Friday, December 1, 2023

மரத்த வச்சவன் - அதீதி

திங்க சோறு இல்லையே அப்படின்னு, சட்டிய உருட்டிக்கிட்டு இருக்கும்போது.. தம்பி அழுகிறான். என்ன செய்ய! நமக்கு இல்லை என்றால் என்ன பக்கத்து வீட்டு அக்கா கிட்ட சோறு வாங்கி தம்பிக்கு ஊட்டிடுவோம். இப்படி பல நாள் அவள் தம்பிக்கு சோறு ஊட்டி இருக்கா. அதுல ஒருவாய் தனக்கும் தேவைன்னு தோணுனாலும்,எந்த சூழ்நிலையிலும் யாருக்கிட்டயும் ஒரு ரூபாய் கூட , கையேந்தி நிற்க கூடாதுன்னு வைராக்கியமா இருக்கிற அவ அம்மா நினைப்புக்கு வந்துருவா. இவ்வளவு பாசமா தம்பிய கவனிச்சுக்கறவ சில நேரம், அவன் தொந்தரவு தாங்க முடியலன்னு அவன ரொம்பக் கோவமா அடிச்சு போடுவா. காரணம், அவளும் குழந்தை தானே!

அவளுக்குள்ளயும் ஓடி ஆடி விளையாடனுங்கற ஏக்கம் இருக்கும். ஆனா, தம்பி அம்மா வேலைக்கு போறதுக்கு ரொம்ப எடஞ்சல் பண்றான். பால் கொடி மறக்காம வீறு வீறுன்னு கத்தி ஊரையே கூட்றான்.அதனால அவனப் பார்த்துக்கிற பொறுப்பு முழுசா அவளை வந்து சேர்ந்திருச்சு. அவ ரொம்ப அழகான புள்ள ;நல்ல நெறம். இடுப்புக்குக் கீழே தொங்கும் முடி.ஊர்ல இருக்கிற சனங்கெல்லாம் இந்த பிள்ளைக்கு எவ்வளவு முடி பாரேன்.. அப்படின்னு உச்சிக்கொட்டும். நல்ல சுறுசுறுப்பான பிள்ளையும் கூட.

எல்லார் மாதிரியும் பள்ளிக்கூடத்துக்கு நல்லா அழகா ஜடையை மடிச்சு பின்னிக்கிட்டு, பாவாடை சட்டை போட்டுக்கிட்டு போயிட்டு இருந்த பிள்ளை, தம்பிக்காக என்னய பள்ளிக்கூடம் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்களேங்ற கோபம் அப்பப்ப வந்தாலும்,அதை தாண்டி என் தம்பி.. என்னோட தம்பி அப்படிங்கிற அந்த பாசமும் அவளுக்கு அதிகம்.ஆனாலும், நம்ம வேலைக்குப் போனா தான் கஞ்சியாவது குடிக்க முடியுமே அப்படிங்கறப்ப அம்மாவுக்கும் வேற வழியும் தெரியல.மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.. அப்படின்னு பசிக்குப் பேசியே வைத்தியம் பாக்குற அப்பா. இதெல்லாம் வயிறுக்குத் தெரியுமா என்ன? அப்பனா இருந்தாலும் அவனுக்கும் வயிறு இருக்கே!

ஒரு நாள் வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தி முடித்துவிட்டு அம்மா நெசவுக்கு போனதுக்கு அப்புறம், தம்பிய பாத்துக்குற வேலைய தான் முழு நேரமாக செஞ்சிட்டு இருக்க அந்த பொண்ணு,கம்மஞ்சோறு களிய தவிர திங்க ஒன்னும் கிடைக்கலையே என்கிற ஏக்கம். என்ன இருந்தாலும் விளையாட்டுப் பிள்ளை தானே..வெளிய வந்து நாலு சிறுசுகளோட விளையாடும்போது எல்லாத்தையும் மறந்துடுறா. ஒருநாள் விளையாண்டு முடிச்சு வர்ற வழியில தூரத்தில் ஒரு கடையில, அப்பா உட்கார்ந்து இருக்கிறதா பார்க்கிறா. நம்ப அப்பா மாதிரியே இருக்கே அப்படின்னு வேக வேகமா அந்த கடையை நோக்கி போறா. அங்க அப்பா பரோட்டாவும்,கோழிக் குழம்பும் வச்சு சாப்பிட்டுட்டு இருந்தாரு. அவ கண்ணெல்லாம் ஒரே கத கத கதன்னு தண்ணி.. வாயில வார்த்தை வரல.. ஒரு நிமிஷம் நின்னு தன் தகப்பன் முகத்தையும்,அவன் இலையில் இருக்கிற அந்த பரோட்டாவையும் பார்த்துட்டு அப்படி, ஒரு வேகமா... கோவமா ஒரு நடைய வீட்டை நோக்கி போடுறா. ஒரு பெரிய ஏமாற்றம், ரொம்ப பெரிய ஏமாற்றம்.. இந்த உலகத்தில் பிறக்கிற எல்லா பொம்பள புள்ளையும் பெருசா நம்பற மொத ஆம்பள அப்பன் தானே! அவளுக்குள் எத்தனை கேள்வி எழும்புச்சோ!
மரத்த வச்சவன் தண்ணி ஊத்த மறந்துட்டான்......

அன்னைக்கு முடிவு பண்றா. இனி நானா சம்பாதிச்சு வீட்ல இருக்குற எல்லாத்துக்கும் பொங்கிப் போட்ற காலம் வர்ற நேரம் அன்னைக்கு தான் எனக்கு விருந்துன்னு முடிவு பண்றா.அதுவரைக்கும் முழு சைவமா மாறிட்டா.

இப்படி வைராக்கியத்துக்காக சைவமா மாறினவங்க எத்தனையோ பேர் அதுல அவளும் ஒருத்தி.

6 comments:

  1. மனதை நெகிழ வைத்த கதை.. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆஹா... எதிர்பாராத திருப்பம். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. நல்ல எழுத்து நடை... சரளமாக வருகிறது... சிறப்பு... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்று mam மகிழ்ச்சி வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அக்கா என்பவள் இரண்டாம் தாய் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  6. ஆழமான எழுத்து..மென்மேலும் தொடர வாழ்த்துகள்💐

    ReplyDelete

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...