Wednesday, May 1, 2024

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

 


கொடைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று
கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும்
அதைப்பார்க்கலையே’ பாடல் இசைத்துக் கொண்டிருக்க, கோரஸாக பாடிக்
கொண்டே ஒவ்வொரு வளைவு திரும்பும் போதும், ‘ஹேய் ஹேய்’ என
கூப்பாடு போட்டுக் கொண்டு அந்த இரண்டு ஜோடிகள் தங்கள் தேன்நிலவு
கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள்.

  “யேய் சுபனேஷ் அங்கே பாரேன் அடர்ந்த மரங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு
உயரமா, அகலமா பார்க்கவே பிரமிப்பா இருக்குல்ல. காரை நிறுத்தேன்
எனக்கு அங்கே போய் அந்த மரத்தை எல்லாம் கட்டிப்பிடிக்கணும்
தோணுது..”என்றாள் வர்ஷா. 
“ஏம்மா உன் ஆளுகிட்டேயே மரத்தை கட்டிப் பிடிக்கிறேன் சொல்லறே..இது ரொம்ப மோசம்” என்றாள் தாரணி.
 “அட நீங்க வேற சித்த சும்மா வாங்க மா” என்ற வர்ஷா “ப்ளீஸ் ப்ளீஸ்ப்பா…காரை கொஞ்சம் நிறுத்தேன்”. 
“இதை விட இன்னும் அடர்த்தியா உயரமான மரங்கள் நிறைந்த காடுகள் வழியில் நிறைய இருக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போயிடலாமே”. 
“டேய் அவ தான் கேக்கறாளே நீ வண்டியை நிறுத்தேன்” என்றான் விஜய். அவனுக்கும் சற்று நடக்கலாம் என்று இருந்தது.
“ஆமாம் சுபனேஷ் கொஞ்சம் நிறுத்து. எனக்கும் அப்படியே காலாற சித்த
நேரம் நடந்துட்டு வரலானு தோணுது” என்று விஜயின் மனைவி தாரணியும்
சொன்னாள். 

மூவரும் மாற்றி மாற்றி சொல்லவும், மனைவி வர்ஷாவைப்
பார்த்து, “நீ சொல்லறபடி மரத்தைப் போய் கட்டிப் பிடி, கட்டிப்பிடி
கண்ணாளானு பாடு”னு சொல்லி விட்டு சிரித்தபடியே காரை ஓரமாக
நிறுத்தினான் சுபனேஷ்.
நால்வரும் அங்கிருந்து இறங்கி அந்த அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்த அடர்
வனத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். வர்ஷா கைகளை விரித்துக் கொண்டு
தன்னையே தட்டாமாலை சுற்றிக் கொண்டு தாவி தாவி ஓடினாள்.அவளை
விட்டு விடுதலையானது போல் உணர்ந்தாள். அவளின் மனம் அந்த
வனத்தின் அழகில் பறந்து கொண்டிருந்தது.

வர்ஷா ஓடி ஓடி பச்சையும், கறுப்பும் கலந்த நிறத்தில் பாசி ஏறி இருந்த மரங்களின் வளவளப்பையும் சொரசொரப்பையும் தொட்டுப் பார்த்தாள்.பல மரங்கள் அவள் இரண்டு கைகளுக்குள் அகப்படாத அளவில் பெருத்து இருந்தது. அவள் செயல்களைப் பார்த்து மற்றவர்கள் சிரித்துக் கொண்டே பின் தொடர, அவள் வெக்கப்பட்டு மேலும் ஓடினாள். அவளின் ஓட்டத்திற்கு அவர்களால் ஈடு கொடுத்து செல்ல இயலவில்லை. பின் தங்கி சென்றார்கள். சுபனேஷ் அவளின் குதுகலத்தை ரசித்துக் கொண்டே சென்றான்.

