குழந்தைகள் அழகிய ஆடைகளோடு, வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளாய் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்களோ தங்கள் உறவினர்களுடன் ஒரு சிறு குழுக்களாய் ஆங்காங்கே அமர்ந்து, உரையாடிக் கொண்டிருக்கும் காட்சியை அனைத்து விசேஷ வீடுகளிலும் நாம் சிறிது காலம் முன்பு வரைக் கண்டிருக்க முடியும்.
ஆனால் தற்போது, அழகழகாய் ஆடை அணிந்த குழந்தைகள், ஆங்காங்கே ஒரு அலைபேசியை வைத்துக்கொண்டு அதில் மூழ்கி கிடப்பதை நாம் பெரும்பாலும் காண முடிகிறது. பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்திலோ, பயணங்களில் இருக்கும் போதோ, வீட்டில் தனியாக அமர்ந்தோ, அலைபேசியை வைத்துக்கொண்டு, எல்லா நேரமும் இணையதள வீடியோ கேம்களில், சமூக வலைதள பக்கங்களில் தன்னை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இணையம் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறி உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. இணைய தள அடிமையாவதும் ஒருவகை போதை தான்.
அதிகப்படியான இணைய பயன்பாடு குழந்தைகளின் கல்வியிலும் தொழில் முறை செயல் திறனிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இணைய பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.. அதிலும் இந்தியாவில் இணைய பயனாளிகளில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தினர் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள். உலக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் என்பது மிகவும் அதிர்ச்சியான ஒன்று தான்.
இந்த இணைய அடிமைத்தன பிரச்சனையின் ஆரம்ப புள்ளி எது என்று நாம் யோசித்துப் பார்ப்போம். சில காலங்களுக்கு முன்பு வரை குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கதை சொல்லியோ , பாட்டுப் பாடியோ விளையாட்டுக் காட்டியோ உணவு ஊட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போதோ அலைபேசியை கையில் கொடுத்து, அதில் அவர்களை மயங்கச் செய்து, எந்த ருசியும் அறியாமல் இயந்திரத்தை போல வாயைத் திறக்க வைத்து, உணவை அவர்களுக்குள் திணித்து விடுகிறோம். மேலும் சிறு குழந்தைகளை அமைதி படுத்தவும் அவர்களது தொந்தரவு இல்லாமல் இருக்கவும் அலைபேசியை கையில் கொடுத்து, இந்த இணையதள போதையை குழந்தைகளுக்குள் புகுத்தி விடுவதில் நாமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறோம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
என் மகன் அல்லது மகள், என்னை விட அலைபேசியை மிக திறமையாக பயன்படுத்துகிறான் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் ஒரு விஷயத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான இணை வழி குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இணையவழி குற்றவாளிகள் குழந்தைகளை ஈர்க்கும் பொருட்டு குழந்தைகளிடத்தில் பிரபலமாக இருக்கும் வலைத்தளங்களை குறிவைத்து, அதன் மூலம் குழந்தைகளை குற்ற செயல்களில் ஈடுபட வைக்கிறார்கள்.
பருவ வயதில் உள்ள குழந்தைகள், முகமறியாத நபர்களுடன், நட்பில் இணைந்து உரையாடுவதன் மூலம் எண்ணற்ற தீங்கை வரவழைத்துக் கொள்கிறார்கள்.
தற்போது சமூக வலைத்தளங்களில் எல்லா விவரங்களும் கிடைப்பதால், வகுப்பில் கூட எதற்கு ஆசிரியர் சொல்வதைக் கேட்க வேண்டும்? இதற்கான விடையை இணையத்தில் தேடி அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மாணவர்களின் மத்தியில் பரவலாகி இருக்கிறது.
அதிலும் குறிப்பாய் வளர் இளம் பருவத்தினர் இணையதளத்தில் இருக்கும் நேரத்தை, கட்டுப்பாட்டோடு வைக்க முடியாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. அவர்களின் நடத்தை பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கை இழக்கப்படுகிறது. ஏன் சில நேரங்களில் தற்கொலை எண்ணம் கூட அவர்களுக்கு வருகிறது..
எந்த வகையான குழந்தைகள் அல்லது வளர் இளம் பருவத்தினர் இந்த இணையதளத்திற்கு அடிமை ஆகிறார்கள்?
* மற்றவர்களுடன் பழக முடியாமல் அதிக கூச்ச சுபாவம் உள்ளவர்கள்.
* படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்.
* வீட்டில் போதிய அன்பு கிடைக்காத குழந்தைகள்.
* தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.
