Monday, April 1, 2024

தோழி எந்தன் தோழி - 1 - ஜெயலலிதா

அத்தியாயம்  1


கிச்சனில் வேலையாக இருந்த காயத்ரியிடம் வெளியே இருந்து ஓடி வந்த புஷ்பா   “அம்மா உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்காரும்மா. பார்த்தாக்க டவுனுக்காரரு மாதிரி தெரியறாரு. உங்க பேரைச் சொல்லித் தான் விசாரிச்சாரும்மா “ என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.

“ யாரு புஷ்பா ?. இதுக்கு முன்னாடி இவரு நம்ம வீட்டிற்கு வந்திருக்காரா என்ன?” புஷ்பாவிடம் கேட்டாள் காயத்ரி.

புஷ்பா கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக இதே  வீட்டில் காயத்ரிக்கு உதவியாக இருப்பவள். காயத்ரியின் சுக துக்கங்களில் உண்மையான அக்கறை கொண்டவள்.

“ இல்லம்மா, இதுக்கு முன்னாடி இவரு நம்ம வீட்டுக்கு வந்த மாதிரியே தெரியலம்மா. வயசு கூட கிட்டத்தட்ட அம்பது வயசு, நம்ம ஐயா வயசே இருக்கும்னு  நினைக்கறேன். ஆனாலும் ஆளு ஷோக்கா இருக்கறாரும்மா “ என்று வந்தவரை வர்ணித்தாள் புஷ்பா. 

“ சரி, வா போய்ப் பார்க்கலாம்” என்ற காயத்ரி “ ஆமா வந்தவரை வாசல் கேட்லயே நிக்க வெச்சிருக்கியா இல்ல வீட்டுக்குள்ளே வரச் சொன்னியா புஷ்பா” என்று கேட்டாள்.

“ என்னம்மா நீங்க இப்படி கேட்டுப்புட்டீங்க…! நம்ம வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் எனக்கு தெரியாதா என்ன. அவரை உள்ளே  வரச்சொல்லி  முன்கூடத்துல உக்கார வெச்சுட்டு தான் வந்திருக்கேன்மா” என்றாள் பெருமையாய் புஷ்பா.

“ சரி சரி கொஞ்சம் பேசாத வர்றியா…!" என்ற காயத்ரி சமையல் கட்டுக்கு  அடுத்தபடியாக இருக்கும் விசாலமான சாப்பாட்டு கூடம் தாண்டி, அதற்கு அடுத்துள்ள பெருங்கூடம் கடந்து, பின் நெருங்கிய உறவினர்கள் வந்து உட்காந்து உறவாடும் பெரிய அறைதாண்டி, அதற்கு  அடுத்துள்ள வீட்டின் அகலமான வரவேற்பறையைக் கடந்து முன்கூடத்திற்கு வந்தாள்.

பெரும்பாலும் முன்பின் அதிகம் பழக்கம் இல்லாதவர்களையும், அறிமுகம் இல்லாதவர்களையும் மட்டுமே முன்கூடத்தில் அமரவைத்துப் பேசுவது  வழக்கம். மற்றபடி அந்த வீட்டின் விருந்தோம்பலும் உபச்சாரமும் பற்றி அந்த எட்டுப்பட்டி கிராமத்துக்கும் அத்துபடி.

கூடத்தில் அமர்ந்திருந்தவரின் பளீரென்ற சிவப்பும், உயரத்துக்கு தக்க பருமனுமாய், தகுந்த விதத்தில் “ டக்  “ செய்யப்பட்டிருந்த அவரது பேண்ட் சர்ட் நேர்த்தியும்,  கூடவே காயத்ரியைக் கண்டதும் களைப்பையும் மீறி அவரது முகத்தில்  தோன்றிய பளீரென்ற மின்னல் சந்தோஷமும், அவரது நெற்றியில் இருந்த திருநாமமும் காயத்ரியின் மனதில் பதிந்தது.

ஏதோ நினைவில் அவரையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தவளிடம் வந்திருந்தவர் “ என்னைத் தெரியலியா காயத்ரி? . நா கேசவன். ரகுராமனோட அத்தைப் பிள்ளை” .

“ ஓ…காட்….!!. சட்டுனு நினைவுக்கு வரல.ஆனா… மனசுக்குள்ளே உங்க முகம் ஆழமாப் பதிஞ்சு போன நெனப்பு. அதான் பேசக் கூட முடியல.  இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா..!?” என்று சொன்ன காயத்ரியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் ஒளி.

“கேசவண்ணா எப்படியிருக்கீங்க?. வீட்டில் எல்லாரும் செளக்கியமா? அப்புறம் உங்க மாமா பிள்ளை எப்படி இருக்கிறார்?. உம்…அப்பவே அரைச்ச உளுந்து மாவு மாதிரி புஸ்புஸ்னு  வெள்ளை வெளேர்னு இருப்பார். இப்ப எப்படி தொந்தியும் தொப்பையுமா ….. அடடா…நா ஒண்ணு, வந்தவரை வீட்டுக்குள்ளே கூடக் கூப்பிடாம நிக்கவெச்சுட்டு, சந்தோஷத்துல ஏதேதோ பேசிட்டிருக்கேன்  பாருங்க..” என்று பரபரத்த காயத்ரி புஷ்பாவிடம் திரும்பி

“ என்ன புஷ்பா நீயும் நின்னுட்டே இருக்கறியே..? கேசவன் அண்ணாக்கு அப்புடியே கெட்டி பால்ல காபி பொடியைப் போட்டு கொஞ்சம் தூக்கலான இனிப்போட நுரைக்க நுரைக்க ஆத்திக்குடிக்கறது தான்  ரொம்பப் பிடிக்கும். நீ  போயி சீக்கிரமா காபி கொண்டு வா புஷ்பா..” என்ற காயத்ரி, கேசவனிடம் இதோ ஒரு நிமிசம் இருங்க, மேக்காலத் தோட்டம் போயிருக்கற என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் போட்டு நீங்க வந்திருக்கற. விசயத்தைச் சொல்லிட றேன் “ என்று சந்தோஷமாய்ப் படபத்த காயத்ரியை ஆச்சரியமாகப் பார்த்தபடியே காபி கலந்து வர உள்ளே சென்றாள் புஷ்பா.

இத்தனை வருடங்களில் தன் எஜமானியம்மாளிடம் பார்த்திராத ஒரு முகமாய் இந்தக் குதூகலம் தெரிந்தது. 

பொதுவாகவே காயத்ரி அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள். தன்மை அறிந்து உதவி செய்வதில் காயத்ரியை மிஞ்ச ஆளே கிடையாது. தன்னுடைய தோழிகள்  யாராவது வீட்டிற்கு வந்தாலும் கூட ஓடிச் சென்று கை பிடித்து அழைத்து வந்து அளவளாவுவாள்.மற்றபடி….

காயத்ரியின் இந்த குதூகலமும், இந்த உறவும் புஷ்பாவிற்குப் புதிதாகவே இருந்தது. புரியவும் இல்லை. ஆனாலும் காயத்ரியின் சந்தோஷமும் பரபரப்பும் இவளையும் தொற்றிக்கொள்ள வேகமாகக் காபி கலந்தாள்.

நாற்பதின் பிற்பகுதியில் நிற்கும் காயத்ரியின்  முகத்தில் இப்போது தெரிந்த சந்தோஷ அலை அவளை அப்படியே இருபதுக்குள் இழுத்துச் சென்றது.

காபியை குடித்து முடித்த கேசவன்   “ அப்புறம்…நீ எப்படி இருக்கறே காயத்ரி, உன்னைப் பத்தி எதுவுமே சொல்லலையே?”

“ நான் நல்லா இருக்கேன். எங்க வீட்டுக்காரர் கதிர் மாமாவைப் பத்தி தான் உங்களுக்கு  நல்லாத் தெரியுமே கேசவண்ணா. என்ன…எங்க பெரிய மாமா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்ததுக்குப் பிறகு, இவரு தன்னோட ஜாப்பை விட்டுட்டு வந்து விவசாயத்தைப் பார்க்கவேண்டியதாப் போச்சு.