மரம், செடிகளின் மீது தனக்கு அதீத காதல் உண்டு என்று வர்ஷா அவனிடம் சொல்லி இருக்கிறாள்.இன்று அவளின் செய்கைகளை பார்க்கும் போது தான் அவளின் ஆழமான நேசிப்பு புரிந்தது. திருமணமாகி இரண்டு வாரம் தான் முடிந்திருக்கிறது. அவன் ப்ரெண்ட் விஜய்க்கு இரண்டு மாதங்கள் முன்பே திருமணம் முடிந்து விட்டது. விஜய், “கொடைக்கானல் போக உங்களுக்கும் சேர்த்து ரூம் போட்டுட்டேன் கிளம்புங்க” என்று சொன்ன போது சுபனேஷால் மறுக்க முடியவில்லை. அவர்களுடன் கிளம்பினார்கள். 

திடீரென வர்ஷாவின் “ஆ..ஆ..ஆ..ஆ…அம்மா” என்ற கதறல்
சத்தம் காட்டில் உள்ள மரங்களையும் நடுங்கச் செய்யும் அளவிற்கு காடு
முழுவதும் எதிரொலித்தது. மரத்தின் இலைகள் எல்லாம் அதிர்ச்சியில்
ஆடின. சுபனேஷ் “வர்ஷா...” என்று கத்தியபடியே ஓடினான். விஜயும்,
தாரணியும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினார்கள். அவள் நடுங்கிக்
கொண்டிருந்தாள். சுபனேஷைக் கண்டதும் ஓடிப் போய் கட்டிப் பிடித்துக்
கொண்டு அழ ஆரம்பித்தாள். “ஏய் என்னாச்சு என்னாச்சு”! அவள் கைகளை
நீட்டிக் காண்பித்த இடத்தில் வாகைப்பூ போல் உடலெங்கும் முடிகள்
புஸ்பஸ்வென்று இருக்க கறுப்பு நிறத்தில் குட்டி விலங்கு ஒன்று ஓடிக்
கொண்டிருந்தது.‌ அது என்ன? என ஒட்டு மொத்தக் கண்களும் உற்றுப்
பார்த்தும், உறுத்தலின் தாக்கம் அந்த விலங்கின் மீது பாய்ந்தது. அது
ஈர்ப்புடன் திரும்பி பார்த்தது. அதன் கண்கள் பழுப்பு நிறத்தில் கோழிகுண்டு
போல் ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்த வினாடியில் மியாவ் என்று கத்திக்
கொண்டே பாய்ந்தோடியது. “அட, ச்சே பூனை. இதுக்கா இந்த கத்து
கத்தினே!”என விஜய் கேட்டதும். “ஆமா இவரு கரப்பான் பூச்சியைக்
கண்டாலே ஓடுவாராம். வனாந்தரத்தில ஒரு விலங்கு ஓடி வந்து மேலே
மோதிச் சென்றால் கத்தாமல் என்ன செய்வாங்களாம்” என்று தாரணி,
விஜயை கடுப்பேற்றினாள். 

“டேய் சுபா நாம உடனே இந்த இடத்தை விட்டுகிளம்பிடலாம் டா” என்றான் விஜய்! 
“ஏன் டார்லிங் எதுக்கு கிளம்பணும்? எனக்கு இப்போ பயங்கர இன்டரஸ்டிங்கா
இருக்கு. இப்படியே இன்னும் கொஞ்சம் தூரம் போய் பார்க்கலாமே இன்னும்
ஏதாவது மிருகங்கள் கூட இருக்கலாம்” என்றாள் தாரணி. 

