நண்பன் அர்ஜுனுடன் விளையாடிக் களைத்துப் போய் வீட்டிற்குள் நுழைந்த ராகுல் வாஷ்பேசினில் கைகளைக் கழுவிக் கொண்டு அப்பாவின் அறைக்குள் நுழைந்தான். அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்த அப்பா, திறந்து வைக்கப்பட்டிருந்த ட்ராலிக்குள்ளிருந்த பழைய செய்தித்தாளை எடுத்துவிட்டு புதிய செய்தித்தாளைப் பரப்பினார். கட்டிலின் மீது நேர்த்தியாக இஸ்திரி செய்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேண்ட்டுகள், ஷர்ட்டுகள்.... வண்ண வண்ண டைகள்....
"ஊருக்கு போறீங்களாப்பா?" திரும்பிப் பார்த்த அப்பா புன்னகைத்து தலையை ஆட்டியபடியே அவன் உயரத்துக்கு குனிந்து மண்டியிட்டார்.
"ஆமாடா செல்லம். மும்பை போறேன்".
‘’ ஏம்பா திடீர்னு?’’
"அங்க எனக்கு கான்ஃபரன்ஸ் இருக்குடா கண்ணு" என்றார் சிரித்த முகத்துடன்.
ராகுலின் முகம் வாடியது. அப்பாவின் கை வாஞ்சையுடன் அவன் கன்னம் தடவியது. ஒரு கணம் கண்களை உற்றுப் பார்த்தவர் அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். பின் எழுந்து நின்று அவனை வாரித் தூக்கிக்கொண்டு அறையின் மூலையில் கிடந்த சோபாவில் அமர்ந்தார்.
அப்பாவின் மீதிருந்து வீசிய மெல்லிய ஆஃப்டர் ஷேவ் லோஷனின் மணம் இதமாய் இருந்தது. அப்படியே தலையை பின்னுக்குத் தள்ளி அப்பாவின் வயிற்றில் சொகுசாக சாய்ந்து கொண்டான்.
"நீங்க ஊருக்குப் போயிட்டா இன்னைக்கு நைட் தூங்கும்போது எனக்கு யாரு கதை சொல்லுவா ....?"
"அம்மா கிட்ட கதை கேளேன்" என்றார் அவன் தலைமுடியை வருடியபடி. அந்த நினைப்பே அச்சம் தருவதாய் இருக்க, "எத்தனை மணிக்குப்பா ஃப்ளைட்?" என்றான் பேச்சை மாற்றியபடி.
"ஒன்பது மணிக்கு. இப்ப ஆறு மணியாகுதா? இன்னும் அரை மணியில கிளம்பிடுவேன்".
சட்டென்று மௌனமானான்.
"பாரு ராகுல்..... இன்னைக்கு வியாழன். நான் மண்டே காலையில இங்கே இருப்பேன். சரியா.....? நீ ஸ்கூலுக்குக் கிளம்புறதுக்குள்ள வந்துடுவேன்".
"நடுவுல எத்தனை நாள் அப்பா?’’ நான் விரல் விட்டு எண்ணினான். "ஐயோ மொத்தமா நாலு ராத்திரிப்பா. அதுவுமில்லாம நாளைக்கு ரம்ஜான். ஸ்கூல் லீவு. அப்புறம் சாட்டர்டே, சண்டே... மொத்தம் மூணு நாள் லீவுப்பா’’ அப்பா பதிலேதும் சொல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
‘’அப்பா... எப்பயுமே சன்டே அன்னைக்கு கார்ல லாங் டிரைவ் கூட்டிட்டுப போவீங்க... நீங்களும், நானும் சைக்கிளிங் போவோம். என்கூட செஸ் விளையாடுறது, பேட்மிண்டன் விளையாட்டு, எல்லாம் கட்" என்றான் சோகத்துடன்.
" டேக் இட் ஈஸி மை பாய்! அடுத்த வாரம் சனிக்கிழமை ஹாஸ்பிடலுக்கு லீவு போட்டுட்டு, உன்கூட வீக் எண்ட்ல ரெண்டு நாள் இருக்கப் போறேன். சரியா....? என்றதும் அப்பாவைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான்.