 வேறென்ன பண்றதுங்ணா, எங்க பெரிய மாமாவுக்கு இவரு மட்டும் தானே வாரிசு. ஒரே பிள்ளை. சோ…அப்பாவுக்கு பின்னால மகன் தானே எல்லாத்தையும் பார்த்தாகனும். அதனால இத்தனை சொத்துக்களையும்  கட்டிக் காப்பாத்தனுமேன்ற பொறுப்புல வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்க வந்துட்டாருங்க.

ஆரம்பத்துல சில சமயம் நான் கூட மனசு பொறுக்காம. அவருட்ட கேட்டேன்...'ஒரு ஆபிஸரா ஜீப்புல கெத்தா போய்  வந்து இருந்துட்டு, இப்ப இப்புடி ஆளு அம்போட நெலத்துல இறங்கி விவசாயம் பண்றது கஷ்டமா இல்லியா மாமா'ன்னு…?

ஆனா அதுக்கு அவரோ, 'அடியே மக்கு.. நா இருந்தது ஒரு அக்ரி ஆபீசரா. இப்ப நா பண்றதும் அக்ரிகல்சர். இதுல என்ன பெரிய வித்தியாசம்?.  தியரியா எல்லார்ட்டயும் சொல்லிட்டு இருந்ததை,  இப்ப பிராக்டிக்கலா பண்ணிட்டு இருக்கேறேன். இப்ப நம்ம மகசூலைப் பார்த்துட்டு மத்தவங்க எல்லாம் இது எப்படி சாத்தியம்னு எங்கிட்ட வந்து  கேட்டுத் தெரிஞ்சுக்கறாங்ளே..இந்த சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காது காயத்ரி'ன்னு சொல்லுவார்

அப்புறறம்..எங்க பெரிய மாமா போன கவலையிலயே அடுத்த ரெண்டு வருஷத்துல எங்க அத்தையும் காலமாயிட்டாங்க. அதனால வீட்டுப் பொறுப்பு பூராவும் என்னுடையதாயிடுச்சுங்”.

“ ஓ….சரி, பிள்ளைங்கெல்லாம்….”

“ ரெண்டு பிள்ளைங்க கேசவண்ணா. மொதல்ல பொண்ணு. இஞ்சினியரிங் படிச்சா. இப்போ கல்யாணத்துக்கு பிறகு சென்னைல அவங்களோட கம்பெனியையே பார்த்துட்டு இருக்கிறாள். ரெண்டாவதா  பையன். இப்போ பிளஸ் டூ படிச்சுட்டு இருக்கிறான். ரெண்டு பேருக்குமிடையே கொஞ்சம் அதிக கேப் தான்”  என்று தன்னைப் பற்றி மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள் காயத்ரி.

அப்போது வாசல் கேட் அருகே புல்லட் சத்தம் கேட்டதும் “இதோ மாமா வந்துட்டார் கேசவண்ணா” என்ற காயத்ரி எழுந்து வாசலை பார்த்தாள்.

வீட்டிற்குள்  ஆர்வமாக நுழைந்த கதிர், “ வாங்க..வாங்க..கேசவன்.எப்படி இருக்கீங்க?. பார்த்து ரொம்ப வருஷமாச்சு இல்லீங்ளா…அப்புறம் ரகுராமன் எப்படி இருக்கிறார்..” என்று கேட்டவர் அன்பு மேலிட அப்படியே கேசவனை தன்னோடு அணைத்துக் கொண்டார்.

பின் காயத்ரியிடம் “ காயத்ரி நீ போயி சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணும்மா” என்ற கதிர்வேல் கேசவனிடம் “ அப்புறம் இவ்வளவு வருஷம் கழிச்சு எங்களைத் தேடிட்டு வந்திருக்கீங்க. ரொம்ப முக்கியமான விசயமா இருக்கனும் தானே! சொல்லுங்க கேசவன்” என்றார் கதிர்.

கதிரின் சரியான கேள்வியில் கலங்கிப் போன கேசவனுக்கு மேற்க்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் கண்கள் கலங்கியது.

அதைப் பார்த்ததும் பதறிப் போன கதிர், “ என்ன கேசவன் நா எதுவும் தப்பாக் கேட்டுட்டேனா?.எனக்கு உங்களையும் ரகுராமனையும் நெனச்சுட்டாலே என்னம்மோ ரொம்ப நாள் பழகிய உணர்வு வருது. அது எனக்கே வந்துச்சா இல்ல காயத்ரி சொல்லிச் சொல்லி அவளால அவளுக்காக வந்துச்சுன்னாவே தெரியலை. ஆனா அப்படி ஒரு அன்பு. ஒரு பிடிப்பு உங்க மேல. அதான் ஆர்வம் தாங்கமுடியாம சட்டுனு வெளிப்படையாவே  கேட்டுட்டேன். அதுவும் ரகுராமன் வராம, நீங்க மட்டும் இங்கே வந்ததுல, மனசுக்குள்ளே ஒரு நெருடல் கேசவன். நீங்க ஒன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க” என்று சொன்ன கதிர் கேசவனது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து இறுக்கிக் கொண்டான்.

“ நான் தப்பா எதுவும் நினைக்கல கதிர். நா சொல்ல வந்ததை எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தடுமாறிட்டு இருந்தேன். அதான் உங்களோட சரியான கேள்வி என்னைக் கண் கலங்க வெச்சுடுச்சு” என்றான் கேசவன்.

“ சொல்லுங்க, என்ன விசயம் கேசவன்?” .

தொடரும்….

"தேவர் யாம்!" என்பவரைத் தெவ்வர் எனல் - உதயபாஸ்கர் நாச்சிமுத்து

 



கயமை என்னும் அதிகாரத்தில் இடம்பெறும் ஒரு குறள்,


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் [குறள் 1073]


இந்தக் குறளில் மட்டுந்தான் வள்ளுவர் “தேவர்” என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், பரிமேலழகர் சொல்வதுபோல, கயவரைப் புகழ்வது போன்று வள்ளுவர் இகழ்கிறார் என்றுதான் தோன்றும். ஆழ்ந்து படிக்கும்போது, அதில் உள்ள அறச்சீற்றம் புலப்படும்.


பழந்தமிழரின் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வகை கொண்ட வாழ்வியலை முறையாகத் தொகுத்து வழங்குகிறது திருக்குறள். வள்ளுவரின் காலத்தில் தனிமனித ஒழுக்கத்தில் எவையெல்லாம் அறம், அறமற்றவை என்பதை அறத்துப்பாலில் தொகுத்திருக்கிறார். தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்வதே சமூக வாழ்வு, ஒழுக்கம் தவறினால் பிறப்பே இழிபிறப்பாகிவிடும் (ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - குறள் 133) என்கிறார் வள்ளுவர். அறத்துப்பாலில் தொகுத்திருப்பது போன்றே பொருட்பாலின் குடியியலிலும் அறம் சார்ந்த சமூக வாழ்வு, அறமற்ற சமூக வாழ்வு என்பவற்றை வகைப்படுத்தியிருக்கிறார். அறமற்ற சமூக வாழ்வின் தொகுப்பாக “கயமை” என்னும் பொருட்பாலின் கடைசி அதிகாரம் அமைந்திருக்கிறது. 


பெரும்பாலான அதிகாரங்களில் தலைப்பிற்கான இலக்கணம் முதற்சில குறட்பாக்களிலேயே விளக்கப்பட்டிருக்கும். கயமை அதிகாரத்திலும் முதன்மூன்று குறட்பாக்கள் கயமையை விளக்கிவிடுகின்றன. அறம் என்பதை “அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் - நான்கும் இழுக்கா இயன்றது அறம் [குறள் 35]” (பொருள்: தீயவழி, விருப்புவெறுப்பு, கோபம், கடுஞ்சொற்கள் ஆகிய நான்கும் தவிர்த்து வாழ்வதே அறம்!) என்று நேரடியாக விளக்கும் வள்ளுவர் கயமை என்பதைக் கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் விளக்குகிறார். 


கயமையின் முதற்குறள் தோற்றத்தை (Appearence) அடிப்படையாகக் கொள்கிறது. 


மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில் [குறள் 1071]


தோற்றத்தை வைத்து இன்னார்தான் கயவர் என்று அடையாளம் காண முடியாது என்கிறார் வள்ளுவர். இன்று தமிழ்த் திரைப்படங்களில் திருநெல்வேலிக்காரர்கள் என்றாலே கையில் அரிவாளோடு திரியும் முரடர்கள், வடசென்னைக்காரர்கள் என்றாலே சமூகவிரோதிகள் என்ற பிம்பம் அமைக்கப்படுகிறது. இங்கே இப்படி! ஆனால், வடக்கே இந்தித் திரைப்படங்களில் வரும் மதராசிகள் எல்லோரும் பட்டை போட்டுக்கொண்டு சாம்பாரை ஊற்றிக் குடிக்கும் நோஞ்சானான கோமாளிகள்! எண்பது தொண்ணூறுகளில் சர்தார்ஜிகள் எல்லோரும் முட்டாள்கள் என்பது போன்ற தோற்றத்தை அப்போதைய நகைச்சுவைத் துணுக்குகள் ஏற்படுத்தின. அவ்வளவு ஏன்? குறவர்கள் எல்லோரும் திருடர்கள் என்பதுபோல “கொறவன் மாதிரி முழிக்கிறான் பாரு!” என்றும், குயவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பதுபோல “சுத்தக் கொசவனா இருக்கிறே!” என்றும், பெண்கள் எல்லோரும் வலிமையற்றவர்கள் என்பதுபோல “மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா, ஒத்தைக்கு ஒத்தை வாடா பொட்டையா!” என்றும் சொல்வதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இவையெல்லாம் “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்னும் சமத்துவத்துக்கு எதிரானவை; அறமற்றவை! ஒருவரின் தோற்றம் அவர் நல்லவரா கெட்டவரா என்பதைத் தீர்மானிப்பதில்லை என்னும் வள்ளுவரின் சமத்துவப் பார்வையைப் பறைசாற்றும் குறள் கயமையின் முதற்குறள்! 


கயமையின் இரண்டாவது குறள் மனநிலையை (Attitude) அடிப்படையாகக் கொள்கிறது. 


நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர்  [குறள் 1072]


இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கயவர் என்பதை மட்டுமே எழுவாயாகக் (Subject) கொண்டு “நன்றை அறிந்தவரை விட கயவர்கள் தம் நெஞ்சத்தில் அவலமில்லாத திருவுடையர் (Luckier)” என்று உரையெழுதி இருக்கிறார்கள். அறமற்ற சமூக வாழ்வு வாழ்வதை இழிபிறப்பு என்று வரையறுக்கும் வள்ளுவர், சமூகவாழ்வுக்குப் புறம்பான கயவர்களை Luckier என்று ஏன் புகழவேண்டும்? 


கயமையின் முதலிரண்டு குறட்பாக்களைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் திருக்குறள் அறநூல் என்பது புரிபடவேண்டும். திருக்குறளைப் பொறுத்தவரை அறமே நன்று! அறம் அகம் சார்ந்தது; புறத்தோற்றம் சார்ந்ததன்று. கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் மனத்தில் அழுக்கை வைத்துக்கொண்டு புறத்தோற்றத்தில் நல்லவர்போல நடிப்பதை வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார். அதிலிருந்து சில குறட்பாக்கள்,


மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர் [குறள் 278]


வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின் [குறள் 272]


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின் [குறள் 280]


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும் [குறள் 275]


இவை நான்கும் ஒருசேர இவ்வாறு பொருள்படுகின்றன: “மனம் முழுக்க அழுக்கை நிரப்பிக் கொண்டு மாண்புடையவர்கள் போல வலம்வரும் பலர் இருக்கிறார்கள். தாம் செய்வதெல்லாம் தன்னலமிக்க குற்றம் (அநியாயம்) என்று தெரிந்தும் உயர்ந்த தோற்றம் பூண்டிருப்பதால் என்ன பயன்? மொட்டையடித்துக் கொண்டும், தாடி வளர்த்திக் கொண்டும் மெய்யறிவு பெற்றவர்போல் நடிப்பதெல்லாம் வேண்டாம்; உலகம் பழிக்கும் அறமற்ற இழிசெயல்களை ஒழித்துவிட்டாலே போதும்! தன்னை ‘பற்றேதும் இல்லாத சற்குரு’ என்று பறைசாற்றிக் கொள்வாரின் கயமை, பின்னர் வருந்தும்படியான நிலைக்கு அவர்களைத் தள்ளிவிடும்” 


உண்மையில், கயமையின் இரண்டாம் குறள்  Compare-and-Contrast முறையில் அமையப்பெற்ற இரண்டு எழுவாய்கள் கொண்ட குறள். கயவர்கள் அறம் என்பதை அறியாத தன்னலம் மிக்கவர்கள். அறனறியும் பேறு பெற்றவர்கள் (திருவுடையர்) தம் நெஞ்சத்தில் அவலம் இல்லாதவர்கள். ஏனெனில், அறனறிந்தவர்களின் மனம் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இல்லாதது. தன்னலமும், விருப்புவெறுப்பும், கோபமும் கொண்ட கயவர் நெஞ்சம் நாளும் அவலத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் என்பதே இந்தக் குறளின் பொருள்.


கயமையின் மூன்றாம் குறள்தான் முதலில் சொல்லப்பட்ட,


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் [குறள் 1073]


என்னும் குறள். இது கயவரின் பண்பைக் (Character) காட்டும் குறள். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தம் மனம் விரும்பியபடியெல்லாம் செய்து நடப்பதால் கயவரும் தேவரைப் போன்றவர் என்கிறார் வள்ளுவர். தேவரின் குணமும் கயவரின் குணமும் வேறுவேறல்ல என்பது இந்தக் குறளின் நேரடிப் பொருள். ஆனால், இதை பரிமேலழகர் கயவரைத் தேவரோடு ஒப்பிடும் வஞ்சப்புகழ்ச்சி என்று தன் உரையில் சொல்கிறார். ஏனெனில், வடமரபின் தாக்கத்தால் வானோர் என்பதையும் தேவர் என்பதையும் ஒரேபொருளில் பார்க்கிறார் பரிமேலழகர். ஆனால், வானோர் வேறு தேவர் வேறு என்பது வள்ளுவரின் பார்வையாக இருக்கிறது. 


வானோர் என்பதை வள்ளுவர் இவ்வாறு வரையறுக்கிறார்:


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் [குறள் 50]


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு [குறள் 86]


யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த உலகம் புகும் [குறள் 346]


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி  [குறள் 25]


இவற்றின் பொருள்: “அறனறிந்து, மக்களை நேசித்து, விருப்புவெறுப்பற்று, மக்களுக்காக வாழ்ந்தவன் வானுறையும் தெய்வமாக மக்களால் போற்றப்படுவான். அறஞ்சார்ந்து விருந்தோம்பி வாழ்வாங்கு வாழ்ந்தவன் இறந்தபின் வானத்தவர்க்கு நல்விருந்தினனாக ஆகிறான். தான், தனது என்னும் தன்னலமற்று வாழ்பவன் வானோரைவிட உயர்ந்த உலகம் புகுவான். ஐம்புலன்களையும் அடக்கி விருப்புவெறுப்பற்று வாழ்ந்ததற்கு வானோர் தலைவனான இந்திரனே சான்று!


வானுறையும் தெய்வம் வானோர். அவர்கள் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள்! இறந்த பின்பும் தன்னலமற்று மக்களைக் காப்பார்கள் என்பது மக்களின் நம்பிக்கை. இதுவே, தமிழரின் முன்னோர் வழிபாட்டின் ஆணிவேர்! கருப்புசாமியை வழித்துணைக்கு அழைக்கும் வழக்கமெல்லாம் இந்த நம்பிக்கையிலிருந்தே எழுகிறது. 


வானோர் என்பது தமிழ்ச்சொல். தேவர் என்பது வடசொல். தேவர் என்னுஞ்சொல்லை மட்டுமே வள்ளுவர் கயமை அதிகாரத்தில் பயன்படுத்தியிருக்கிறார். வானோர் என்பதை விளக்குவதுபோல தேவர் என்பதை விளக்கவில்லை. மாறாக, தேவரும் கயவரும் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்யும் குணத்தால் ஒன்றே போன்றவர்கள் என்கிறார். விருப்புவெறுப்பு அறத்துக்கு எதிரானது! வள்ளுவர் வரையறுக்கும் வானோர் வாழ்நாள் முழுக்க தன்னலமற்று வாழ்ந்து, இறந்த பின்பும் தன்னலமற்று மக்களைக் காப்பவர்கள். அதனால்தான் மக்கள் தம் குறைதீர தெய்வத்தை நாடுகிறார்கள். ஆனால், தேவர்கள் மக்களைக் காப்பவர்களாக எந்தக் கதையும் இல்லை; மாறாக, தேவர்கள் தம் குறையைத் தீர்த்துக்கொள்ள தன்னலத்துடன் ஆற்றல் மிக்க விஷ்ணுவிடம் முறையிடுபவர்கள் என்றுதான் புராணக்கதைகள் கூறுகின்றன. 


