Wednesday, May 1, 2024

பவானி2 நொய்யல் - காலிங்கராயன் தடம் 10 - க்ருஷ்

 


காவிரியில் இருந்து காங்கேயன்பாளையம் ஊர் கடந்து, அப்படியே கரையில் செல்லாமல் நேராக சென்றால் சாவடிப்பாளையம் பேருந்து நிறுத்தம். அந்தப் பாதையில் செல்லாமல், மீண்டும் காலிங்கராயன் கரையில் தொடர்ந்தோம்.  அடுத்த முக்கியமான இடம் சாவடிப்பாளையம் தாண்டி சற்று தொலைவில் சாவடிப்பாளையம்-பஞ்சலிங்கபுரம் நடுவில்.  அது ஈரோடு-கரூர் நெடுஞ்சாலை, ஈரோடு-கரூர் ரயில் பாதை, மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் மூன்றும் ஓரிடத்தில் அருகருகே இணையாக செல்லுமிடம்.  காலிங்கராயன் எனக்கு முதன்முதலில் அறிமுகமான இடம் இந்த இடமாகத்தான் இருக்கும்.  ஈரோடு-கரூர் சாலையில் இருந்து மொடக்குறிச்சி செல்ல ரயில் தண்டவாளத்தின் அடியில் ஒரு நுழைவு பாலம் இருக்கும். 


மழைக் காலங்களில் அந்த பாலத்தின் அடியில் எப்பொழுதும் தண்ணீர் ஓடை போல ஒரு அடிக்கு மேல் ஓடும்.  அதிலும் நாங்கள் வண்டியில் வருவோம்.  வண்டி சரியாக நடு தண்ணீரில் நடு பாலத்தின் அடியில் சைலன்சரில் நீர் புகுந்து நின்றுவிடும். இறங்கி தள்ளு தள்ளு தான். இன்று அந்த இடத்தில் எஸ் கே எம் ஒரு தொடர்வண்டி நிறுத்தத்தை சரக்கு ஏற்ற இறக்க ஏற்படுத்தி உள்ளார்.  இந்த ஏரியாவின் வளர்ச்சியில் அவரின் பங்கு நிறைய. பாலத்தின் இடதுபுறம் சென்றால் ஒரு கோசாலை உள்ளது.   ஈரோட்டின் வடக்கத்திய தொழிலதிபர்களால் உருவாக்கப்பட்ட இடம். இதுவும் என் சிறுவயதில் இல்லை.   இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து ரக மாடுகளும் உள்ளது என்றார்கள்.


மீண்டும் பயணத்துக்கு வருவோம்.   ஓரிடத்தில் பெரிய ஆலமரம் ஒன்று வாய்க்காலின் அந்தப்புறம் இருந்தது.  அந்த இடத்தில் வாய்க்காலைத் தாண்ட ஒரு பாலம் இருந்ததால் நாங்கள் அந்த ஆலமரத்தின் அருகில் சென்றோம்.   விழுதுகள் எங்களை ஊஞ்சல் ஆட வா வா என அழைதத்து.  அருகில் வாய்க்கால் ஆலமரத்து நிழல்.  இந்த வெயிலுக்கு வாய்க்காலில் குதித்துவிட்டு இந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருப்பது எவ்வளவு மகிழ்வாக இருக்கும்? அதனை ஒட்டியே ஒரு கதிரடிக்கும் களம்.  ’இந்த இடம் கூட அழகாக உள்ளது. மக்களுக்கு ஒரு அவுட்டிங் போல இங்கு புத்தகம் வெளியிடலாமா?’ என பேசிக்கொண்டே கிளம்பினோம்.  


அடுத்து பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலை வாய்க்காலில் குறுக்கிட்டது. இந்த இடத்தில் ஒரு சிறிய மலரும் நினைவுகள் வந்து சென்றது.  காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுத்துக் கொண்டு செல்லும் பொழுது குறுக்கிடும்  இந்த இடத்தைப் பற்றி #காவிரி2தேம்ஸ் நூலில் விளக்கமாக எழுதி இருப்பேன்.  ஒரு கல் பாலம் அதனைக் கடந்து செல்ல உதவும். அந்தக் கல்பாலத்திலிருந்து சிறுமிகள் சிறுவர்கள் வாய்க்காலில் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  நமக்கே குதித்து விளையாட தோன்றும் போது, சிறுவர்களுக்கு அங்கிருந்து செல்லவே தோன்றாது.  


இன்று அது புதிய கான்ங்ரீட் பாலமாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தது.  அதற்கு சற்று தள்ளி ஒரு நெல் அறுவடை செய்யும் களம், இப்பொழுது பாழடைந்து கிடந்தது.   


காலிங்கராயன் வாய்க்கால் இந்தப்பகுதியில் சற்று அகன்று இருந்தது. கரையின் இடதுபுறம் வயல்வெளிகள். தூரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளத்தில் காவிரி.  காலிங்கராயன் தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆன நிலையில் இருந்ததால் அப்பொழுதுதான் நாற்றங்கால் தயார் செய்துகொண்டு இருந்தார்கள்.  நாற்று நட்டுக் கொண்டு சற்று பசுமையாக இருந்தது.  அங்கங்கு மஞ்சள்.  ரசித்துக்கொண்டு விரைவாக சென்று கொண்டு இருந்தோம்.  


பஞ்சலிங்கபுரத்தை அடுத்து வரும் இடம் காவிரியை ஒட்டி இருக்கும் சிலுவன் கொம்பு.  அங்கு பலங்கால பச்சியம்மன் கொயில் இருக்கும்.  10-12 பெரிய முனிகள் அங்கு இருக்கும்.  அந்த முனிகள் ஆணும் பெண்ணும் கலந்த முனிகளைப்போல இருக்கும். . ஊரிலிருந்து ஞாயிறுகளில் கிடாவெட்ட சிலுவன் கொம்பு வருபவர்கள் அதிகம். 


ஒரு சிறு பாலத்தில் இருந்து வந்தவர்கள் வண்டியை நிறுத்தினார்கள்.  அவர்கள் கொண்டு வந்த கூடையில் இருந்ததை அப்படியே வாய்க்காலில் கொட்டினார்கள். ப்ராய்லர் கடையின் கழிவுகள். பார்த்துக் கடந்த நாங்கள் அதிர்ச்சி அடைந்து அப்படியே வண்டியைத் திருப்பி அவர்கள் முன் நிறுத்தினோம். 

 ”என்ன பண்ணறீங்க” என்றார் அண்ணன்.  

“அது வந்து சார்…”.  அவர் எங்களை அலுவலர்களாக நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.  

”தண்ணிய அசுத்தபடுத்த எப்படீங்க மனசு வருது” என ஆரம்பித்து கொஞ்ச நேரம். கடிந்து கொண்டார். 

” சாரி சார்.. இனிமே இங்க கொட்டலைங்க” என்றார்.  


 நாங்கள் பார்த்தவரை வாய்க்கால் தண்ணீரை மாசு படுத்துவதில் இந்த ஊர் அந்த ஊர் என சொல்ல முடியாது.   ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் அல்ல.    


- தொடர்வோம்.



No comments:

Post a Comment

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...