"ஓ.கே! நான் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சு பேக் பண்றேன். டைம் ஆகுது இல்ல...?" அப்பா அவனை கீழே இறக்கி விட்டார். அப்பாவின் உடைகளுக்கு ஏற்ற வண்ணத்தில் டைகளையும், சாக்ஸ் செட்டுகளும் எடுத்துத் தந்தான்.
உள்ளே வந்த அம்மா, ‘’இந்தாங்க பிரிண்ட் அவுட் எடுத்த ஏர் டிக்கெட். இது கான்ஃபரன்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்’’ என சில பேப்பர்களை நீட்டினாள்.
"அப்பா, ஆதவனோட அப்பா டெய்லி ஈவினிங் அவனை பார்க் கூட்டிட்டுப் போறார்ப்பா.’’
"அவரு ஒரு காலேஜ் ப்ரஃபசஸர். பத்து டு அஞ்சு வேலை பார்த்தா
போதும். சனி, ஞாயிறு லீவு. இங்கே அப்படியா...? உங்க அப்பா ஒரு ஃபேமஸ் சர்ஜன்.
நானும் ஒரு பல் டாக்டர். ரெண்டு பேரும் எப்பவும் பிஸி. ஆதவன் அம்மா வெறும் ஒரு
ஹவுஸ் வைஃப். அவங்க குடும்பத்தோட நம்மள கம்பேர் பண்ணாத ராகுல்...’’ என்றாள் அம்மா
சற்றே கோபத்துடன்.
‘’என்ன
ஷைலு..... எட்டு வயசுப் பையன் கிட்டப் போயி இப்படிப் பேசிக்கிட்டு.... நாம
என்னதான் டாக்டர்ஸா இருந்தாலும் இவனுக்கு அம்மா அப்பா. ஒவ்வொரு பிள்ளையும் பெற்றோர் தன் கூட
கொஞ்ச நேரமாவது இருக்கணும்,
விளையாடணும்னு எதிர்பார்க்கும். அது
கரெக்ட் தானே..?’’
இரவு பத்து மணி. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் ராகுல். அறையின் மூலையில் மேஜை முன் அமர்ந்து லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார் அம்மா. அன்று மாலை நண்பர்களுடன் நன்றாக விளையாடியதில் உடம்பும் கால்களும் வலித்தன. அப்பா இருந்தால் அவர் மீது கால்களைப் போட்டுக்கொண்டு கழுத்தைக் கட்டிக்கொண்டு கதை கேட்டபடியே தூங்கலாம். கதை சொல்றதுல அப்பா பெஸ்ட். நிதானமா, பொறுமையா, அழகா சொல்லுவார். அம்மாவிடம் அது நடக்குமா....?
ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது, அதாவது இரண்டு வருஷத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்பா இதே போல ஒரு நாள் வெளியூர் கிளம்பி விட, இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். ‘எனக்குத் தான் கதை கேக்காம தூக்கம் வராதே. அம்மாவை கதை சொல்ல சொல்லலாமா?’ நினைத்தவுடன் கட்டிலை விட்டு குதித்து இறங்கி, வெளியே ஹாலுக்கு ஓடினான். டி.வியில் வெப் சீரிஸில் ஆழ்ந்திருந்த அம்மாவிடம் நெருங்கி அமர்ந்து, ‘’அம்மா’’ என்று கொஞ்சியபடியே, ஆசையாய் கையைப் பிடித்தான்.
அம்மா முதலில் அவன் புறம் திரும்பவில்லை. இரண்டாவது முறையாக அழைத்ததும், ‘’ என்னடா?’’ என்றாள் சற்றே புருவச் சுளிப்புடன்.
‘’ ஒரு கதை சொல்லுங்கம்மா’’
எழுந்து அலமாரியைத் திறந்து நிறைய படங்கள் போட்ட காமிக்ஸ் புத்தகங்கள் இரண்டை எடுத்துக் கொடுத்து ‘’இந்தா, நீயே படிச்சுக்க. கதை சொல்ற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை’’ என்றாள்.
ஏமாற்றத்துடன் அவற்றை வாங்கி ஆர்வமின்றி புரட்டினான். பத்தே நிமிடங்களில் அலுப்புத் தட்ட புத்தகங்களை சோபாவின் மீது எறிந்து விட்டு மீண்டும் அம்மாவை அணுகினான்.