மேலும், தேவர் தலைவனும் இந்திரன். வானோர் தலைவனும் இந்திரன். தேவர் தலைவன் அகலிகையின் புற அழகில் மயங்கி முறைதவறி நடந்தவன். வானோர் தலைவன் ஐம்புலன்களையும் அடக்கி விருப்புவெறுப்பற்று அறவாழ்வுக்குச் சான்றாக வாழ்ந்தவன். தேவர் தலைவனுக்கு இந்திரன் என்பது பதவி. வானோர் தலைவனுக்கு இந்திரன் என்னும் அடைமொழி அவனின் ஒப்பற்ற அறவாழ்வுக்குக் கிடைத்த சிறப்பு! இருவரும் வேறுவேறு!


ஏழே சீர்கள் கொண்ட குறளில் தேவர் என்னும் வடசொல்லை “கயமை” என்னும் அதிகாரத்தில் கயவரின் குணத்தைக் (Character) குறிக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கும் மதிநுட்பம் வள்ளுவரின் அன்றைய அரசியல். நீரும் எண்ணெயுமாக ஒட்டியும் ஒட்டாமலும் தென்னாட்டில் பயணிக்கும் வடமரபும் தென்மரபும் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ளும் இந்த அரசியல் இன்றுவரை தொடர்கிறது. சென்ற நூற்றாண்டில் பாவேந்தர் பாடிய “திராவிடர் திருப்பாடல்” என்னும் பாடல் இந்த அரசியலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருந்தும் அந்தப் பாடலிருந்து சிலவரிகள்: 


கோவாழும் இல்லொன்றே கோவிலாம், மற்றவை

நாவாலும் மேல்என்னோம்! நல்லறமே நாடுவோம்!

தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்!

சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம்!

வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்!

மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்

தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க

பாவையரே, காளையரே பல்லோரும் வாரீரோ! 


[பொருள்: மக்களைக் காக்கும் அறம்சார்ந்த தலைவனின் இல்லமே கோவிலாம்; மற்றவை, எதுவும் மேலான இடமில்லை! அறவாழ்வு வாழ்வோம. “நாங்களே தேவர்கள்” என்பவரை எதிரிகள் என எதிர்ப்போம்! “இறப்புக்குப் பின்னான சாவில்லாத மறுவாழ்வு” என்பதில் ஒப்புதல் இல்லை. “புண்ணியம் செய்தால் சொர்க்கம்” என்ற வரவுசெலவுப் பயனை எதிர்பார்ப்பதில்லை! இந்தக் கொள்கை நிரம்பிய திராவிடத்தைத் வீழ்த்த வடக்கர் தாவி வந்தார்! அவர்களை எதிர்க்க இளைஞர்களே இளம் பாவையரே திரண்டு வாருங்கள்!]


வழிப்போக்கர்கள் வரட்டும் போகட்டும் - Dr.K.தமிழ்செல்வன்

 


      நான்கு சக்கர வாகனம் (கார்) ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த நமது தம்பதியினர் காருக்குள் அவர்களுடைய பையனும் ஒரு வயதான மூதாட்டியும் உடன் இருந்தனர்.முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு நான்கு சக்கர வாகனம் தன் பாதையை விட்டு சற்றே வலது பக்கமாக ஏறி பாதையின் குறுக்கே வர மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு பயணம் செய்த ஒரு நபர் வாகனத்தை சற்றே கட்டுப்பாடு இழந்த நிலையில் தாறுமாறாக   குறுக்கே வர, நமது தம்பதியினர் சென்று கொண்டிருந்த காரை ஓட்டிக்கொண்டு வந்த கணவருக்கு கோபத்தை உண்டாக்கியது.


சற்று காரை வேகமாக ஓட்டிச் சென்று அந்த இருசக்கர வாகனத்தை முந்தி தன்னுடைய வாகனத்தை குறுக்கே இட்டு காரின் கண்ணாடியை இறக்கி  'இப்படித்தான் வண்டி ஓட்டுவியா?' என்று வசை பாட அந்த இருசக்கர வாகன 'ஓட்டி நான் அப்படித்தான் ஓட்டுவேன்.உன்னோட விருப்பத்துக்கெல்லாம் என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ எல்லாம் யார் என்னை வந்து கேள்வி கேட்க' என்றெல்லாம் பதில் பேச, நான்கு சக்கர வாகன ஓட்டிக்கு இந்த பதில் கோவத்தை அதிகமாக்கியது.

சில தகாத வார்த்தைகளையும் இருவரும் மாறி மாறி பிரயோகப்படுத்திக் கொண்டு காரை விட்டு இறங்க எத்தனிக்க காருக்குள் இருக்கும் மனைவி 'வேண்டாம்.நாம் செல்ல வேண்டிய வேலை இருக்கிறது அல்லவா செல்லலாம்' என்று கணவனை மீண்டும் சமாதானப்படுத்தி காருக்குள்ளேயே இருக்க வைத்தார். இரு சக்கர வாகன ஓட்டி தன் பங்கிற்கு சீறிக்கொண்டு வர பின்புறம் இருந்த அவரது மனைவி அவரை தோளில் பிடித்து 'வேண்டாம்.நீங்கள் அமைதியாக இருங்கள், என்று சொல்வதும் இப்படியாக சில நிமிடங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கையில் பின்னால் வந்த சில வாகனங்கள் இதில் இடை மறிக்கப்பட்டு நின்று கொண்டிருப்பதும் மாறி மாறி ஒலிபெருக்கியை இயக்குவதுமாக இருந்தது.

வசைகளுடன் தொடர் ஒலிப்பெருக்கி ஓசைகளும் நாராசமாக வாகனத்தை எடுத்துக்கொண்டு லேசாக நகர்வதும் அதன் பிறகும் கூட சில குறிப்பிட்ட நிமிடங்கள் அந்த இடம் அமைதி இழந்ததே காணப்பட்டது போல ஒரு உணர்வு. 

சில மணி நேரங்கள் வரை கூட அந்த காருக்குள்ளே பயணம் செய்த பயணிகள் இடையேயும் சரி அந்த சக்கர வாகனத்தில் பயணம் செய்த பயணிகள் இடையேயும் சரி, ஒரு சிறு புன்முறுவல் கூட இல்லை. ஒரு சிறு மகிழ்ச்சியில்லை. ஒட்டுமொத்த நிம்மதியும் இழக்க வேண்டி இருந்தது.

நமது தம்பதியினர் இது போன்ற ஒன்றுமில்லாத சண்டைகளை ஒன்றாக சேர்த்து கட்டிவைத்து பெரும் சுமையாக்கி விவாகரத்து வரை பயணிக்க தயாராக இருந்து தற்போது முடிவை மாற்றிக்கொண்டு மகிழ்வானதொரு குடும்பமாக மாறியுள்ளனர்.இதற்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் பக்கமாக நேரம் மற்றும் கிளினிக்கில் நாங்கள் அனைவருமே படாத பாடு பட்டு இப்போது தான் சற்றே பெரு மூச்சு விட்டிருக்கிறோம்.

கிளினிக்கில் வந்து ஒன்றாக அமர்ந்த நமது தம்பதியினர் வழக்கம் போல இது ஒரு பெரிய பிரச்சனை  போல சொல்லிக்கொண்டிருக்கையில்.....
கேட்டுக்கொண்டேயிருந்த எனக்கு எங்களுக்கிடையில் கிடைத்த தேநீர் இடைவெளி (அதாங்க லெமன் டீ போன்ற ஒரு பாணம்)......'இது கிளினிக்கா? இல்லை குட்டி குடும்ப நல நீதிமன்றமா?' என எங்களை என்றோ இவர்கள் உறவினரே கேலி செய்ததும், 'இங்கு நாங்கள் இதுவரை யாரையும் பிரிந்து போக விட்டதில்லையே' என்ற பதிலுக்கு பின் சில நாட்கள் கழித்து 'இவர்கள் வாழ்வில் நீங்கள் நிகழ்த்தியது பெரிய விஷயம் டாக்டர்' என்று அவரே அழைத்து  ஆமோதித்ததும்  நினைவில் வர, அதோடு கூட வந்த நினைவலைகள் அளித்த பதில்கள் உரையாடல்கள்...அவர்களோடு வாசிக்கும் உங்களுக்குமாக...

