக் கொண்டு இருந்த முனியப்பன் காதில் வந்து விழுந்ததும் அவர் வெளியே வந்தார். தன் வயதொத்த அந்த நபர் தன் தொப்பையைத் தூக்கி நடந்து வருவதைப் பார்க்கும் போது, சக்திக்கு சிரிப்பு வந்தது. அவரது முகத்தை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கே என்று நன்கு உற்றுப் பார்த்தார். ஆச்சரியத்தில் நெற்றியைச் சுருக்கி, "நீங்க காரப்பாளையம் முனியப்பன் தானே" என ஆச்சிரியத்தில் கூவினார்.
தன் கண்ணாடியை சரி செய்தபடியே, தன் கடைக்கு வந்த அந்த நபரை பார்த்து ஆமாம் நான் முனியப்பன் தான். "நீங்க.நீ… நீ… சக்தி தானே."! வாட்ட சாட்டமாக வயசானாலும், டை அடித்து பேண்ட் சர்ட் போட்டு நல்ல பர்சனாலிட்டியா நின்றிருந்தார் சக்தி.
"ஆமா சக்தி தான்.."
" உன்னை இந்த இடத்தில் பார்ப்பேனே நினைக்கல முனியப்பன்.ஆமா, சைக்கிள் கடை உன்னுதா?."
"ஏண்டா, நானெல்லாம் சைக்கிள் கடை வைக்க கூடாதா"? என்றார் முனியப்பன் குதர்க்கமாக.
" டேய் முனி உனக்கு இன்னும் என் மேல் இருக்கிற கோபம் தீரலையா?"
"டேய், நானாருடா? உம் மேல கோபபடறதுக்கு? உங்க வசதி வாய்ப்பு எங்கே? நாங்க எங்கே"?
"டேய், முனி இப்படி எல்லாம் பேசறதா இருந்தா நான் கிளம்பறேன்டா.
என் பேத்திக்கு நான்கு வயசாகுது. அவளுக்கு பொறந்தநாளு வருது. சைக்கிள் வேணுனு கேட்டாள். நாங்களும் இந்த ஊருக்கு புதுசு எங்கே சைக்கிள் வாங்கறதுனு தெரியல. எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிறவங்க தான் சொன்னாங்க மூனிஸ் சைக்கிள் கடைக்குப் போங்கன்னு.இங்கே வந்து உன்னைப் பார்த்ததும் எத்தனை மகிழ்ச்சியா இருந்தது தெரியுமா? நீ என்னடானா பழச நினைச்சு இப்படிக் குதர்க்கமா பேசற?" என்று குரல் மறுகச் சொன்னார் சக்தி.
முனி என்கிற முனியப்பன் தலை கவிழ்ந்தார்.." சாரிடா சக்தி. நீ அன்னைக்கு அப்படி செய்யலைனா, நான் சத்தியமா இந்த நிலைக்கு உயர்ந்திருக்க மாட்டேன்".
"அன்னைக்கு நானும் உன்னை காட்டிக் கொடுத்திருக்க கூடாது என்ன செய்யறது. அப்ப எனக்கு விவரம் இல்லாம போச்சு" என்றார் சக்தி.
"ஆமாம் சத்தி, நமக்கு அப்ப எத்தனை வயசிருக்கும்?. பத்து பணிரெண்டு வயசு இருக்குமா? அந்த சைக்கிள் கடையால் தானே நாம பிரிந்து போனோம். தலையாட்டிய இருவரின் மனக்கண்ணிலும் காட்சிகள் விரிய ஆரம்பித்தது.
காரப்பாளையம் ஊருக்குள் புதியதாக முளைத்த சைக்கிள் கடையை ஒட்டி நிறைய சிறுவர்கள் குழுமி இருந்தார்கள். காரணம் அந்த சைக்கிள் கடையின் முன்பாக, சிறுவர்கள் ஓட்டுவதற்கு இலகுவாக இரண்டு சக்கர மிதிவண்டி இரண்டு குட்டி குதிரையாக நின்று கொண்டு இருந்தது.
அந்த குட்டிக் குதிரை சிறுவர்களுக்கு வாடகைக்கு ஓட்டுவதற்கு தரப்படும் என்று எழுதியிருந்த அறிவிப்பே சிறுவர்கள் குழும காரணமாக அமைந்தது. ஒரு மணி நேரம் ஓட்டிப் பழக 50 பைசா கொடுக்கணும். ஐம்பது பைசா என்றாலும் அவ்வளவு எளிதில் கிடைக்காது காலம்.