வர்ஷாவிற்கும் அந்த இடத்தை விட்டு உடனே போய்விடுவது நல்லது என்றே தோன்றியது. காரணம் மூன்று நாட்களுக்கு முன்பு தான், தன் அம்மாவின் வீட்டிற்கு எங்கிருந்தோ வந்த பூனை ஒன்று, வீட்டின் கொல்லைப்புற குளியறைக்குள் மூன்று குட்டிகளை போட்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் அந்த பூனை சுற்றிக் கொண்டே இருந்தது. அதன் குட்டிகள் ‘ங்ஙே ங்ஙே’ என முணகலாக விடாமல் சத்தம் செய்யது அவள் காதுகளுக்குள் நராசுரமாக கேட்டது. அவள் அம்மா வந்து பூனையை விரட்டி விட்டாள். தாய் பூனை மட்டும் வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தது. இரண்டு, மூன்று நாளில் குட்டிகள் கண் முழித்து ஊற ஆரம்பித்த அன்று மாலையில் பெரிய பூனை தன் குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டு, அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு அகன்றதும் “உஷ் அப்பாடா தொல்லை விட்டது” என்றாள் அம்மா. 

இரண்டு குட்டிகளை எடுத்து சென்ற பிறகு, மூன்றாவது பூனைக்குட்டியை
எடுத்துச் செல்ல வெகுநேரம் கடந்தும் பெரிய பூனை வரவில்லை.
அப்போது, வீட்டினுள் இருந்த பூனைக்குட்டி திறந்திருந்த முன் கேட் வழியே
சாலைக்கு ஊர்ந்து செல்வதைக் கவனித்தாள். ‘உஷ் அப்பாடா, இந்த
பூனைக்குட்டி எப்படியோ, வீட்டை விட்டு போனால் சரி’ என்று எண்ணினாள்.
காரணம் பூனை, நாயெல்லாம் அவளுக்கு வளர்க்கப் பிடிக்காது. அதனுடைய
முடிகள் விழுந்து நம் சுவாசத்தின் வழியாக கூட, உடலுக்குள் சென்று
விடலாம் அதனால், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பு
ஏற்படும் என்பதை படித்து இருந்தாள். “அந்த தாய்ப் பூனை வந்து கூட்டிட்டு
போயிடும். புதுசா கல்யாணம் ஆனவ, மால நேரத்தில அங்கே நிக்காதே
உள்ளே வா” என்றாள் அம்மா. 

அவர்கள் உள்ளே வந்த சற்று நேரத்தில் நாய்கள் ஒன்றோடொன்று வ்வ் ..வவ்.. ..லொள் லொள்..ஊ..ஊ..என கத்திக் கொண்டு, ஊளையிட்டு, சண்டையிட்டு கொள்ளும் இரைச்சல் வீட்டுக்குள் கேட்டதும். ‘அய்யோ, நாய்க வந்துடுச்சு. அந்த பூனைக்குட்டி என்னாச்சோ’ என வர்ஷா மீண்டும் வெளியே ஓடி வந்தாள். அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களை தெருவில் சென்ற ஒருவர் கல்லெடுத்தெறிந்து விரட்டிக் கொண்டிருந்தார். நாய்கள் கூட்டம் களைந்து ஓடியது. வேகமாக ஓடி வந்த நாய் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த பூனைக் குட்டியை கவ்விக் கொண்டது. வர்ஷா படபடப்போடு கேட்டை திறந்து வந்து நாயை விரட்டினாள். நாய் இவளின் சத்தம் கேட்டதும் வாயிலிருந்து
பூனைக்குட்டியை ஒரு உதறல் உதறியதும், பூனைக் குட்டி பரிதாபமாக
மூச்சில்லாமல் கீழே விழுந்தது.

வர்ஷாவின் கண்களில் கண்ணீர்..அவள் அம்மாவிடம் சென்று, “அம்மா அந்தப் பூனைக்குட்டியை இங்கேயே வச்சிருக்கலாம். பாவம்..வீணா ஒரு உசிரு போயிடுச்சு.”
 “அட இதுக்கு போயி கவலைப்படற. இந்த பூனை இருக்கே, அது சில சமயங்களில் தன்னுடைய குட்டியை கூட தின்னு போடும். இதெல்லாம் பெரிசா நினைச்சுகிட்டு இருக்காதே”னு அம்மா சொல்வதைக் கேட்ட பிறகும் அவளுடைய மனம் அமைதியடைவில்லை. 