    இதையெல்லாம் தவிர்க்க அவரவர் வாகனத்தை அவரவர் நிதானமாக ஓட்டுவதும் சரியாக ஓட்டாதவர்களை நாம் குறுக்கிட்டு மறித்து அவர்களை பேசி அவர்களை திருத்து முயற்சி செய்வதை விட்டுவிட்டு நாம் செல்ல வேண்டிய பாதை, நமது பயணம்,நமது குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுதல் இதையெல்லாம் குறிப்பிட்டு செய்தாலே போதும். நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் அடுத்தவர் வாழ்க்கையும் கூட சேர்ந்து இதில் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதை விடுத்து நாம் அவர்களுக்கு அறிவுரை சொல்வதோ அவர்களை திருத்துவதோ அல்லது அவர்களுடன் வாதாடுவதோ என்று நம்மை மீண்டும் மீண்டும் மனச்சுமைக்கு மற்றும் வெறுப்புக்கு உள்ளாக்கி அவர்களையும் மனச்சுமைக்கு உள்ளாகிறோம். இதை தவிர இதில் வேறு பலன் எதுவும் இல்லை.அவர்களும் ஒருபோதும் தான்  தவறு செய்து விட்டதாக நினைக்கப் போவதில்லை.நாமும் நம்மை நாமே அவர்களை  மாற்றிவிட்டதாக நினைத்து பெருமை கொள்ள போவதில்லைை. நாமும் வெறுப்படைந்து அவர்களையும் வெறுப்படையை வைத்து நமது குடும்பத்திலும் நிம்மதி இழந்து, அவர்களது குடும்பத்திலும் நிம்மதி இழந்து இந்த பயணத்தை தொடர போகிறோம்.

பள்ளியில் பல நாட்கள் படித்த நண்பன் முகம் ஞாபகம் இல்லை. மறந்து விட்டோம். கல்லூரியில் படித்த தோழி நினைவில்லை. அடையாளம் தெரியவில்லை.மறந்துவிட்டோம். அவர்களுக்கு கூட செய்யாத நன்மையை அறிவுரையை இந்த வழிப்போக்கர்களுக்கு உடனடியாக வழங்கி நன்மையை செய்து நல்ல பேரை நாம் வாங்கி நல்ல வழியை அவர்களுக்கு வழங்கி விடப்போகிறோமா என்ன?

நம்முடன் வாழ்க்கையில் பயணித்த, பயணிக்க போகும் உறவுகளை, நபர்களை மாற்றத்தை நோக்கி அழைத்து செல்ல அறிவுரைகளை கூறி அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவதற்காக திட்டங்களை வகுத்து செயல்படுவோமேயானால் அது நன்று.அன்றி யாரோ ஒரு வழிப்போக்கரின் வாழ்வில் நமது கோபத்தை கொட்டி தீர்ப்பதற்கென முற்படும்போது நாம் எதிர்மறையானவற்றை மட்டுமே வழங்கி நாமும் அனுபவிக்கிறோம்.

வழிப்போக்கர்கள் வழிப்போக்கர்கள் தான்.அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். நாம் நம்முடைய பயணத்தை இனிமையாக தொடர வேண்டி இனியாவது வழிப்பயணத்தில் குறுக்கே வருபவர்களை நாமும் குறுக்கிட்டு சென்று திட்டி, நமது நிம்மதியும் இழந்து நமது வீட்டில் குடும்ப சூழ்நிலையை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றுவதை நிறுத்துவோம்.இது போன்ற சூழ்நிலைகளில் புன்னகையுடன் ஒரு சிறு தலையசைவை மட்டும் தெரியப்படுத்துவோம்.

மாறாக சரியாக சாத்தப்படாத கார் கதவுகள், இரு சக்கர வாகனங்களில் சக்கரத்தில் சிக்க வாய்ப்புள்ள புடவைகள் அல்லது முந்தானைகள் மற்றும் தூங்கிய குழந்தைகள் இவற்றை பற்றி ஓட்டநருக்கு தெரியப்படுத்தி இப்போது நேர்மறையான செயல்களைச் செய்வோம்.நேர்மறையான  எண்ணங்களை பெறுவோம்.இனி வருங்காலங்களில் நம் மீது நாமே பெருமை கொள்வோம்.

அப்போதும் கூட வழிப்போக்கர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.அவர்கள்  வழிப்போக்கர்கள் வரட்டும் போகட்டும்.அவர்களுக்கு தங்குவதற்கான சத்திரம் நாம் நிம்மதியாக வாழும் நமது இல்லறமோ, இல்லமோ அல்லது நமது உள்ளமோ அல்ல.அவரவர்கள் அவரவர்கள் வழிகளில் போகட்டும். 

பவானி2 நொய்யல் - காலிங்கராயன் தடம் 9 - க்ருஷ்

 


பெரும் பாறைகளின் மேலிருந்த கோவிலை அங்கங்கு காங்ரீட் பில்லர்கள் போட்டு வலிமை கூட்டி சற்று விரிவு படுத்தி இருந்தார்கள்.   கோயிலில் சற்று செயற்கை கூடி இருந்தது.  மக்கள் அங்கங்கு கொழுமாங்கற்களை அடுக்கி அடுக்கி வைத்து இருந்தார்கள்.  காவிரி நிரம்ப நீர். ஒரு பக்கத்தில் படிக்கட்டுகள் மூன்று நான்கு காவிரியில் இறங்கியது.  தேங்கி இருந்த தண்ணீர் தெளிவாக இருந்தது. அக்கரையில் மரங்களின் பசுமைச் சோலையின் ஊடாக ஒரு கட்டிடம் மிக அழகாக தெரிந்தது.   அந்த படிக்கட்டுகளில் இறங்கி கால் நனைத்தோம்.  


அங்கு ஒரு சிறுவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தான்.  அவன் தூண்டிலில் பயன்படுத்தியது புழு அல்ல.  தூண்டிலை ஆற்றில் வீசிவிட்டு பையில் இருந்து ஏதோ ஒன்றை ஒரு கைப்பிடி  எடுத்து வீசினான்.   அந்த நேரத்தில் அதனைச் சாப்பிட வரும் மீன்களில் ஏதோ ஒன்று தூண்டிலில் மாட்டிக் கொள்கின்றது. 

”என்னடா தம்பி எடுத்து வீசறெ…”  

”சப்பாத்தி மாவுண்ணா”

சப்பாத்தி மாவு சின்ன சின்ன உருண்டைகளாக செய்து பையில் வைத்து இருந்தான்,  அப்படியே ஆற்றில் தூக்கி வீசினான்.   நாங்கள் இருந்த சிறிது நேரத்தில்  ஒவ்வொரு குத்து  சப்பாத்தி மாவை வீசும் பொழுதும் ஏதேனும் ஒரு மீன் மாட்டிக் கொண்டிருந்தது.  

 "பரவால்லடா.. சூப்பர்.." என்றதும் 

"குருட்டாம் போக்குல கிடைக்குதுண்ணா" என்றான்.  இவனின் யோசனை இப்படி. 

அந்த அழகை வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அங்கு வந்தான் அவனுடைய ரெட் டீசர்ட் நண்பன்.  ஒரு பெரிய கல்லை எடுத்தான்.   இவன் "டேய்.. போட்றாதடா... மீனெல்லா எட்ட போயிரும் போடாதடா போடாதடா " என்று கத்தினான்.   அவன் கேட்கவில்லை.  அந்த கல்லை ஆற்றில் அடித்தான்.  அண்ணன் அவனிடம் “என்னடா தம்பி அடிச்சே ”

”மீனு” என்றான்.  இருவர்க்கும் சிரிப்பு தாளவில்லை.   இவனின் யோசனை இப்படி.  இந்தப் பயணத்தின் தொடக்கத்தில் பெட்டியை வைத்து மீன்  பிடித்தார்கள்.  ஒவொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஐடியாக்கள்.  


