இரவு முழுவதும் சிறுநீரகப் பையில் அடைந்து கிடந்த யூரின், வெளியே வர முயற்சிக்கும் பொழுது, விடியற்காலை தூக்கத்தை கலைத்திருந்தது.
யூரினை அடக்க முடியாமல் அரை விழிப்பு நிலையில் எழுந்து பாத்ரூம் கதவை திறந்து அறைந்து சாத்தி விட்டு உட்காரும் போது, சற்றும் வெட்கமில்லாமல் எட்டிக் குதித்து விழுந்தது என்னுடைய பரம எதிரி. எனக்கு ஏற்பட்ட பயத்தில் நாக்கு உலர்ந்து, யூரினை அடக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் தவித்து கதவை திறந்து வெளியே ஓடி வந்து 'அம்மா,அம்மா' என்று சத்தம் போட்டுத் திரும்பி பார்த்தேன். அவள் படுத்திருந்த இடம் இருள் சூழ்ந்து, அமைதியாக இருந்தது.
கண்ணீரை அடக்கி கொண்டு படுக்கையறைக்குச் சென்ற போது கணவரும், குழந்தையும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
அம்மா உயிரோடிருந்தால் இந்நேரம் எழுந்து வந்து என் பரம எதிரியான பல்லியை விரட்டி இருப்பாள். அவள் பல்லியை எப்போதும் அடித்துக் கொல்ல மாட்டாள்.
'அது பாட்டுக்கு ஊறிட்டு போகுது. பல்லியை ஆண்டவன் மனிதனோடு இருக்க தான் படைச்சு இருக்கான் அது எங்கே போகும்?' எனக் கேள்வி கேட்பாள்.
"ஏம்மா, பல்லி சாப்பாட்டில் விழுந்தால் விஷம்னு சொல்லுறாங்க. பள்ளிக்கூடத்தில் மதிய சாப்பாடு செய்யறப்ப சாப்பாட்டுப் பாத்திரத்தில்,பல்லி விழுந்து எத்தனை புள்ளைங்க மயங்கிப் போறாங்க! நீ என்னடானா அந்த பல்லிக்கு இப்படி வரிந்து கட்டிட்டுப் பேசற!"
"ஹாரி மில்லர்னு ஒருவர் பல்லியை துண்டு போட்டு மிளகுப் பொடி ,உப்பு போட்டு சாப்பிட்டு காட்டறேன் சவால் விட்டதாக நானும் படிச்சு இருக்கேன். அந்த பல்லிபாட்டுக்கு சுவத்துல ஊறிட்டுப் போவுது உன்னை என்ன செய்யுது போ வேலையைப் பாரு' என திருப்பி பேசமுடியாதபடி செய்து விடுவாள்.
இரவு நேரங்களில் பூஜை அறைக்கு பக்கத்தில் சொச்,சொச் என பல்லி கத்தும். அப்போது 'கண்ணு அந்த இடத்தில் இந்நேரத்துக்கு பல்லி கத்தினா ஏதாவது கெட்ட காரியம் வந்து சேரும். விடிஞ்சா என்ன வரப்போவுதோ! என அம்மா சொல்லும் போது, "உன்னுடைய மூட நம்பிக்கைக்கு அளவே இல்லம்மா. அது தன்னுடைய இணையை அழைக்கவும், பசிக்காகவும் கத்துது. உன் பல்லி சயனத்தை தூக்கி தூரப்போடு" என அம்மாவிடம் சொல்லிச் சண்டை போட்ட இரண்டு நாளில் அம்மா சொன்ன மாதிரியே இறப்பு செய்தி வந்து சேரும்.
'நான் அப்பவே சொன்னேனில்ல பல்லி கத்துவது நல்லதுக்கில்லைனு, பசிக்கு கத்துதாம் கிழவி பேச்சு கிண்ணாரக்காரனுக்கு ஏறுமா'னு! பேசியபடியே, அவங்க நம்பிக்கை ஜெயித்தது நினைத்து ஒரு பார்வையை வீசும் போது எனக்குள் எரிச்சல் வரும்.
எனக்குள்ளும் நாளைடைவில் பல்லி கத்தினால் ஏதாவது வந்துடுமோ என்ற பயத்தையும் அம்மா கொடுத்து விட்டாள். எண்ணங்கள் தானே எந்த நிகழ்வையும் தீர்மானம் செய்கிறது.
அம்மா, அப்பா இறந்து போனதிலிருந்தே மிகவும் மாறிப் போனாள். எறும்புகள் வீட்டுக்குள் வரிசையாய் ஊர்ந்து சென்றாலும் கூட, அந்த இடத்தில் எறும்பால் அவளுக்கு ஏதாவது பாதிப்பு இருந்தால் தான் எறும்பை கொல்ல மருந்து போடுவாள். பாதிப்பு இல்லை என்றால் 'அட, அது பாட்டுக்கு எங்கேயோ போயிட்டு போவுது. வரிசையாய் எவ்வளவு அழகா ஊர்ந்து போகுது..அந்த வரிசையை எப்படிக் கலைப்பது' எனச் சொல்வதை கேட்கும் போது எனக்கு கோபம் வரும்.