இரவில் சுபனேஷிடம் பூனை சம்பவத்தை சொன்னாள். அவனும் சிரித்தபடியே “நாம கோழி, ஆடு, மீனெல்லாம் திங்கறோமே அப்பெல்லாம் நீ பாவப்படறீயா? இப்ப மட்டும் என்ன பாவம்!”
“இல்ல அது வேற இது வேற”
“எல்லாம் ஒன்னு தான் அதையே நினைக்காம தூங்கு சரியாயிடும்.”
அன்று இரவு அவள் நன்றாக உறங்கிய நிலையில் ‘ங்க.. ங்க.. ங்க..’என குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு
விழித்தாள். கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மீண்டும் குழந்தை
அழுவது போல்..‘ங்யா..ங்கயா..ங்கயா’.

 அவளுக்கு வியர்த்தது. மெதுவாக அறையை விட்டு வெளியே வந்து, ஹாலுக்கு வந்த போது, ‘ச்சே போய் தொலையேன் சனியனே, இந்த நேரத்தில் வந்து அழுதுட்டு இருக்கே’ என்று அவள் அம்மா ஜன்னலின் மீது இருந்த தாய்ப்பூனையை விரட்டிக் கொண்டிருந்தாள். வர்ஷா, எதுவும் பேசாமல் வந்த சுவடு தெரியாமல் அறைக்குள் சென்று படுத்தாள். ‘என் குழந்தையை, உங்கிட்ட தானே கொடுத்துட்டு போனேன் நீ அநியாயமா காவு கொடுத்துட்டியே’ என்று கதறவது போல அதன் கதறல் அவளுக்குள் உள்வாங்கியது. அவள் இரவு முழுவதும் தூங்கவில்லை. காலையில் எழுந்து கணவனிடம் சொன்னாள். 
“அட, எல்லாம் மனப்பிரமை . நீ போய், இன்னைக்கு ஹனிமூன் போறதுக்கு
நம்ம டிரஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணு. அங்கே போயிட்டு வந்தால்
எல்லாம் சரியாகும்” என்று சொன்னான். 

இப்போது, கொடைக்கானல் வந்தும் இத்தனை பேர் இருக்க தன்மீது பூனை வந்து மோதியதில் பயந்திருந்தாள். சுபனேஷ்க்கு அவள் பயம் புரிந்தது. உடனே, “சரிமா நாம கிளம்பலாம். இதெல்லாம் காடுகளில் சகஜம்” என்று சொல்லி விட்டு அவளை சமாதானம் செய்து காரில் ஏற்றினார்கள். கார் கிளம்பி சிறிது தூரம் சென்ற போது திடீரென ப்ரேக் போட்டான் விஜய். “என்னாச்சு விஜய்”
 “அங்கே பாரு!”
காரின் முன்னால் கறுப்பு பூனை ஒன்று குறுக்கே கடந்து சென்றது. பின் சீட்டில்
உட்கார்ந்து இருந்த வர்ஷா “ஏங்க மறுபடியும் பூனையா? பூனை குறுக்கே
போனால் அபசகுணம்னு அம்மா சொல்வாங்க..” 
“சரி இப்படியே திரும்பிடலாமா வர்ஷா” என்று விஜய் சிரித்தான். 
அவளுக்கு இன்னும் பயம் தெளிவாகல. 
“ஒரு விஷயம் தெரியுமா வர்ஷா? இந்த பூனைகள் மக்கள்
இருக்கும் இடத்தில் தான் வாழுமாம். அதனால, அந்தக் காலத்தில் போர்
செய்ய வரும் மன்னர்களுக்கு முன்பாக பூனை சென்றால் இங்கே மக்கள்
வசிக்கின்றனர் எனக் கருதி போர் செய்வதற்கு வேறு இடத்தை
தேர்ந்தெடுப்பார்களாம். மக்களை காப்பாற்றிய பூனைக்கு நாளாவட்டத்தில
அபசகுணம்னு பேரு பாரு.. அதெல்லாம் எதுவும் ஆகாது. நாம அறைக்கு
போயிட்டு, கிளம்பி வந்தால், குணா குகையை பார்க்கப் போக
லேட்டாயிடும். இப்படியே வண்டியை விடுவோம். நாம நேரா அங்கே போய்
வர்ஷாவின் பயத்தை எல்லாம் தூர எறிந்து விடலாம்” என்றான்.
அவர்கள் கார் குணா குகையை நோக்கி விரைந்தது. வழியில் ஒரு
ஓட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்..வர்ஷா
இப்போது தெளிவாக இருந்தாள்.
குணா குகை இருந்த இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பே வாகனத்தை
நிறுத்தி விட்டு அடர்ந்த மரங்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
குணா குகை செல்லும் வழியில் இருந்த ஒரு மரத்தின் வேர் ஆக்டோபஸ்
போல் பரவி பிண்ணி இறுகி கிடந்தது. பார்க்க சற்று பயமாக கூட இருந்தது.