முனியப்பன் குடும்பம் நடுத்தர வசதிக்கும் குறைவானது. அவனுக்கு மூணு வேலை சாப்பாடு உறுதியாக கிடைக்கும். ஆனால், ஐந்து பைசா காசுக்கு ஐஸ் வாங்கித் திங்க முடியாத வறுமை இருக்கும். இதில எங்கே ஐம்பது காசு போட்டு தினமும் சைக்கிள் ஓட்டுவது. அவன் ஏக்கத்துடன் அந்த சைக்கிள் கடையைப் பார்த்துட்டே எதுத்தாப்பல இருக்கிற வேப்பமரத்துக்கு கீழே முக வாட்டத்துடன் உட்கார்ந்து கொண்டான்.
அப்போது, மெத்தை வீட்டு சக்தி அந்த குட்டிச் சைக்கிளை வாடகைக்கு எடுத்து வந்து முனியப்பன் முன் 'ட்ரிங்... ட்ரிங்... கிணி.. கிணி' என பெல்லை அமுக்கினான்..
"டேய் முனி நீயும் வாயேன், இரண்டு பேரும் சேந்து சைக்கிள் ஓட்டுவோம்" எனச் சொன்னதும் முனியப்பனுக்கு பெருமை பிடிபடவில்லை. எப்படியாவது இன்னைக்கு இந்த சைக்கிளை ஓட்டிப் பார்த்துட வேண்டியது தான் என மனசுக்குள் குதுகலித்தான்.
"இருடா வரேன்" என சக்தி பின்னால் ஓடினான் முனி. சக்தி சீட்டியில் ஏறிக் உட்கார்ந்ததும் அவனால் பேலன்ஸ் செய்ய முடியாமல், பொத்துனு கீழே விழுந்தான். "டேய் முனி என்னை சைக்கிளோட சேத்திப் பிடிச்சுக்கோ"டா எனச் சொன்னதைக் கேட்டு, முனியும் அவனுக்கு சாரதியாக சைக்கிள் பிடிக்க ஆரம்பித்தான்.ஒரு மணி நேரம் கடந்தது. தான் ஓட்டவே இல்லை என்பது முனிக்கு புரிந்ததும், "டேய், சக்தி நீ எனக்கு சைக்கிளே ஓட்டக் கொடுக்கல"டா, என்றான் பரிதாபமாக.
"டேய் முனி, நான் முதல்ல ஓட்டிப் பழகிட்டு உனக்கு ஓட்டச் சொல்லிக் கொடுக்கறேன்டா" எனச் சமாளித்தான் சக்தி. விவரம் எதுவும் தெரியாத முனியும் சரினு தலையாட்டினான். ஒரு மணி நேரம் முடிந்தது. சைக்கிள் கடைக்காரருக்கு சைக்கிளை திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.
"டேய் முனி நாளைக்கு சத்தியமா நாம சேந்து ஓட்டலாண்டா"னு சொல்லிட்டே வீட்டுக்கு ஓடினான் சக்தி. முனி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.
வீடு திரும்பிய பிறகும் அவனுக்குள் அந்த சைக்கிள் மீதான மோகம் குறையவேயில்லை. பாத்திரத்தைத் துலக்கிக் கொண்டிருந்த அவன் அம்மாவிடம் சென்றான்.
" அம்மா, அம்மா"
" என்னடா கண்ணு"
" ஒரு அம்பது காசு இருந்தாக் கொடேன் நான் சைக்கிள் ஓட்டணும்மா.."
"அடேய்! பொழையா குப்பை,இங்கே எங்கடா காசு கொட்டிக் கிடக்குது. அம்பது காசு இருந்தா இரண்டு காய் கசம்பு வாங்கிப் போட்டா கொழம்புக்காகும். போடா போ சைக்கிளாம் சைக்கிளு." அவள் அம்மா வசை பாடியதை கேட்டதும் கண்களில் நீர்வழிய போய் படுத்தவன், தனக்கு காசில்லாததால் தானே சைக்கிள் ஓட்டிப் பழக முடியல என யோசித்த போது, சாமிகிட்ட போய் சொன்னாக்க எல்லாக் குறையும் தீர்ந்திடுணும் அம்மா அடிக்கடி சொல்லுவாளே என்ற நினைவு வந்தது. நாமளும் நாளைக்கு போய் அந்த சாமிகிட்டையே கேப்போம் என நினைத்தாவறே தூங்கிப் போனான். காலையில் எழுந்ததும் ஊரோரும் ஊஞ்சமரத்தடியில் இருக்கும் கருப்பணசாமியைத் தேடி கோவிலுக்குப் போனான்.
