Wednesday, May 1, 2024

எனது சிறுவயது ஞாபகங்களிலிருந்து... - யோகாசக்தி மீனா

  


ரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டு விடுவார்கள். வெயில் தகித்தாலும் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், அன்னதானம், பாணக்கம் என தூள் பறக்கும். 


முதல் 10 நாட்களும் தினமும் மாலை 5 மணி அளவில் மதுரை மணக்கும் உருட்டுக்கட்டு மல்லிகைப் பூ வாங்கி ரெட்டை ஜடை பின்னலலில் வைத்துக்கொண்டு அக்கம் பக்கம் அனைவரும் சேர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவிற்கும் மாட வீதி உலாக்களுக்கும் சென்று வருவோம். 

அப்போது பெரியவர்கள் கொடுக்கும் திருவிழாக் காசு உண்டியலில் சேர்த்து வைப்போம். 

அத்தை, சித்தப்பா, பெரியப்பா, மாமா என உறவினர்கள் கட்டாயம் வீட்டில் இருப்பார்கள். விளையாட்டுக்குப் பஞ்சமே இல்லை. 

ஆஞ்சநேயர் வேடமிட்டு தண்ணீர் குடுவைகளில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பார்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும். இதுவும் ஒருவகை வேண்டுதல் தான்.

பட்டாபிஷேகத்தன்று மீனாட்சி அம்மன் செங்கோல் வாங்கி கம்பீரமாக வரும் அழகே அழகு. அடுத்த ஆறு மாதம் மீனாட்சி அம்மன் ஆட்சி.

ஒட்டகங்கள் குதிரைகளின் ஒய்யார அணிவகுப்பு, கோலாட்டம் , மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் என கணக்கில் அடங்கா கலைஞர்கள் பங்கு பெறுவர். அது மட்டுமா?. எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு முருகர் போல , மீனாட்சி அம்மன் போல, கருப்பர் போல, அழகர் போல, பெருமாள் போல வேடமிட்டு திருவிழாவிற்கு அழைத்து வருகிறேன் என்று வேண்டிக் கொள்பவர்களும் உண்டு. குழந்தைகள் மீனாட்சி அம்மன் போல் வேடமிட்டு உலா வருவதைக் காண கண் கோடி வேண்டும்.

திருக்கல்யாணத்திற்கு தங்கள் வீட்டு விருந்துக்கு காய் நறுக்குவது போல் அனைவரும் முதல் நாள் அருவாமனை கத்தி எல்லாம் எடுத்துக் கொண்டு கோயிலில் போய் காய் நறுக்கிக் கொடுப்பார்கள்.

திருக்கல்யாணத்திற்கு பாஸ் வாங்கி அம்மாக்கள் கட்டாயம் சென்று விடுவார்கள். பிரம்மாண்டமான திருக்கல்யாண விருந்து அமர்க்களப்படும். அன்றிரவே பூப்பல்லாக்கில் சாமி ஊர்வலம். அதிகாலை தேரோட்டத்திற்கு நசுங்காமல் சென்று திரும்பி வருவது பெரும் சாமர்த்தியம். 

அதுவரையில் கள்ளழகர் நிதானமாக அழகர் மலையிலிருந்து இறங்கி அன்போடு அழைக்கும் பக்தர்கள் வீட்டுக்கும் மண்டகப்பிடிக்கும்(மண்டபம்) எல்லாம் சென்று விருந்தாடி விட்டு எதிர் சேவை முடித்து வைகை ஆற்றில் இறங்கும் பொழுது திருமணம் ஏற்கனவே முடிந்த செய்தியை கேட்டு கோபித்துக் கொண்டு கிளம்பி விடுவார். கள்ளழகர் எந்த வண்ணப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குகிறார் என்பதைப் பொறுத்து அந்த ஆண்டு எப்படி செழிப்பாக இருக்கும் என்பதைக் கணிப்பர்.

" வாராரு வாராரு அழகர் வாராருருரு" என்ற குரல் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம் மதுரையில். 

" வேட்டு சத்தம் கேட்டுருச்சு..சாமி வந்துருச்சு " என்று அக்கம் பக்கம் குரல் கேட்டவுடன் அடுத்த நொடி ஓடிச் சென்று வீட்டின் அருகே தங்க குதிரையில் கொள்ளை அழகுடன் வரும் கள்ளழகரை கண்களில் நிரப்பிக் கொண்டால் தான் பிறவிப் பயன் கிட்டும். 

சர்க்கரைப் பிரசாதங்களை வாங்கிக்கொண்டு அழகர் பின்னாலே கிளம்பி விடுவோம். அவரைச் சுற்றி சுற்றி அங்கங்கு சென்று தரிசித்து விட்டுத்தான் வீடு திரும்புவது வழக்கம். 

வண்டியூரில் இருக்கும் நட்புக்கள் அவர்கள் பகுதியில் இன்று அழகர் தங்குவதால் வீட்டிற்கு அழைப்பார்கள். அன்றுதான் அங்கு சிவராத்திரி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அன்னதானம் என்று ஒரே களைக்கட்டும். 

மறுநாள் கிளம்பி சேஷ வாகனத்தில் அழகர் மலைக்கு புறப்பட்டு விடுவார். அவரை அனுப்பி வைத்து விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார்கள். 

அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான திருவிழா. அடுத்த இரண்டு வாரங்கள் ஊரிலிருந்து யாருக்கு பேசினாலும் 
" திருவிழாவுக்கு எப்ப வர? " "இன்னுமா கிளம்பல" என்பதுதான் முதல் கேள்வி.

இன்றளவிலும் பெரிதாக எதுவுமே மாறவில்லை. 

சித்திரை கொடி பறக்கும்
கத்திரி வெயில் அடிக்கும்
மதுரை அழகு மதுரை

சுத்தியும் சனம் இருக்கும்
முத்திரை பதிக்க வரும்
குதிரை அழகர் குதிரை

இதுவும் திருவிழாவை குறிக்கும் ஒரு பாடல் தான். 

உங்கள் திருவிழா அனுபவங்களைப் பற்றிப் பகிரலாமே. படிக்க ஆவலுடன் காத்திருப்போம்!

- யோகாசக்தி மீனா 

1 comment:

  1. அழகர் திருவிழாவை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அங்கே எவ்வளவு மகிழ்ச்சியான மனநிலையில் மக்கள் இருப்பார்கள்..ஒரு முறை நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என்று இருந்த நிலையில், உங்கள் கட்டுரை வாசித்த போது உங்கள் ஊரின் திருவிழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி..சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...