வள்ளுவர் அழைத்ததும் வாசுகி வாளியை அப்படியே கிணற்றுக்குள் விட்டு விட்டு வந்ததும் அவர் திரும்பி வரும் நேரம் வரை வாளி கிணற்றுக்குள் விழாமல் அங்கேயே நின்றதும்....
இருங்க இது பெண் அடிமைத்தனம் அல்லவா என எங்கிருந்தோ ஒரு கருத்து கிளம்ப அது வள்ளுவன் வழங்கிய வாழ்வியல் மீது ஒரு மாற்றுக்கருத்தை உண்டாக்கியது. திருவள்ளுவர் பெண் கல்வி, பெண்உரிமை, மறுமணம், விதவை திருமணம் பற்றி ஒன்றும் கூறவில்லையா? என்றும் சிந்திக்கத் தோன்றியது.
எனக்குத் தெரிந்த குழுமங்களில், வலைத்தளங்களில்,எனக்குத் தெரிந்த தமிழார்வம் கொண்ட நண்பர்களிடம், எழுத்தாளர்களிடம், பேச்சாளர்களிடம் மற்றும் அனைத்து அறிவாளிகளிடம் எனக்கு தெரிந்தவரை உரையாடினேன். யாரேனும் ஒருவர் எனக்கு பதில் அளித்து விட மாட்டாரா?என் ஐயத்தை தீர்த்து விடமாட்டாரா? என்று திருவிளையாடலில் வரும் பாண்டிய மன்னனை போல புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஆம் திருவள்ளுவர் பெண் உரிமை பற்றி விதவை மறுமணம் பற்றி பெரிதாக திருக்குறளில் பெரிதாக ஒன்றும் பேசிவிடவில்லை. எழுதிவிடவில்லை.பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் தெளிவாக கூறி இருக்கிறார். பெண்ணுரிமை மறுமணம்,உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை தீண்ட வேண்டுமென்றால் நீங்கள் பெரியார், அம்பேத்கர், ராஜா ராம் மோகன் ராய்...என்று நண்பர்கள் பலரும் பல ஆளுமைகளைப் பற்றி பகிர்ந்தனர்.
அடிப்படையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் சாராமல் இருந்தாலும் அம்பேத்கரை, பெரியாரை,நேதாஜியை இன்னமும் பல தலைமைகளை எந்த பாகுபாடும் இன்றி தீவிரமாக ஆதரிக்க மட்டுமல்ல காதலிக்கவே செய்யும் மனப்பாங்கு அடிப்படையில் உண்டு என்பதால் இது போன்ற தலைவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளுக்கு அங்கங்கே ஆட்சேபம் தெரிவித்து சில நண்பர்களையும் கூட அவ்வப்போது லேசாக பகைத்துக் கொள்வதும் பிறகு மீண்டும் சேர்ந்து கொள்வதும் வாடிக்கைதான்.
விரும்பும் தலைமைகளுக்கே இந்நிலை என்றால் தாய்த் தமிழுக்கு...தமிழைப் பெயரோடு மட்டுமல்ல, உயிரோடு கலந்து வைத்திருப்பதாலும், வள்ளுவனைத் தமிழோடுப் பின்னி பிணைந்து பெருமை என வைத்திருப்பதாலும் சற்று மன அமைதிக்கு மாற்று தொடர்ந்து கொண்டே இருந்தது.
சில நாட்களில் தாய்க்கு ஒரு பழி நேர்ந்தால் மகர்கில்லையோ? அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ...? வேறுக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா...உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை.... உனக்கன்றி எனக்கில்லை... என்று பாடும் நிலைக்கு அல்ல, கதறும் நிலைக்கே சென்று விட்டேன்…….
