Wednesday, May 1, 2024

இரகசியம் - Abu G

 



 "எண்ணம் போல் வாழ்க்கை" என்னும் கூற்றை நாம் அனைவரும் அறிந்திருப்போம். வாழ்க்கையில் எல்லாமே எண்ணங்களால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அனைத்து எண்ணங்களும் நிஜமாக உருப்பெறவில்லை. வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டும் தான் கிடைக்கிறது. சிலருக்கு தெரிந்த இரகசியம் (இலக்கை அடைவதற்கு) பலருக்கும் பயன்பட வேண்டும். நம்முடைய எண்ணங்களை நாம் மேம்படுத்திக் கொண்டால் நிறைவேறா எண்ணங்களையும் நிஜமாக மாற்றி முழுமையான வெற்றியை அடையலாம்.


எண்ணங்கள் தான் மனதையும், சிறப்பான எதிர்கால வாழ்க்கையையும் வடிவமைக்குகின்றன. ஒவ்வொருவரின் இயல்புத்தன்மை தான், அவரின் மனதை வடிவமைக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய "இயல்புத் தன்மையை" அறிந்து கொள்ள வேண்டும். நாம் நம் மனதை வடிவமைப்பதன் மூலமாகச், சிறந்த எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும்.

யார் சாதனையாளர்கள் ?

"நான் என் இலக்கை அடையும் வரை உறுதியோடு முயற்சி செய்து கொண்டிருப்பேன்" என்று விடாமுயற்சியோடு போராடுபவர்களே சாதனையாளர்கள். சிலமுறை முயன்று முயன்று தோற்று விட்டு, "இனி என்னால் முடியாது" என்று சொன்னால் => அடைய வேண்டிய இலக்கு என்றும் வெறும் கனவாக மட்டுமே இருக்கும். முதல் சில முயற்சியிலே மிகப்பெரிய வெற்றி ஒரு சிலருக்கு தான் கிடைக்கும்‌. ஓர் இலக்கை அடைய, ஒவ்வொரு தடைகளையும் நம் முன்னேற்றத்திற்கானப் படிக்கட்களாக எண்ணி, விடாமுயற்சியோடு போராட வேண்டும்.

அடிமைத்தனத்தை ஒழித்து, வரலாறு படைத்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், ஐந்து(5) முறை தோல்வியைத் தழுவினார். அவரின் விடாமுயற்சி அவரை வெற்றி பெறச் செய்தது.

மகாத்மா காந்தி மற்றும் அடால்ஃப் ஹிட்லர் ஆகிய இருவருமே வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் தான். இவர்களுக்குள் இருந்த வித்தியாசமே இவர்களின் இயல்புத்தன்மை தான். அந்த இயல்புதான், "மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகவும்; அடால்ஃப் ஹிட்லரை சர்வாதிகாரியாகவும்" மாற்றியது.

" எண்ணங்களை வடிவமைத்து கொண்டால்
எதிர்காலத்தையும் வடிவமைத்துக் கொள்ளலாம் "

சிறந்த எண்ணங்களுடன் கூடிய மனிதர்களின் நட்பைத் தேடுங்கள். நல்ல சிந்தனைகளால் மனதை நிரப்புங்கள். உங்களுக்கு பிடித்த வாசகத்தை உங்கள் கண்களுக்கு தினமும் புலப்படும் படி சுவற்றிலோ அல்லது ஏதாவது ஒரு இடத்திலோ வைத்து தினமும் அவ்வாசகத்தை வாசியுங்கள். சிறந்த சிந்தனைகளே ஒவ்வொருவர் மனதிலும் ஓங்கி இருக்கட்டும். "என் வாழ்க்கையின் சிறந்த விஷயங்கள் இனிமேல் தான் நடக்கப் போகின்றன...
 இப்பொழுது இருப்பதை விட இன்னும் என் வாழ்க்கை பல மடங்கு அழகானதாக இருக்கும்...
 நான் என் எதிர்காலத்தை சிறந்த முறையில் வடிவமைக்கப் போகின்றேன்...
 எனது கொள்கையை அடைய நேர்வழியில் என்றும் பாடுபடுவேன்... 
எந்த நிலை வந்தாலும் பாறையைப் போல் உறுதியாக நிமிர்ந்து நிற்பேன்...
 என் வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களிலும் நன்றியுணர்ச்சியை பயிற்சி செய்வேன்"
 என்ற உறுதி ஒவ்வொரு மனதிலும் ஓங்கி இருக்க வேண்டும்.

 ஒவ்வொருவருக்கும் கொள்கைகள் இருக்க வேண்டும். அதாவது ஒரு இலக்கை அடைவதற்காக நாம் பின்பற்றப்படும் எண்ணங்களும், வழிமுறைகளும் நமது கொள்கைகளுக்கு வழிவகுக்க வேண்டும். "நான் யார்? நான் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும்?..."என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்திக்காமல், நமது கொள்கையை அடைய நிலைப்பாடுகளை வகுத்துக்கொண்டு, இலக்கை அடையும் வரை முயற்சி செய்ய வேண்டும். தோல்வியுற்றாலும் அது நமக்கு முடிவல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விடாமுயற்சியை கைவிட்டால் மட்டுமே அது நமக்கு தோல்வியாக முடியும்.