‘’அம்மா, நீங்களே ஒரு கதை சொல்லுங்க.’’ என முகவாயைப் பிடித்து கொஞ்சியவனின் கையைத் தட்டிவிட்டாள். ‘’அட! என்னடா நீ! சீரிஸ் பார்க்க விடாமல் தொந்தரவு பண்ணிக்கிட்டு..... கதையெல்லாம் ஒண்ணும் கிடையாது. போய்த் தூங்கு முதல்ல. நல்லா பழக்கி வெச்சிருக்காரு உங்கப்பா...’’ என கோபமாக அதட்டியதும் அழுது கொண்டே தூங்கிப் போனான். அதன் பின் அம்மாவிடம் மறந்தும் கூட கதை சொல்லச் சொல்லிக் கேட்டதில்லை.
அந்த சம்பவம் இப்போது நினைவிற்கு வந்து ‘’இன்னும் மூணு நாளைக்கு இதே போல கதை கேட்காமலேயே தூங்க வேண்டியது தானா....? ஏக்கத்துடன் விசும்பிக் கொண்டே குப்புறப்படுத்தான்.
‘’ராகுல் கண்ணு.. எந்திரிப்பா..’’ மென்மையான கன்னங்களில் சொரசொரத்த
கைகள் வருட, எரிச்சலுடன் கண்களைத் திறந்தான். எதிரில் வேலைக்கார ஆயா!
‘’மணி பத்தாகப் போகுது. எந்திரிச்சு பல்லு விளக்கிட்டு டிபனை சாப்பிடுப்பா... அம்மா இன்னும் செத்த நேரத்தில போனைப் போட்டு கேப்பாங்க.... இன்னும் எம்புள்ளைக்கு சாப்பாடு குடுக்காம என்ன பண்றேன்னு கோவிச்சுக்குவாங்க தம்பி....’’
சட்டென எழுந்து அமர்ந்தான் ராகுல். பாவம் ஆயா, என்னால் திட்டு வாங்க வேண்டாம். வேகமாய் குளித்து, சாப்பிட்டு விட்டு விளையாடலாம் என்று நினைக்கும் போதே யாருடன் விளையாடுவது? என்ற கேள்வி தோன்றியது. ஃபிரண்ட்ஸ் எல்லோரும் மூணு நாள் லீவை என்ஜாய் பண்ண ஊருக்குப் போயிருக்கிறாங்களே என்று நினைக்கையிலேயே மனம் சோர்ந்தது.
அன்று மாலை வரை எதுவும் செய்யப் பிடிக்காமல் சும்மா தோட்டத்தை சுற்றி வந்தான். கொஞ்ச நேரம் டிவி பார்த்தான். ‘’ சே.. எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ இருந்தா நல்லா இருந்திருக்கும்’’. அம்மாவிடம் ஒரு நாள் கேட்டதற்கு, ‘’போடா... உன்னை வளர்க்கவே படு சிரமமாக இருக்கு. இதில இன்னொன்னு வேறயா...?’’ என்று எரிச்சலோடு சொன்னது ஞாபகம் வந்தது.
இரவு ஏழு மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து களைத்துப் போன முகத்துடன்
வந்தாள் அம்மா. ‘’நிறைய பேஷண்ட்டுகளை பார்த்திருப்பாங்க போல. அவங்க சொத்தைப் பல்லை
டெஸ்ட் செய்து, கிளீன் பண்ணி... ‘’உவ்வே, வாயிலிருந்து நாத்தம் வருமே... பாவம், கஷ்டமான
வேலை தான்’’ அம்மாவின் மேல் பரிதாபம் எழுந்தது.
தன் அருகில் செல்போனை வைத்து வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டு அம்மா சாப்பிட, ராகுல் ஒற்றை சப்பாத்தியுடன் எழுந்து விட்டான். டிராயிங் நோட்டை எடுத்து வண்ணம் தீட்ட ஆரம்பித்தான்.
நான்காம் பக்கத்தில் இருந்த ஒரு நாய்க்குட்டியின் படம் அவனைக் கவர்ந்தது. ‘’சே! எவ்வளவு அழகு! இந்த மாதிரி நாய்க்குட்டி நிஜத்தில இருந்தா, அது கூடவாவது விளையாடுவேன்’’ என்ற எண்ணம் தோன்ற, ஓடிப்போய் கப்போர்டைத் திறந்து அதிலிருந்து புசுபுசு உடலுடன் இருந்த ஒரு நாய்க்குட்டி பொம்மையை எடுத்தான். அதனுடன் விளையாடத் தொடங்கினான்.