சமீபத்தில் தான் கிழவனும் கடலும் படித்திருந்ததால் அது பற்றிய உரையாடல் அந்த கண நேரத்தில் எங்களுக்குள் வந்து சென்றது. எந்த வயதிலும் மனிதர்களின் முயற்சி என்பது அயராத ஒன்று. 


அந்த இடம் விட்டு அகன்றோம்.  அங்கங்கு மரங்கள் அந்த இடத்தை குளு குளு என வைத்து இருந்தது.  அந்த தீவுக்கு எங்களை கூட்டி வந்த பாலம் நீல வண்ணத்தில் வானோடு சேர்ந்து மிளிர்ந்தது.  அங்கங்கு செல்பி  எடுத்துவிட்டு தீவின் கரையை ஒட்டி முக்கால் சுற்று வந்து படி ஏற முயன்றோம்.   ஒரு புறம்  கற்கள் அதிகமாக இருந்ததால் முழு சுற்று வர இயலவில்லை.  


படியில் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார்.  வயதான பெரியவர். சுருக்கம் விழுந்த கண்கள். சட்டை இல்லை.  அவராகவே அறிவித்தார் “ சீக்கிரம் போங்க ஒரு மணிக்கு பூட்டிடுவாங்க”.   இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருந்தது.  

“எப்ப பாலம் கட்டினாங்க” என்றேன்.

 “இங்க தான் பரிசல் ஓட்டிக்கிட்டு இருந்தேன்..  ஒரு பத்துப் பாஞ்சு,  வருசமாயிருக்கும்ன்னு நெனைக்கிறேன்.  அதுக்கப்புறம்  ஓட்டறது இல்லை” என்றவர் ”சன் டிவியில் இருந்தெல்லாம் வந்து எங்கட்ட பேசிட்டு போனாங்க” சிரித்துகொண்டே கூறினார். 


அவருக்கு துடுப்பு போடுவதைத் தவிர வேறு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   வேறு எதை எதையோ பேசிக்கொண்டே இருந்தார்.   காது சரியாக கேட்கவில்லை. படகோட்டிக் கொண்டிருந்த மனிதர் இன்று கோயிலுக்கு சேவகம் செய்து கொண்டிருந்தார்.  இவர்களுக்கு யாரிடமேனும் எதையேனும் கதைகளைக் கூறிக்கொண்டு இருந்தால் கூட போதுமானது.  வாழ்க்கை மிக எளிமையானது. அவரின் சக படகோட்டிகள்  என்னவாகி இருப்பார்கள் என்ற கேள்வி எனக்கு எழாமல் இல்லை.  காலம் யாருக்கும் நிலையான ஒன்றைத் தருவதே இல்லை.  ”Survival of the fittest” என்று மனிதர்களும் காலச் சூழலுக்கு மாறிக்கொண்டுதான் உள்ளார்கள். 


படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றோம்.  உள்ளே சிவன் கோவிலுக்கு உண்டான அத்தனை அமைப்புகளும் இருந்தது.  ஒரு பெரிய கொலுமாங்கல் தான் சிவனாக இருந்தது. ‘இதுவும் கருப்பண்ணசாமி  தானோ?’    காலச் சூழலுக்கு கடவுளும் மாற்றம் அடைந்திருக்கலாம்.   ஒரு கல் நட்டு ஆரம்பித்து இருப்பார்கள் ஆதியில் அங்கு இருந்தவர்கள்.   படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றாக சேர்க்கப்பட்டு கோவில் கட்டப்பட்டு இருக்கும்.    தற்போது கிரானைட் போடப்பட்டு தூய்மையாக இருந்தது. அனைத்து இடங்களிலும் ஷெட் போடப்பட்டு மழை வந்தாலும் நனையாமல் இருக்கும் அளவு வைத்திருந்தார்கள்.   இது எல்லாமே சமீபத்தில் நிகழ்த்தவை.  நான் கடைசியாக 20 வருடங்களுக்குப் முன் பார்த்தற்கும், தற்போதைக்குமே எவ்வளவு வித்தியாசம். 



வெளியே ஒரு சுவரில் யாரோ ஒரு கவிஞர் அவருக்கு தெரிந்த வகையில் கவிதை என கேள்விகள் கேட்டு சிவனைப் போற்றி எழுதி வைத்து இருந்தார்.  கோவிலுக்கு பூசை செய்யும் அரச்சகர்கள்,  அன்று மாலை நடைபெற இருந்த லட்சார்ச்சனைக்கு பரபரப்பாக திட்டமிட்டுக்கொண்டு இருந்தார்கள்.  அவர்களிடம் சற்று பேச ஆரம்பித்தோம்.  


”உங்களுக்கு நினைவு தெரிஞ்சு தண்ணீர் மேலே வந்து இருக்காங்க?”   எனக்கு சிறு வயதில் செவி வழியாகக் கிடைத்த செய்தியை கேள்வியாக எழுப்பினேன்.  

ஒரு பழங்கதை இக்கோயில் பற்றி எங்கள் ஏரியாவில் உண்டு.  முன்னொரு காலத்தில் தண்ணீர் சிவன் இருக்கும் இடம்வரை சென்றது. பூசை செய்ய வந்த அர்ச்சகரினால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. சிவனை கட்டித்தழுவிக் கொண்டாராம்.  அதன்பிறகு ஆற்றுநீர் படிப்படியாக குறைந்தது என்பார்கள்.    ’இல்லங்க’ என்றார்.    லாஜிக்கலாக தற்போது வருவதற்கான வாய்ப்பு குறைவுதான்.  காவிரியில், பவானியில் எந்த அணையும் இல்லாத  கால கட்டத்தில், ஒருவேளை உண்மையாக நடந்திருக்கலாம். 


அதன் பிறகு எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.  “இங்க  புத்தக வெளியீடு  வைக்களாங்களா?”  என்றோம்.  அவர் சரி என்றோ,  வேண்டாம் என்றோ கூறவில்லை.  ஒரு சில ஏரியா பெருந்தலைகளைக் குறிப்பிட்டு ‘அவங்ககிட்ட பர்மிசன் கேளுங்க’ என்றார்.   உரையாடல்  தொடர்ந்தது.   இறுதியில் “எழுதறது ரொம்ப நல்ல விஷயம். அப்படியே ஆன்மீகம் பத்தியும் நிறைய எழுதுங்க..” என்றார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.  


இந்த இடம் காவிரி ஆற்றின் ஆரம்பம் தலைக்காவிரிக்கும், கடலில் கலக்கும் இடத்திற்கும் நட்ட நடுவில் உள்ள இடம் என்றார்.  உண்மையா என தெரியவில்லை.   ’அகஸ்த்தியரை’ வைத்து ஒரு ஸ்தல புராணம்  இருந்தது.  20 வருடம் முன் அந்த  ஸ்தல புராணம் இருந்த நினைவு எனக்கு இல்லை.  அந்தக் கதையைக் கூற ஆரம்பித்தார்.  ஒருவாறு சமாளித்து விடைபெற்றோம்.  


- தொடரும்

புரிதல் - ராதா மனோகரன்

 


        5 அடி 6 அங்குலத்தில் ஆஜானுபாகுவாக இருக்கும் அந்த ஆங்கில ஆசிரியை 13 வருடங்களாக இந்தத் துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். துறைக்கும், பள்ளியின் தேர்ச்சி விகிதத்திற்கும் பெரும் பங்கை அளிப்பவர். நடு இரவில் எழுப்பினாலும் என்ன என்றில்லாமல் வாட்? என்றுதான் கேட்பார். பள்ளி வளாகத்தில் கேட்கவே வேண்டாம், தவறிக்கூட தானும் தமிழில் பேச மாட்டார். அவர் மூச்சுக்காற்று விரவும் தொலைவு வரை யாரையும் தமிழில் பேச அனுமதிக்கவும் மாட்டார். இத்தனைக்கும் அவரொன்றும் நகரத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து வாழ்ந்தவரில்லை. கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான  ஒரு ஊரில் அரசுப் பள்ளியில் படித்து வந்தவர். தன் ஆசிரியப் பணி மீதுள்ள பற்று காரணமாகவே தன்னை உயர்த்திக் கொண்டவர். ஒரு சி.பி.எஸ்.சி பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியைக்கு உரிய, அதற்கு சற்று மேலான தகுதிகளும் அவருக்கு உண்டு. உடையில் நேர்த்தியும், நடையிலும் பேச்சிலும் ஒரு அவசரமும், பரபரப்பும் எப்போதும் இருக்கும். 