நமக்கு புதிய வாய்ப்பு பிரச்சனை உருவத்திலும் வரலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர், "அலெக்சாண்டர் கிரகாம்பெல்" ஆவார். அவர் தன் காது கேளாத மனைவிக்காக, காது கேட்பதற்குக் கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது தான், தொலைபேசியை தற்செயலாகக் கண்டுபிடித்தார்.
எண்ணிக்கையில்லா வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.நாமும் நம்முள் நம்மையே கண்டுபிடிக்க, இதுவரை அனுபவித்திராத அந்த அழகானப் பயணத்தை மேற்கொண்டு விடாமுயர்ச்சியோடு போராடுவோம்.

"ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் தன் கனவுகளின் வழியில் பயணிக்கும் போது, அவர் எதிர்பாராத வெற்றிகளை எதிர்பாராத விதமாக எதிர்கொள்வார் " -டேவிட்

ரோஜர் பேனிஸ்டர் வரும் வரை,நான்கு நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க முடியும் (மே 6,1954) என்பது தெரியாததாகவே இருந்தது. எட்மண்ட் வரும் வரை, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவது (மே 29,1953) என்பது தெரியாததாகவே இருந்தது.

நாம் ஒவ்வொருவரும் இதுவரை செய்யாத ஒன்றை செய்யும்போது தான் தன்னம்பிக்கை பல மடங்கு உயரும். நாம் பிறந்தோம் மடிந்தோம் என்று இருந்து விடாமல் சாதாரண மனிதனான நம்மை நாமே மாமனிதர்களாக மாற்றி,பல அனுபவங்களைப் பெற்று, சரியான வழிகாட்டுதல்களுடன் நம் இலக்கை நம்மால் அடைய முடியும்.

"எங்கேயெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றதோ, அங்கேயெல்லாம் அவ்வாய்ப்பைப் பயன்படுத்த நம் கைகளை, முதல் கையாக உயர்த்துவோம்." ஒரே ஒருவரால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும் அது வேறு யாருமில்லை - நாம் மட்டும் தான். ஒரு செயலை விருப்பப்பட்டு செய்யும் போது, அச்செயலை அடைவதற்கு பல வழிகள் நமக்குக் கிடைக்கும்.

விடாமுயற்சியால் வரலாற்றில் இடம்பெற்ற சிலரை பற்றி தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு மனிதரும் பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, பல புரட்சிகளைச் செய்தனர். அதில் தலை சிறந்த மனிதர்களாக பலரும் விளங்கினர்.
• சமூக உரிமைக்காக போராடிய - மார்ட்டின் லூதர் கிங்,
• இந்திய திருநாட்டிற்கு விடுதலை பெற்றுக் கொடுத்த அறவழிப் போராட்ட வீரர் - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 
• பிரம்ம சமாஜம் நிறுவிய - இராஜாராம் மோகன் ராய் போன்ற இன்னும் பலர் பல வழிகளில் சமூகத்தின் அவலங்களை மாற்றியமைக்கப் பாடுபட்டவர்கள். இவர்களைப் போன்றவர்கள் எல்லோரும் முதல் நபராய் தங்கள் கைகளை உயர்த்தி தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, நம் நாட்டிற்காக அரிதான வாய்ப்புகளை பயன்படுத்தி, பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பாடுபட்டவர்கள். ஆகையால் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எது முட்டாள்தனம் ? 

சார்புக் கோட்பாட்டை கண்டுபிடித்த ஐன்ஸ்டினிடம் முட்டாள் தனத்திற்கு விளக்கம் கேட்டபோது, அவர் "ஒரே வேலையை திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனம்" என்றாராம்.

நாமும் முதல் நபராக நம் கைகளை உயர்த்தி, நம் பாதங்களை முன்னோக்கி அடி எடுத்து வைத்து, தகரத்தை தங்கமாக மாற்றும் ரசவாதியாக இருப்போம் வாருங்கள்! .

ஒரு இலக்கை அடைவதற்கும்;
ஒரு துறையில் சாதனை படைப்பதற்கும்;
ஒரு முத்திரை பதிப்பதற்கும்;
சாதனையாளர்களாக வலம் வருவதற்கும்
ஒருவர் இளம் வயதிலிருந்தே மேதையாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
 தன்னம்பிக்கையும் + ஆர்வமும் + விடாமுயற்சியும் + திட்டமிட்ட வழிகளும் + உழைப்பும் இருந்தால் போதும் எந்த வயதிலும் நாம் சாதனை படைக்கலாம்.

வந்தோம்!
 வாழ்ந்தோம்!
 சென்றோம்!
 என்றில்லாமல் வாழ்க்கையில் ஒரு சரித்திரத்தை படைத்தோம் என்று நாமும் புதிய பாதையை உருவாக்குவோம் - அதற்கு இந்த நொடிமுதல் புதிய ஆரம்பமாக இருக்கட்டும்..... புதிய ஆரம்பத்தை தொடங்குவோம் ! வாருங்கள்.....

*தொலைநோக்குப் பார்வை + விடாமுயற்சி + இலக்கை அடைய அறிவாற்றலுடன் கூடிய முயற்சி + சரியான வழிகாட்டி = இலக்கை அடைவதற்கான இரகசியம்...*

-பேபி அபர்ணா குணசேகரன் ( Abu G )

1 comment:

  1. //ஒரே ஒருவரால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும் அது வேறு யாருமில்லை - நாம் மட்டும் தான்...// சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...