இந்நிலையில் ஒரு கருத்தரங்கு (It is very easy to learn Muhammadian law எனும் தலைப்பில்) மாண்புமிகு நீதிபதி பி.டி. ஆஷா மற்றும் மூத்த வழக்குரைஞர் ஆறுமுகம் அவர்கள் பங்கேற்றதை கேட்க நேர்ந்தது. அவர் உரையின் இடையே ஹிஜாப் அணிவதைப் பற்றியும் அதில் பெண்களின் உரிமை பற்றியும் நபிகள் நாயகம் தொடங்கி பல்வேறு கருத்துகளை முன்னாள் பாரத பிரதமர்கள் நேரு மற்றும் ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைமைகளை குறிப்பிட்டு கான்ஸ்டியூசன் அமன்ட்மெண்ட் மற்றும் பல கருத்துகளைப் பற்றியெல்லாம் பேசும் போது தமிழனுக்கு இந்த பிரச்சனை வரும்பொழுது தமிழன் விடை தேடும் இடம் திருக்குறள் எனக் குறிப்பிட்டு
குறள் 57ல்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்நிறைகாக்கும் காப்பே தலை.
என்னும் குறளில் ஒரு பெண் தன்னை எப்படி காத்துக்கொள்ள வேண்டும்.தன் வாழ்க்கை முறை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும். எந்தெந்த அளவை எந்தெந்த விஷயங்களில் தன் வாழ்க்கையை எப்படி தீர்மானித்துக் கொள்ளவதென்பதை அந்த பெண் தான் முடிவு செய்ய வேண்டும் அது தான் சிறந்த முடிவாக இருக்குமேயன்றி அவள் சார்ந்து இருக்கும் சமூகமோ குடும்பமோ சமுதாயமோ அல்லது இன்னபிற காரணிகளோ அல்ல என்பதை சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் எனக் குறிப்பிடுவதையும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை எனக்குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
கருத்தரங்கில் யார் எதை உள்ளீடாக எடுத்துக் கொண்டார்களோ எனக்கு தெரயாது. ஆனால் அவர் சொல்லி முடித்த அந்த வினாடி எனக்கு மெய் சிலிர்த்தது. பின்னிட்டு அதே அதிகாரத்தில் இக்குறளுக்கு முன்னும் பின்னும் சில குறள்கள் எமக்கு புதிய விளக்கங்களுக்கு வழி வகுத்தன. அவற்றை இந்த கட்டுரை மூலமாக உங்கள் பார்வைக்கும் செயலுக்குமே விட்டுவிடுகிறேன். பற்ற வைத்த ஒரு தீக்குச்சியாக உங்கள் செயல் வனமாக...
குறளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விளக்கவுரைகளை அப்படியே எடுத்துக் கொள்வதென்பது இனி அவரவர் விருப்பமாக இருக்கட்டும்.
இரு வரிகள் இன்னமும் பல ஆயிரம் வருடங்கள் கடந்து சென்றாலும்...இனியும் பலர் முன்னின்று ஆய்வு செய்து விளக்கவுரை எழுதலாம் எனத்தோன்றியது.
வள்ளுவர் தன் எழுத்தாணி கொண்டு சீத்தலைச்சாத்தனார் போல தன் தலையில் அல்ல... என் தலையில் ஒரு குத்து குத்தி இதைப் புரிந்து கொள்ளாத உனக்கன்றி தமிழுக்கில்லை பழி என என்னிடம் உரைத்தது போல ஒரு உணர்வு இருந்தது. அப்போது வாளியில் தொடங்கியது இப்போது எழுத்தாணியில் முடிந்தது.
புரிந்தது.
எழுத்தாணியில் வாங்கிய குத்துக்கு தலையை தேய்த்துக் கொண்டே தலை குனியும் பொழுதும் எம்மொழி வள்ளுவம் என்னும் பெருமையுடன் உணர்வுகளால் தலை நிமிர்ந்த வண்ணம் வள்ளுவன் பாதம் பணிந்து இது போதும் என்ற மன நிறைவுடன் கட்டுரையின் நிறைவில் நான்.
No comments:
Post a Comment