‘இந்த வேருக்கு திடீரென உயிர் வந்து எழுந்து கொள்ள ஆரம்பித்தால் இங்கே
இருக்கிற எத்தனை உயிரை மென்று முழுங்குமோ’ என நினைக்கும் போது
வர்ஷாவுக்கு உதறல் எடுத்தது. ‘என்ன எனக்கு மட்டும் இப்படியான கற்பனை
எல்லாம் வருகிறது ச்சே போ’ என்று கற்பனையை விரட்டி விட்டு அந்த
ஆக்டோபஸ் மரத்தின் விழுதுகளில் காலை வைத்த போது, வழவழப்பான
பாறையின் மீது நடந்தால் சறுக்கி விழுந்து விடுவோம் என்ற நடுக்கத்தில்
கவனமாக காலை வைத்து நடப்பது போல் சுபனேஷின் தோள்களை பிடித்துக்
கொண்டு மரத்தின் மீது நடந்தாள். பல கிளைகள் தலையில் முட்டும்
அளவிற்கு தாழ்ந்து தொங்கியது. தொங்கிய விழுதுகளைப் எம்பி குதித்து
பிடித்து தொற்றியபடி ஊஞ்சல் ஆடியவர்களை மரம் ஆட்டுவித்துக்
கொண்டிருந்தது.

மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அத்தனை கூட்டத்தையும் கடந்து
தான் அந்த சம்பவம் ஆம்! . கறுப்பு பூனை ஒன்று மீண்டும் பாய்ந்து ஓடி
வந்து வர்ஷாவின் காலருகே மோதி மியாவ் என்று கத்திச் சென்றது.
எல்லோரும் காட்டுப்பூனையை படம் பிடித்து கொண்டிருந்தார்கள். வர்ஷா
மயக்கமடைந்து கீழே விழுந்தாள். 
“விஜய், இந்த பூனைகளுக்கு தீயசக்திகள்
கண்ணுக்குத் தெரியுமாம். நான் படிச்சிருக்கேன் வர்ஷாவைச் சுத்தி ஏதோ தீய
சக்தி நடமாட்டம் இருக்கிறதோ அது தான் அவளையே சுத்தி சுத்தி
வருகிறதோ” அவன் காதில் கிசுகிசுத்தாள்.
“ஏய் அவ மயக்கமா கிடக்கிறா
தீயசக்தியாம் உனக்கு என்னவெல்லாம் கற்பனை வருது பார்” என்று
முறைத்து விட்டு, வர்ஷா முகத்தில் தண்ணீர் அடித்தான்.
அவள் எழுந்த பின்பும், வர்ஷா காதுக்குள் மட்டும் ‘மியாவ் மியாவ்’ என்ற
சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. 
“சுபா நாம இந்த இடத்தை விட்டு
கிளம்பிடலாம்.ரிசார்ட் போகலாம் எனக்கு என்னவோ நான் பூனைக்குட்டியை
கண்ணெதிரே கொல்ல விட்ட பாவம் தான் என்னை ஊரு விட்டு ஊரு
வந்தும் தொரத்தி அடிக்குதோனு தோணுது. நாம இப்ப இந்தக் குணா
குகையை பார்க்கப் போக வேண்டாம் ப்ளீஸ்..” என்றாள்