அன்று காலை தலைமை ஆசிரியை வரும் முன்பே அவரது காத்திருப்பு அறையில் காத்திருந்தார் அந்த ஆசிரியை. தலைமை ஆசிரியை உள்ளே நுழைந்தவுடன் வழக்கமான புன்னகையை உதிர்த்து விட்டு அவரது அறைக்குள் நுழைந்தார். 5 நிமிடத்தில் அவரிடமிருந்து அந்த ஆசிரியைக்கு அழைப்பு வந்தது.

அவரது முகம் இயல்பு நிலையில் இல்லாததைக் கவனித்தவாறே “எஸ், மிஸ். பிரபா, மே ஐ நோ த ரீசன் பார் யுவர் பிரசன்ஸ் ஹியர்? என்றார் தலைமை ஆசிரியை. 

கேட்டதுதான் தாமதம், வெயிலில் காய வைத்த தீபாவளிக் கம்பி மத்தாப்பு பற்ற வைத்தவுடன் ஒரு கண இடைவெளி விட்டுப் பொரிவது போல அவரும் ஒரு நொடி தாமதித்துப் பொரிய ஆரம்பித்தார்.  “மேம், புவன்  இனிமே என் கிளாசில் இருக்கக் கூடாது, அவனுக்கு இனிமே நான் கிளாஸ் எடுக்க மாட்டேன்,அவனால் நேற்று இரவு முழுக்க எனக்குத் தூக்கம் இல்லை...இத்தனை வருட அனுபவத்தில் ஒரு மாணவன் கூட என்னிடம் இப்படி நடந்து கொண்டதில்லை, என்னை இப்படி அவமதித்ததும் இல்லை. எனக்கு ரொம்ப மன அழுத்தமா இருக்கு ........ பேச்சுக்கு இடையில் மூச்சு விட்டாரா என்று கூடத் தெரியவில்லை.

தலைமை ஆசிரியை அவர் சிறு இடைவெளி விடும் வரை பொறுமையாகக் காத்திருந்து “வாட் ஹாப்பன்ட்? என்று கேட்டார்.

மத்தாப்பு மீண்டும் பொரியத் துவங்கியது. “நேற்று ஈவ்னிங் ரிவிசன் அப்போ நான் ஒரு வொர்க் குடுத்திருந்தேன்...எல்லோரும் எழுதிட்டு இருந்தாங்க. நான் ரவுண்ட்சில் இருந்தேன். நான் புவனோட டெஸ்க் கிட்ட போனதும் நோட்டுக்குள்ள ஒரு பேப்பரை மடித்து வைத்தான். பேப்பரைக் குடுன்னு வாங்கிப் பாத்தா கொடுத்த வேலைய செய்யாம ஏதோ கிறுக்கி வெச்சிருக்கான்”  அத்தனை கோவத்திலும் அந்த ஆசிரியையின் ஆங்கிலப் புலமை தலைமை ஆசிரியரை வியக்கச் செய்தது. 

“என்ன எழுதி இருந்தான் பேப்பர்ல?”  யோசனையுடன் கேட்டார் தலைமை ஆசிரியை.

“தெரியல மேம், இங்கிலீஷ் பீரியட்ல தமிழ்ல எழுத என்ன இருக்கு? பேப்பர்ல பாதிக்கு மேல தமிழ், லவ் லெட்டர்ன்னு நினைக்கிறேன், ... டென்சன் இறங்காமலே பேசிக் கொண்டிருந்தார்.

“அந்தப் பேப்பர் எங்க? தலைமை ஆசிரியை. 

“கிழிச்சு டஸ்ட்பின்ல போட்டுட்டேன்......  மேம், இப்போ அதில்ல பிரச்சினை... நெறைய தடி மாடுங்க ஹையர் கிளாஸ் வந்துட்டா செய்யறது தான் .... பிரச்சினை என்னன்னா செய்யறதையும் செஞ்சுட்டு தெனாவெட்டா நிக்கிறான் கிளாஸ்ல,  ஒரு ஸாரி கேட்ருந்தா கூட விட்ருப்பேன், பேப்பரை குடுன்னா  தைரியமாக் குடுக்கிறான், கிழிச்சுப் போட்ட பின்னாடியும் ரிக்ரெட் பண்ணவே இல்ல, பிரின்சிபல் கிட்ட போலாம்ன்னா திமிரா ஓகேங்கறான்...என்ன திமிரான்னு கேட்டா நான் தப்புப் பண்ணலை தாராளமா பிரின்சிபல் கிட்ட போலாம் அப்படின்னு சொல்றான்”

இந்த உச்சகட்ட ஆத்திரத்தில் தான் அவரின் பேச்சு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு திசை திரும்பியது.

முப்பது நொடிகள் ரெஸ்ட் எடுத்துத் தொடர்ந்தார் “ இவன் இப்படிப் பேசினா மத்தவங்க எப்படி என்ன மதிப்பாங்க? உங்க கிட்ட அனுப்புவேன்னு சொன்னாலும் திமிரா நின்னா நாங்க எப்படி பசங்களைக் கண்ட்ரோல் பண்றது? சோ அப்செட்டிங் மேம்...”

“டோன்ட் பி அப்செட் மிஸ்.பிரபா,  பாத்துக்கலாம்.... புவன் பொதுவா அப்படி செய்ய மாட்டன்நல்ல ஸ்டூடண்ட் தான்....என்னன்னு தெரியலையே .....சரி புவனை வந்து என்ன பாக்க சொல்லுங்க..... யூ கோ அஹெட் வித் யுவர் ரிவிசன்.....” புவன் பல வருடங்களாக விடுதியில் தங்கிப் படிப்பதால் அவனைப் பற்றித் தலைமை ஆசிரியைக்கு நன்றாகவே தெரியும்.

“மேம், சாரி டு சே திஸ், யூ ப்ளீஸ் பி ஸ்ட்ரிக்ட் வித் ஹிம், அண்ட் ஷிப்ட் ஹிம் டு சி செக்ஷன் “ சிவந்த முகம் மாறாமல் கிளம்பினார் பிரபா. 

“மே ஐ கெட் இன் மேம்?”  மெதுவாகத் திறந்த கதவின் இடைவெளியில்  புவன் தலை மட்டும் தெரிந்தது

“யெஸ், கெட் இன் ...”

புவனுடன்  காவல்காரர்களாக இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும்  வந்திருந்தனர்

“என்ன நடந்ததுன்னு கேள்விப்பட்டேன், நீ என்ன சொல்ற புவன்?” 

கேட்ட தலைமை ஆசிரியையிடம் அவன் ஒரு வேண்டுகோள் வைத்தான்  “மேம், ஒரே ஒரு சான்ஸ் குடுங்க .... இங்லிஷ் மேம் கிழிச்ச பிட் பேப்பர்ஸ ஒட்டித் தரேன் நீங்க படிச்சிட்டு என்ன சொல்றீங்களோ அதை  நான் கேக்கறேன்”  மிகவும் பணிவான ஆனால் தீர்க்கமான உடல் மொழி 

“ பிட் பேப்பர்ஸ் எங்க .....”  

“டஸ்ட்பின்ல  இருந்து கலக்ட் பண்ணி ஒரு கவர்ல போட்டு  என்னோட பேக்ல வெச்சிருக்கேன் மேம்”

தலைமை ஆசிரியை உடற்கல்வி ஆசிரியர்களிடம்  அவனது பேக்கில் இருந்து அந்தக் கவரை எடுத்து வரச் சொன்னார்.

கட்டளைக்குக் காத்திருந்த ராணுவ வீரர்களின் நேர்த்தியோடு இருவரும் நகர்ந்தனர்.

திரும்ப வந்து அந்தக் கவரைக் கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பும் எதையோ கண்டுபிடித்துவிட்ட தோரணையும் இருந்தது. 

மெதுவாக ஏதோ சொல்ல வந்த ஒரு ஆசிரியரிடம் பார்வையால் கிளம்ப  சொல்லி புவனிடம் அந்தக் கவரைக் கொடுத்தார் தலைமை ஆசிரியை.