சிறிது நேரம் கழித்து, ‘’ ராகுல் கண்ணா, போய்த் தூங்கு. மணி பத்தாச்சு பாரு’’ அம்மா குரல் கொடுக்க, படுக்கையில் படுத்து, அந்த நாய் பொம்மையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
‘’ராகுல் செல்லம்,. எந்திரி’
’இது என்ன?’’ முகத்தை தடவிய ஆயாவின் கைகள் சொரசொரப்பாக இல்லாமல் மெத்தென்று இவ்வளவு சாஃப்ட்டா இருக்கு? மெல்லிய நறுமணம் மூக்கை வருட, கண்களைத் திறந்தான்.
‘’அட!’’ எதிரில் நிற்கும் உருவம் பளிச்சென்று தெரிந்தாலும், மீண்டும் கண்களை சுருக்கி பார்க்க, முகமெல்லாம் சிரிப்பாக அம்மா.
‘’ குட்மார்னிங் ராகுல். பிரஷ் பண்ணிட்டு அப்படியே குளிச்சிட்டு வா. நாம இப்ப வெளில கிளம்பறோம்’’
ஆர்வம் தொற்றிக் கொள்ள, ‘’எங்கேம்மா?’’ அவசரமாக எழுந்து அமர்ந்தான்.
‘’அது சர்ப்ரைஸ். நீ க்விக்கா ரெடியாகு’’
பாத்ரூமை நோக்கி குதித்தோடி, பத்தே நிமிடங்களில் குளித்து, அதைவிட விரைவாக டிபனை சாப்பிட்டு, ஸ்கூட்டியில் அம்மாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு போகையில், ‘’ ஊ, ஜாலி, ஜாலி’’ உற்சாகத்தில் திளைத்தது அவன் மனது.
சில நிமிடங்களில் வண்டி ஒரு கடையின் முன் நின்றது. ‘’அட, இது பெட் ஷாப் இல்லை? இங்க எதுக்கு அம்மா கூட்டிட்டு வந்தாங்கனு தெரியலையே’ என வியந்தவனை’, ‘’இதைப் பாரு, இதை வாங்கலாமா ?’’ அம்மா சுட்டிக்காட்டிய போது இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான்.
’’வாவ்! ஃபண்டாஸ்டிக்!’’ வெண்ணிலா ஐஸ்கிரீம் கலரில் புசு புசுவென வெள்ளைப் பந்து போல அழகான பாமரேனியன் நாய்க்குட்டி.
சிறிய மூங்கில் கூடையில் வைத்து அதை வீட்டுக்கு கொண்டுவந்த போது வானத்தில் மிதப்பது போல இருந்தது. பட்டன் கண்களுடன், குட்டி வாலுடன், மெத்து மெத்தென்று மென்மையாக, சின்னக் குரலில் மெலிதாய் குரைத்தபடி அவனுடன் விளையாட ஆரம்பித்து விட்டான் அந்த புது ஃப்ரெண்ட் ‘மிட்டு’. அவன் போகுமிடமெல்லாம் பின்னாலேயே வர, குஷியாகிவிட்டது ராகுலுக்கு.
இரவு தூக்கம் வரும் வரை அதனுடன் விளையாடி விட்டு, கட்டில் காலடியில்
மிட்டுவை ஒரு கார்ப்பெட்டில் படுக்க வைத்தான். பெட்டில் படுத்து, போர்வையை கழுத்து
வரை போர்த்திக்கொண்டு, கண்களை மூடினான்.
மெத்தென்ற கைகள், தன் மேல் பட கண்ணைத் திறந்தான். படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து. அவன் கால்களை எடுத்து தன் மடி மீது போட்டுக் கொண்டு, ‘’மிட்டுவோட விளையாடினது அசதியா இருக்கும்ல.” என்றபடி கால்களை இதமாக பிடித்து விட ஆரம்பித்தாள் அம்மா. ‘’ நான் ஒரு கதை சொல்லட்டா?’’