“விஜய் நீங்க இரண்டு பேரும் குணா குகை பார்த்துட்டு, கால்டாக்ஸி பிடித்து
தங்குமிடம் வந்திடறீங்களா? இவ்வளவு தூரம் வந்தாச்சு ஏன் பார்க்காம
வர்றீங்க”
”அட போப்பா ஊரே குணா குகையை வீடியோ போட்டு போட்டு
கண்ணு முன்னாடி நிறுத்தி வச்சிருக்கு. அதுவும் இந்த நிலையில் வர்ஷாவை
முதலில் சரி செய்வோம் வா. குணா குகை எங்கும் போகாது” என்று
அவர்களுடனே கிளம்பி சென்றார்கள்.
மலைச்சரிவில் இருந்த அந்த தங்கும் அறையின் முன்பாக காரை
நிறுத்தினார்கள். ரிசார்ட் சுற்றிலும், விதவிதமான பூக்கள் அதன் அழகு
மனசுக்கு ரம்மியமாக இருந்தது. ஆங்காங்கே உயர்ந்த மரங்களும்,
போகன்வில்லா மரங்களும் இருந்தன. அவர்கள் தாங்கும் ரிசார்ட்டில் மூன்று
அறையும், ஒரு ஹாலும் இருந்தது. அவரவர் அறையில் ட்ராலியை வைத்து
விட்டு..ஹாலில் இருந்த சோஃபாவில் சாய்ந்தார்கள். “நீ போய் முதல்ல
குளிச்சிட்டு வா வர்ஷா. உன்னுடைய பயமெல்லாம் போயிரும்” என்று
சொல்லிக் கொண்டே அங்கே இருந்த தொலைக்காட்சியை சுபனேஷ் ஆன்
செய்தான்.
நீயூஸ் சேனல் வந்தது. அதில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ”குணாகுகை
அருகே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தழைத்து ஓங்கிய ஆலமரம் ஒன்று
தன் விழுதுகளை பரப்பி, நிலங்களிலும் வேர் விட்டு ஆக்டோபஸ் போல்
கோணல்மானலாக விரித்துக் கிடக்கும் காட்சியை அங்கே சென்றவர்கள்
பார்த்திருக்கலாம். சற்று முன் வந்த செய்தி குணாகுகை செல்லும் வழியில்
நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும், சிலர் சரிவுகளில் சிக்கி இருக்கலாம்
என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அதைப் பற்றிய தகவல்கள் விரைவில்..”

அந்த செய்தியைக் கேட்டு நால்வரும் உறைந்து நின்றார்கள். தாரணி தான்
வாய் திறந்தாள். “அப்போ, வர்ஷாவை தொடர்ந்து வந்த, அந்த கறுப்பு
பூனையின் கண்களுக்கு ஏதோ ஒரு தீயசக்தி தெரிந்து இருந்திருக்குமோ?
அதனால் தான் நம்மை தொடர்ந்து வந்திருக்குமோ?” என்றாள். வர்ஷாவின்
மனதிலோ வீட்டில் பூனைக்குட்டியை இழந்த தாய் பூனை மியாவ், மியாவ்
எனக் கத்திய அந்த சத்தம், அவளுக்குள் நான் உன்னை நேசிக்கிறேன்
என்று சொல்வது போல் இருந்தது .

- யசோதா பழனிச்சாமி ஈரோடு.

No comments:

Post a Comment

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...