அங்கே அவன் போகும் முன்பே திருநீரு வைத்திருந்த தட்டில் பத்து பைசா, ஐந்து பைசா என நாலைந்து சில்லறை காசுகளை சாமி கும்பிட வந்தவர்கள் போட்டுச் சென்றிருந்தார்கள்.
முனியப்பனுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது. 'அட ! நாம சாமிகிட்ட கேக்காமலே, சாமி நம்மளுக்குனே காசை இங்கே வச்சிருக்கு, நாம போயி அம்மாகிட்ட காசக் கேட்டு நேத்து ஏச்சைக் கேட்டது தான் மிச்சம்.' என அவன் குதுகலித்தான்.
கருப்பணசாமி கோவில் வாசலிலிருந்து காசை எடுத்த முனி, நேராக சைக்கிள் கடைக்குச் சென்றான். மகிழ்ச்சி தாண்டவமாட காசை கொடுத்து, வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு தள்ளிட்டு வந்த போது, அங்கே சக்தி வந்து சேர்ந்தான்.
"டேய் முனி, உனக்கு எப்படிடா காசு கிடைச்சது?.."
"அதெல்லாம் உனக்கு எதுக்கு?
நீ தான் நேத்து எனக்கு சைக்கிளே கொடுக்கலையே அப்புறம் என்ன பேச்சு வேண்டியிருக்கு." எங்கே அவன் நம்ம கிட்ட சைக்கிள கேட்டுடுவானோனு கோபமாக பேசினான் முனி.
சக்திக்கு மட்டும் சந்தேகம் தீரல.
முனி சைக்கிள் ஓட்டி முடித்த பிறகு தான் சக்திக்கு ஓட்டுவதற்கு சைக்கிள் கிடைத்தது.
அதுவும் தினமும் சக்தி வருவதற்கு முன்பே வந்து, முனி சைக்கிளை எடுத்து வந்து ஓட்டுவது சக்திக்கு சுத்தமாகப் பிடிக்கல.
நேற்று, முனியின் அம்மா கையில காசில்லைனு, அவன் அம்மாகிட்ட கேட்டு, பருப்பு வாங்கிட்டு போனதை சக்தி பார்த்திருந்தான். மளிகை சாமான் வாங்கவே காசில்லாத அவன் அம்மா முனிக்கு எப்படி தினமும் காசு வைச்சிருப்பார் கொடுப்பாங்க.?என சக்திக்குள் பெருத்த சந்தேகமும், கேள்வியும் எழுந்தது.
அடுத்த நாள் காலையில் முனி வீட்டுக்குச் சென்று மறைந்திருந்து பார்த்தான் சக்தி. முனி வீட்டிலிருந்து கிளம்பி, நேராக கோவிலுக்குச் செல்வதையும், அங்கே பூசைத் தட்டிலிருந்த காசை எடுத்த முனி, அசால்ட்டாக தன் டவுசர் சோப்பில் போட்டதையும் பார்த்து அதிர்ச்சியானான்.
'கருப்பணசாமி கண்ண குத்திடுமோனு இவனுக்கு பயமேயில்லையா.!?அய்யோ சாமி காச எடுக்கறானே'! சக்திக்கு, உதறல் எடுத்தது. முனியிடமும் அவன் எதுவும் கேட்கவில்லை..'சரி நாளைக்கும் இதே மாதிரி செஞ்சா அவன் அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தான் திருடறது தப்பில்லையா?' என ஒரு முடிவோடு கிளம்பினான் சக்தி.
இது எதுவும் தெரியாத முனியப்பன் சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்தான்.
அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சக்தி, "அய்யோ கருப்பா என்னை வுட்டுடு, நான் உன்னட காச எடுக்கல நான் எடுக்கல என்னட கண்ணப் பிடுங்காதே அரிவாளைக் கீழே போடு"னு கத்தினான். அவன் சத்தம் வெளியே வரல. நடுங்கிப் போய் "ஓ…..னு அவன் அழுவற சத்தம் கேட்டு அவனுடைய அம்மா எழுந்து ஓடி வந்தாள்.
"டேய் சத்தி, சத்தி என்னடா கனவு கண்ட இப்படி நடுங்கறே அடேய்,! இதென்னடா ஒண்ணுக்கு கூட இருந்து வச்சிருக்க. அய்யோ, ஏனுங்க இங்க வாங்க, ஒரு நாளையில கட்டலோடு ஒண்ணுக்கு போவமாட்டானே, இவனுக்கு என்னாச்சுனு பாருங்க". அவன் அம்மா போட்டக் கூச்சலில் அவன் அப்பாவும் ஓடி வந்தார்.
