நண்பர்களுடன் ஒரு குடும்பச் சுற்றுலா.
இரண்டு முதல் ஒன்பது வயதிலான ஆறு குழந்தைகளுடனான ஒரு வார பயணத்தின் ஒரு பகுதியாக ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சி சாலையின் பிரத்தியேக விலங்குகள் காட்சியில் நின்றிருந்தோம்.
சொன்ன திசையில் பறந்தன பறவைகள்...
கைதட்டியதும் சிரித்தென குரங்குகள்...
விசில் சத்தம் கேட்டதும் துள்ளி எழுந்தன டால்பின்கள்...
குச்சி படும் இடமெல்லாம் படம் எடுத்து ஆடின பாம்புகள்...
பாதுகாப்பு பயிற்றுநரின் கண்ணசைவிலும் கையசைவிலும் அவர்களின் கட்டளையை இம்மி பிசகாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்த விலங்குகளை பார்க்க பார்க்க எங்கள் குழுவில் முணுமுணுப்பு அதிகமானது - "அஞ்சறிவு படைச்சதெல்லாம் தங்கமா சொன்ன பேச்சை கேக்குது.
நம்ம பெத்தது ஒண்ணாவது நாம சொல்றத கேக்குதா???!!!"
கேட்காது!
கேட்கக் கூடாது!!
கேட்கவும் முடியாது!!!
அதற்காக தானே மனிதனாகிய நமக்கு ஆறாம் அறிவை இயற்கை கொடுத்திருக்கிறது.
சொன்னதை சொன்னபடியே செய்ய ஐந்தறிவு மட்டுமே போதுமே.
சுயமாய் சிந்திக்கவும் செயல்படவும் ஆறறிவு பெற்ற நம் குழந்தைகளை நம் சொல் பேச்சை மட்டும் கேட்டு நடத்தப பழக்கி ஐந்தறிவு ஜந்து ஆக்குவதா? என்ற கேள்வி மனதுக்குள் அதிர்ந்து எழுந்தது. உடனேயே ஒரு வேறுபாடும் உறுத்தியது.
ஐந்தறிவு உடைய விலங்குகள் பிறந்த உடனே சுயமாக இயங்குகிறது. ஒரு கன்றுக்குட்டி பிறந்தவுடன் நடக்கிறது, மீன் தாய் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் நீந்துகிறது. ஆனால் மனிதக் குழந்தைகள் மட்டுமே பிறந்து பல மாதங்கள் சுயமாய் ஜீவிக்க முடியாமல் பெற்றோரின் அரவணைப்பை தேடுகிறார்கள்.
ஆரம்பத்தில் அரவணைக்கத் துடிக்கும் பெற்றோரும் கண்ணுக்குள், கைக்குள், நெஞ்சுக்குள் என்று எங்கெங்கோ தங்களுக்குள்ளே இறுகப்பற்ற துவங்குகிறார்கள். இறுக்கப்பற்றுதலுக்கும் சிறைபிடித்தலுக்குமான இடைவெளி மிகக் குறைவு என்பதை இந்த இடத்தில் அடிக்கோடிட்டு நம் கருத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு,
பிறந்த குழந்தைக்குத் தானாக உணவு சமைத்துக் கொள்ளத் தெரியாது என்பது உண்மை. ஆனால் உணவை நாம் படைக்கத்தான் வேண்டுமே தவிர அன்று நிலாவையும், இன்று கார்ட்டூனையும் காட்டி வாயில் அடைக்கத் தேவையில்லை.
அதேபோல, பிறந்த குழந்தைக்கு உடனே நடக்கத் தெரியாது உண்மைதான். ஆனால் நடந்து பழக வாக்கரும், விழுந்தால் அதிராமல் இருக்க குஷனும் கண்டிப்பாகத் தேவையில்லை தானே.
இப்படி ஒவ்வொரு நிலையிலும் நம் குழந்தையை அரவணைப்பதாக நினைத்து நாம் செய்யும் உதவிகள் அவர்கள் வயதுக்கு தேவையான உடல் வளர்ச்சியையும், மனமுதிர்ச்சியையும் தடுக்கிறது என்றால் அந்த உதவிகள் நம் குழந்தைகளுக்குத் தேவையானது இல்லை என்பதை புரிந்து கொள்வது பெற்றோர்களின் அத்தியாவசியம்.
இந்த முதல் பாடம் முத்தாக மனதில் பதிந்தால் மட்டுமே குழந்தைகள் வளர வளர பெற்றோர்கள் அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே பகிர்ந்து உதவிகளையும் அதனால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க வழியும் கிடைக்கும்.
"அது என்ன அசௌகரியசங்கள்" என்று யோசிக்கிறீர்களா???
அதில் முதலாவது - நாம் ஆரம்பத்தில் மிருகக்காட்சி சாலையில் நடந்ததாக கூறிய, "நான் சொல்றதை என் குழந்தை கேட்கல" என்கிற எதிர்பார்ப்பு!
ஆனால் ஆறறிவுடன் பிறக்கும் குழந்தை அதனுடைய எண்ணங்களின் செயலால் இயங்கும் போது பெற்றோரின் உதவியாக வரும் கையாளுகையும் அதனால் வளரும் எதிர்பார்ப்பும் சுயமாய் சிந்திப்பதை சுருக்குகிறது.
முடிவெடுப்பதில் தடுமாற்றம், செயல்படுவதில் பதற்றம் என்று பதின்வயது வரை இது போலவே கடக்கும் குழந்தைகள் பின்னர் எதிர்மறை உணர்வுகளுடன் வாழ்கிறார்கள் என்று அமெரிக்க ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
ஆனால் அன்பையும் அரவணைப்பையும் மட்டும் தந்து உதவி என்ற பெயரில் எண்ணங்களையும் வயது முதிர்ந்த செயல்களையும் திணிக்காமல் வளரும் குழந்தைகள் தன் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடிக் கொள்கிறார்கள்.
அதனால் நினைவில் கொள்வோம் -
- நம் குழந்தைகள் சொல்பேச்சு கேட்கும் ஐந்தறிவு விலங்குகளும் இல்லை.
- ஆறாம் அறிவு சொல்பேச்சு மட்டும் கேட்டு நடப்பதற்கும் இல்லை.
- நம் வீடுகள் மிருகக்காட்சி சாலைகளும் இல்லை!
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக அழகாக , அருமையாக இருந்தது கட்டுரை.
ReplyDeleteஇறுதி மூன்று வரிகள்....நச்.
ReplyDeleteகலக்கிட்டே மது.
அடடா..சொற்களின் தேர்வு..சிறப்பு
ReplyDeleteArt of parenting nicely compared with 5 sensed animals, great writing
ReplyDelete