* சமூகத்தில் அதிகம் பழகாத குழந்தைகள்.
* வெறும் பொழுதுபோக்கிற்கு தானே என்று ஆரம்பித்து, இணையதளத்தில் தன்னை பலி கொடுத்து வெளியேற முடியாமல் தவிக்கும் குழந்தைகள்..
தங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தையும் கவலைகளையும் மறக்க உதவும் ஒரு மருந்தாக இணையதளம் அவர்களுக்கு மாறிவிடுகிறது. தங்களுடைய கோபம் ,மன அழுத்தம் ,கவலை, பயம் எல்லாவற்றையும் இணையதளத்தில் ரீல்ஸ்களாகவோ, மீம்ஸ்களாகவோ பதிவு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குக் கிடைக்கும் வரவேற்பும், லைக்குகளும் அவர்களை மீண்டும் மீண்டும் இணையதளத்தில் அடிமையாக்குகிறது.
மேலும் முகம் பார்த்து உரையாட தேவையில்லாத இந்த இணையதள உலகில் கூச்ச உணர்வின்றி குறுந்தகவல்கள் மூலம் எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்ற மனநிலை அவர்களுக்கு உருவாகிவிடுகிறது.
இதனால் ஏற்படும் உடல் மனநல பாதிப்புகள்..
* தூக்கமின்மை
*உடற் சோர்வு
* கண் பார்வை திறன் குறைபாடு.
* முதுகு மற்றும் கழுத்து வலி.
* ஆன்லைன் விளையாட்டு களின் மூலம் போதிய உடற்பயிற்சி இல்லாததால், உடல் எடை அதிகரிப்பு..
* பதற்ற உணர்வு
*தன்னம்பிக்கை இழத்தல், குற்ற உணர்வு கொள்ளுதல், மன அழுத்த நோய்
* தற்கொலை எண்ணம்
* இணையம் கிடைக்காவிட்டால் எரிச்சல்..நோமோ ஃபோபியா போன்ற பதற்ற உணர்வு.. அனைத்தையும் பறிகொடுத்து விட்ட ஒரு உணர்வு..
இப்படி பல உடல் நல பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படுகிறது..
அதனால் இணையமே குழந்தைகள் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.. அதன் பயன்பாட்டை மிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டுகிறேன்.
* குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பல மென்பொருள் கருவிகள் உள்ளன. அவற்றை நம் கணினியிலோ அலைபேசியிலோ பதிவேற்றி விட்டால், குறிப்பிட்ட ஆபாச விளையாட்டு வலைத்தளங்களை குழந்தைகள் பயன்படுத்த முடியாது. ஒருவேளை அந்த வலைத்தளத்தை குழந்தைகள் அணுகினால் பெற்றோர்களின் மின்னஞ்சலுக்கு தகவல்கள் வரும்.
* குழந்தைகளிடம் அதிக நேரத்தை நாம் செலவிட வேண்டும். இந்த இணையத்தால் என்ன விதமான பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படும் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். விளையாடுவது, விளையாட்டுகளில் பங்கேற்பது போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடச் செய்தல் வேண்டும்.
* அதேபோல அலைபேசி, இணையம் போன்றவற்றை பயன்படுத்தும் வயதை முடிந்தவரை காலம் தாழ்த்துவது நல்லது.
* அப்படியே குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினாலும் பெற்றோர்களுடைய கண்காணிப்பில் குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கலாம். காலவரையறை வைத்துக் கொள்வது நல்லது.
* கணினியை பயன்படுத்துவதாக இருந்தால் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் கணினியை வைத்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
* அவற்றையெல்லாம் விட குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களிடம் மனம் திறந்து உரையாடுவதும், நிச்சயம் அவர்களை இணையத்தின் அடிமையாகாமல் தடுக்க உதவும். மேலும் குழந்தைகள் நாம் சொல்லிக் கொடுப்பதை கற்றுக் கொள்வதை விட, நாம் வாழ்ந்து காட்டுவதை பார்த்து தான் கற்றுக் கொள்கிறார்கள். நாமும் நம் பெரும்பான்மையான நேரங்களை இணையத்தில் செலவிடுவதை தவிர்த்து, நம் குழந்தைகளுடன் அதிகம் செலவழிக்க வேண்டும்.
* குழந்தைகளை குற்றவாளிகளாக ஒரு விரல் நீட்டும் பொழுது மூன்று விரல் நம்மைச் சுட்டியே நீள்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதை விட வாழ்ந்து காட்டுவோம்.
#உடைபடும் மௌனங்கள் தொடரும்....