சக்தி கொஞ்ச நேரம் திருதிருனு முழிச்சான், பிறகு 'அட, நமக்கு கண்ணு தெரியுது. இதோ அம்மா, அப்பா நிக்கறாங்க. கீழே குனிந்து தன் காலைத் தொட்டுப் பார்த்தான். அப்ப நம்ம கண்ணெ சாமி குத்தல. அவன் எழுந்து சந்தோஷத்தில், 'அய்யா எனக்கு கண்ணு தெரியுது, கண்ணு போகல போகலை'னு கத்தறதைக் கேட்டு அவன் அம்மாவும், அப்பாவும் கவலைப்பட ஆரம்பித்தார்கள்..
"பொழுதான அந்த கருப்பணங் கோவிலுப் பக்கம் போயி ஆட வேண்டானு சொன்னா கேக்கறானா, ஏதோ காத்து கீது அடிச்சிருச்சோ என்னவோ தெரியலையே. அய்யா கருப்பராயா என்னடா புள்ளைய எதுவும் செஞ்சுடாதே, ஆடி மாசம் உனக்கு ஒரு கிடா வெட்டிப் பொங்கல வைக்கிறேன்" மனசுக்குள்ள மருவ ஆரம்பிச்சா அவன் அம்மா.
"ஏனுங்க அந்த மாரியாயி கோவிலு தின்னீரு எடுத்தாந்து நெத்தியில இடுங்க"என்று சொன்னாள். அதன் பிறகு சக்தி நன்றாகத் தூங்கி விட்டான். அவன் எழுந்திரிக்கும் போது மணி எட்டு. 'வெடிஞ்சதும் முனியப்பனைப் பாக்கப் போவலனுல்ல இருந்தேன்! அய்யய்யோ அவன் இந்நேரம் காச எடுத்துட்டு ஓடி இருப்பானே' என படபடத்தான் சக்தி.
'ஆமா, கோவில் தட்டில் இருந்த காசை எடுக்காத என்னட கனவுல வந்த கருப்புசாமி , என் கண்ணெ எதுக்கு எடுக்க வந்துச்சு.?. காசை எடுத்தவன் முனி அவன் கண்ணல்ல எடுக்கணும். அவன் கண்ணு நல்லாத்தானே இருக்கு' என்ற குழப்பம் அவனுக்குத் தீரவில்லை.
அடுத்த நாள் காலையில், நேரமே எழுந்த சக்தி, முனி வீட்டுக்குப் பக்கத்தில் சென்று மறைந்து கொண்டான்.. முனியப்பன் விசிலடித்துக் கொண்டே வீட்டிலிருந்து வெளியே கிளம்பினான். அவன் சென்றதும், சக்தி, முனி அம்மாவிடம் சென்றான்.
பாத்திரம் விலக்கிக் கொண்டிருந்த அவள் கையைப் பிடித்து கொண்டு, " நீங்க எங்கூட வாங்க" என இழுத்தான்.
"ஏஞ்சாமி என்னாச்சு? என்னட கையைப் பிடிச்சிழுத்து எங்க கூட்டிப்போற?"
"நீங்க வாங்க வந்து பாருங்க" என கையைப்பிடித்துக் கொண்டு செல்ல, முனியின் அம்மாவும் ஒன்றும் விளங்காமல் அவன் பின்னால் சென்றாள். அவன் கோவிலுக்கு கூட்டிட்டுப் போனான்.."அங்கே பாருங்க" என்றான் சக்தி.
முனியப்பன் சாமியைக் கும்பிட்டு, தட்டிலிருந்து சரியாக ஐம்பது பைசா மட்டும் பொறுக்கி எடுத்து சோப்பில் போட்டுக் கொண்டு கிளம்புவதைப் பார்த்தாள் முனியின் அம்மா.
"அடேய் கேண பல்லிக்கிரி நாயே", காவக்கர சாமிகிட்டயே கையை வைக்கறீயே இது அடுக்குமாடா? சாமி காசத் திருடித் திங்கறது எவ்வளவு பெரிய பாவம்".. எனச் சொல்லிக் கொண்டே அங்கேயே அடி போட ஆரம்பித்தாள்.அவள் அடித்த அடியில் ஊரே கூடி விட்டது.