ஒரு நாள் உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். காலையில் எழுந்து அடுப்பில் சூடு தண்ணீர் வைக்கப் போன உறவினர், பல்லி ஒன்று அடுப்புக்கடியில் இருந்து ஊர்ந்து செல்வதைப் பார்த்து, அவர் போட்ட கூச்சலில் தூங்கிட்டு இருந்தவர்கள் எல்லோரும் பயந்து ஓடி வந்து, 'என்ன !என்ன! என்று கேட்கும் போது, அவருக்கு பேச நா எழாமல் அங்கே, அங்கே ப…ப..ப..பல்லி' எனக் கையை காட்டவும் எல்லோருக்கும் சிரிப்பு. எங்கம்மாவோ, "கண்ணு எங்க வீட்டு அடுப்படியில் பல்லி எங்க வேணாலுமிருக்கும். நாம தான் பார்த்துப் போகணும்," என அம்மா சாதாரணமாக சொல்லிட்டு போவதை கேட்டு, என்னிடம் வந்த உறவினர் கண்ணு அம்மா சொல்லிட்டுப் போறாங்க பல்லி வராம இருக்கிறதுக்கு சுவத்தில ஒட்டறதுக்கு பட்டனாட்டம் கடையில விக்கறாங்க. அதை வாங்கியாந்து ஒட்டு பல்லி வராது'னு சொன்னார். நான் அடுத்த நாளே கடைக்குச் சென்று வாங்கி வந்து சுவற்றில் ஒட்டவும், வெள்ளையாய் அங்கங்கே ரேடியோ பட்டனாட்டம் காட்சியளித்தது.
அடுத்த நாள் காலையில் பட்டன் வைத்த இடத்தை பல்லி கடந்து போவதை பார்த்து எனக்கோ வெறுப்பு. அம்மாவுக்கு ஒரே சிரிப்பு.
அதன் பிறகு சில நேரங்களில் கோபம் வந்து ஹிட் எடுத்து பல்லி மீது ஸ்ப்ரே செய்து, மயங்க வைத்து முறத்தில் போட்டு தூக்கிப் போட ஆரம்பித்தேன்.
அப்போதும் அம்மா "ஏங்கண்ணு வேண்டாத வேலை. அது உன்னை என்ன செய்யுது ஆள் நடமாட்டம் இருந்தால் வராது.
நேத்து பொழுதோட வாசல்படி மேல் உட்கார்ந்து இருந்தேன் அப்போ என் முதுகில் பல்லி விழுந்து ஓடுது. எனக்கு ஒண்ணுமே ஆகலை." இதை பெருமையாய் சொல்லி பூரித்து போனாள் அம்மா.
ஒரு நாள் மாலை நேரத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போது "கண்ணு, நம்ம வீட்டுல இத்தனை பல்லி இருக்கு ஒரு மரப்பல்லியைக் கூட காணோம் அது வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க என ஏக்கத்துடன் சொன்னாள். வரவர இந்த பல்லிகளோட தொந்தரவு தாங்கமுடியல என நான் சொல்லும் போது, பல்லி வீட்டில் இல்லனு வீட்டையே வித்துட்டு போன கதை எல்லாம் உலகத்தில நடக்குது நம்ம ஊட்டுல பல்லி இருக்கேனு சந்தோஷப்படு என்பாள்.
இவ்வளவு இரக்கம் படைத்த அம்மாவை, ஆண்டவன் எங்களுடன் அதிக நாட்கள் வாழ விடவில்லை. சின்ன உயிரைக் கூட நேசித்த அவளை இறைவன் அதிகம் நேசித்து விட்டான் போலும் விரைவில் எங்களிடமிருந்து அழைத்துக் கொண்டான்.
அம்மா படுத்திருந்த கட்டிலை ஒரு நாள் வெளியே எடுத்து வந்து வெயிலில் போட்ட போது, அம்மா ஆசையாய் கேட்ட மரப்பல்லி கட்டிலில் இருந்து விழுந்து ஓடியது.
'அம்மா..அம்மா..அம்மா...ம்மாம்
"ஏண்டாமா கத்தற".
"ஒண்ணுக்கு வருதுமா".
ஐந்து வயது மகளை அழைத்துக் கொண்டு பாத்ரூம் கதவை பயத்துடன் திறந்தேன். நல்ல வேலை பல்லி இல்லை.
அவளை யூரின் இருக்க வைத்து, கதவை சாத்தும் போது மகளின் காலுக்கடியில் பல்லி ஓடவும் நான் சத்தமிட்டேன். 'அடச் சே ! இந்தப் பல்லியைப்
பார்த்தா கத்தற...நீ பயந்தாங் கொள்ளியம்மா ஹ..ஹ..ஹ…ஹ என என் மகள் சிரித்த போது.
என் அம்மா என்னை கூப்பிட்டுச் சிரிப்பது போல் நெகிழ்ந்து நின்றேன்.