துண்டுக் காகிதங்களை அவன் மிகுந்த சிரத்தையுடன் ஜிக் ஜாக் பஸில் போல சிரமப்பட்டு அடுக்கிக் கொண்டிருந்தான். 

தலைமை ஆசிரியை அவன் அடுக்கட்டும் என விட்டு விட்டு  ரவுண்ட்ஸ் சென்ற பொழுதுதான் தெரிந்தது பாதி பள்ளிக்குள் அது ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது. நல்ல விசயங்கள் காதுகளை அடைய எடுத்துக் கொள்ளும் கால அளவில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் எடுத்துக் கொள்வதில்லை.  சில சமயங்களில் அதைப் பரப்புவதில் மாணவர்களுக்கு மேல் ஆர்வம் காட்டுபவர்கள் சில  ஆசிரியர்கள்தான் என வேதனையோடு நினைத்துக் கொண்டே  திரும்பி அறையை நோக்கி நடந்தார். 

அறைக்குள் வரும்போது அந்த ஒட்டுப் போட்ட காகிதம் ஓரளவு படிப்பதற்கு தயாராக இருந்தது. 

அதை வாங்கி சிரமப்பட்டு படிக்க ஆரம்பித்தார்.

“இதை நீ மிஸ். பிரபாவிடம் சொல்லி இருக்கலாமே ? இது  இவ்வளவு  தூரம் வளர்ந்திருக்காமல் அங்கேயே முடிந்திருக்குமே புவன்” ஆச்சர்யத்துடன் கேட்ட அவருக்கு புவனிடமிருந்து  வந்த பதில் ” மேம், காது குடுத்திருந்தா சொல்லி இருப்பேனே .....   “ if you were a car designer.....“ write an essay in about 750 words... இதுதான் மேம் குடுத்த அசைன்மென்ட்.... எழுத ஆரம்பிச்ச உடனே சுவாரசியத்தில் என்னை அறியாம நான் தமிழும் கலந்து எழுதிட்டேன். ஏன்னா ரேஸ் கார் டிசைன் பண்றது  என்னோட கனவு.  தமிழும் கலந்து  எழுதினது தப்புதான், பட் அது அவுட் ஆப் இண்டரஸ்ட், அதுக்கு கண்டிப்பா நான் சாரி கேட்ருப்பேன்....அதுக்கு வாய்ப்பே இல்லை அங்க... மேம் கேட்டவுடனே பேப்பர் குடுத்திட்டேன், அப்பவாவது படிச்சு பார்த்திருக்கலாம்... கையில் வாங்கின அடுத்த செகண்ட் கிழிச்சு போட்டுட்டாங்க.... என்னன்னு சொல்ல நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன் கேட்ருக்கலாம்.... ரெண்டுமே பண்ணாம ரொம்பத் திட்டினாங்க ....அமைதியாத்தான் இருந்தேன் .... உன்னையெல்லாம்  பிரின்சிபல் ரூமுக்கு கூட்டிட்டு போனாதான் சரி வரும்ன்னு சொன்னாங்க, நீங்க கண்டிப்ப்பா  என்னன்னு கேப்பீங்கன்னு தெரியும் ... சரி போலாம்ன்னு சொன்னேன் ... அதுக்கும் கத்தினாங்க அவங்களை நான் அவமானப் படுத்திட்டேன்னு, உண்மையில் அவமானப் பட்டது நான்தான் மேம்” மிகவும் தெளிவாக பொறுமையுடன் தான் தவறில்லை என்பதை நிமிர்ந்து நின்று கூறி முடித்தான்.  

I’m fortunate enough to get an opportunity  to design  you as I wish and  to my interest. I enjoy every single bit of you after getting it done.  எனக்குப் பிடிச்சமாதிரி, நீயும் நானும்  என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் பொறாமைப் படறமாதிரி ஊர் சுத்தலாம். 

I LOVE YOU MORE THAN ANYBODY …… dark nightla தனிமையில் பிடிச்ச பாட்டுக் கேட்டுக் கிட்டே நீயும் நானும் முழு ராத்திரி யாருமே கண்ட்ரோல் பண்ண முடியாத வேகத்துல ஜாலியா சுத்தலாம்...ஏ.சி. இல்லாம  சில்லுன்னு வர்ற காத்துல இருட்டை ரசிச்சிட்டே போலாம். 

Oh God ! I haven’t started my design yet… If I were a car designer எல்லாம் இல்லை  I am I design an advanced race car and that’s my burning desire . என்னோட ரேஸ் கார்ல எல்லாமே ஆட்டோ மூவ் ... ஜெர்மனியோட டெக்னாலஜி, டெஸ்லாவோட advancement .........” 

கட்டுரை   நீண்டு சென்றது. 

ஆம், உண்மையில் அந்தக் கட்டுரை அவனது முழு ஆர்வத்தையும் தோய்த்து எழுதியதாக இருந்தது. பத்து வருடங்களுக்குப் பின் டெக்னாலஜி எப்படி இருக்கும் என்பதை திடுக்கிடும் அளவுக்கு கணித்து எழுதி இருந்தான். அவனது கார் வடிவமைக்கப்பட்டால் அது ஒரு வியக்கத்தக்க செயல்பாடாக இருக்கும். அதை அவன் கட்டுரையாக நினைக்காமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி ஆசையை, தாகத்தை கொட்டித் தீர்ததிருந்தான். 

கிழிந்த துண்டுகளில் ஆங்காங்கே love, தனிமை, நீயும் நானும், சுத்தலாம்   போன்ற சில  வார்த்தைகளை மட்டும்  வைத்து துண்டுக்காகிதம் எடுக்கப் போன உடற்கல்வி ஆசிரியர்கள் அவன் லவ் லெட்டர் எழுதி இருப்பதாக வழி எங்கும் தங்கள் பங்குக்கு செய்தி சொல்லி வந்திருக்கிறார்கள். அதனால் தான் அந்தக் குறுஞ்சிரிப்பும், தோரணையும் என்பது தலைமை ஆசிரியைக்குப் பின்னர்தான் புரிந்தது.


பெற்றோரை விட்டுப் பிரிந்து விடுதியில் இருக்கும் குழந்தை யாரிடம் தன் பக்க நியாயத்தை சொல்வது என்று தெரியாமல் ஒரு இரவு முழுவதும் தவித்திருக்காதா? தேவை இல்லாத பார்வைகளும், விமர்சனங்களும்.... யாருக்கு உண்மையில் மன அழுத்தம்?

திறமையும், அனுபவமும் உள்ள ஆளுமையாக வலம் வரும் அந்த ஆசிரியை ஒரு நிமிடம் காது கொடுத்துக் கேட்டிருக்கலாம்.... துண்டுக் காகிதங்களை வைத்து தன்னுடைய கற்பனையை இணைத்து கதை பரப்புவதை அந்த உடற்கல்வி ஆசிரியர்கள் தவிர்த்திருக்கலாம்....

பல இடங்களில் இரண்டாவது பெற்றோராக, சிறந்த வழி காட்டியாக இருந்து அரவணைக்கும் ஆசிரியர்களில் சிலர் சற்று பொறுமை இழப்பதன் காரணமாக மாணவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விடும் நிலை  வருத்தத்தைக் கொடுக்கிறது.  

ஒரு ஆசிரியர் தன் பதவிக் காலத்தில் ஆயிரம் மாணவர்களைப் பார்ப்பதால் இதை எளிதாகக் கடந்து விடக்கூடும். அந்தக் குழந்தைக்கு அது ஆறாத அவமானம், ரணம், வெறுப்பு, கோபம், இயலாமை எதுவாக வேண்டுமானாலும் மாறலாம். 

ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும், மற்றவர்களும் கூட பல சமயங்களில் இளைஞர்களுக்கு காதும், தோளும் கொடுக்கத் தவறி விடுகின்றோம்.

மூத்தவர்கள் என்பதற்காக எப்போதுமே நாம் சரியானவர்களாகவே இருக்க முடியாது. இளைஞர்கள் என்பதாலேயே அவர்களை எப்போதும்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்க்க வேண்டியதில்லை.   

அவர்கள் நடக்கும் வழியாக இருக்க வேண்டிய நாம் அவர்களுக்கு வலியாக இருக்கலாமா

- ராதா மனோகரன்

                              

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...