சக்தி திருதிருவென முழித்தான். பேர் வருவாங்கனு அவனுக்கும் தெரியல. எல்லோரும் முனியைப் பேசி திட்ட ஆரம்பித்தனர்.
"முளைச்சு மூணு எல விடல, இவனெல்லாம் இப்பவே கோவில் காசத் திருடறானா நாளைக்கு பெரிய கொள்ளக்காரனா வந்து, சாமிச் சிலையைக் கூட திருட வருவானுங்க" என ஒருவர் சொல்லியதும், "ஆமாங்க".. ஆமாம், என ஒரு கூட்டம் ஆமோதித்து தலையாட்டியது.
எல்லோரும் ஆளாளுக்கு ஒன்று பேசுவதைக் கேட்டு பொறுக்கயிலாத முனியப்பன்.. தன் காதைப் பொத்திக் கொண்டு 'எல்லாரும் கொஞ்சம் பேசாம இருங்க' எனக் கத்தினான்.
"ஆமா, சக்தி ஊட்டுல, அவனோட அம்மா தினத்திக்கும் சைக்கிள் ஓட்டிப் பழவ அம்பது பைசா கொடுக்கறாங்க. எங்கம்மாகிட்ட கேட்டேன் காசில்லைனு சொல்லுச்சு. எங்கம்மா தான் நீ எது வேணுணாலும் சாமி கிட்ட கேளுடா, சாமி கொடுக்குணு சொல்லியிருக்கு. அதான் இங்கே சாமிகிட்ட காசு கேட்டு வந்தேன். அதனுடைய தட்டத்தில காசு இருந்தது. எடுத்துக்கிட்டேன் இதிலென்ன தப்புனு?" கேட்க, ஊருச் சனம் எல்லாம் வாயடைத்துப் போனார்கள்.
அதன் பிறகு சக்தியும், முனியப்பனும் பிரிந்து ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். காலம் இப்போது மீண்டும் இருவரையும் இணைத்திருக்கிறது.
"ஆமாம் முனியப்பன் எப்படி இங்கே வந்து சைக்கிள் கடை வச்சே.?"
"அதெல்லாம் ஒரு கதையாச்சுப்பா.சுருக்கமா சொல்லறேன். நீயெல்லாம் டவுனுக்கு படிக்க போயிட்டா. நான் எட்டாவது படிச்சேன். அதுக்கு பிறகு படிக்க வசதியில்லை. அப்பா திடீருனு இறந்துட்டாங்க. அம்மா வூட்டு வேல செஞ்சு காப்பத்துனா. அக்காவுக்கு கல்யாணம் செய்யணுமே. நான் படிக்கறத விட்டுட்டேன். நாம சைக்கிள் வாடகைக்கு எடுத்தோமே அந்த சைக்கிள் கடைக்கு வேலைக்குப் போனேன். தொழிலை நல்லாக் கத்துகிட்டேன். நான் போய் தனியா கடை வச்சுடுவேன் நினைச்சாரோ என்னவோ தெரியல. அந்த சைக்கிள் கடைக்காரர் என்ன நம்பி அவரு பொண்ணை கல்யாணம் கட்டி வச்சுட்டார்.
அங்கேயே தான் இருந்தோம்.கிராமத்திலிருந்து டவுனுக்கு போனா நல்ல தொழில் செய்யலாம். குழந்தைகளையும் டவுனுல படிக்க வைக்கலானு டவுனுக்கு வந்துட்டோம்.
இங்கே வந்ததும் "முனீஷ் சைக்கிள் கடை"னு பேரை மாத்திகிட்டேன்.
"ஆமா, சக்தி நீ என்ன செய்யற?"
"நான் என்ன செய்யறேன். ஆசிரியர் வேலையிலிருந்து ரிட்டையர் ஆகியாச்சு. என்னுடைய மனைவி இப்போ உயிரோடு இல்லை. மகன் பேங்கில வேலை செய்யறான். இந்த டவுனுக்கு மாத்தி இருக்காங்க. அவன் குடும்பத்தோடு நான் இருக்கேன்."
"சரி சக்தி நேரம் இருக்கும் போது இங்கே வா" எப்ப வந்தாலும் நீ மனம் விட்டுப் பேசலாம் என்று முனியப்பன் சொல்ல, புதிய பகுதியில் திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல் தவித்த சக்திக்கு புதிய வெளிச்சம் ஒன்று கிடைத்தது போல் இருந்தது.. பேத்திக்கான சைக்கிளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு மகிழ்வோடு கிளம்பினான்.