Friday, December 1, 2023

Bangalore Days (DIDAC 2024) - பகுதி 1 - உமா சிவக்குமார்



அக்டோபர் 16,2023 - மதியம் 3.30 மணி 

சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் விரைந்து கொண்டிருந்த மாருதி டிசையர் கார், பண்ணாரி கோவில் அருகே சற்று வேகம் குறைந்தது. காரில் இருந்தபடியே கன்னத்தில் போட்டு கொண்டேன். சில பழக்கங்கள் தன்னிச்சையானது. பின் இருக்கைகளில் நானும் கோபிசெட்டிபாளையம் - Amaze Academy பள்ளியின் முதல்வர் திருமதி. மங்கையற்கரசி மேடமும் அமர்ந்திருந்தோம் . முன் இருக்கைகளில் Amaze Academy பள்ளியின் தாளாளர் திரு. சங்கர் கோவிந்தராஜ் சாரும் அவரது நண்பரும் ( பெயர் மறந்து விட்டது). அந்த நண்பர் தான் வாகனத்தை ஓட்டி வந்தார். எங்களைத் தாளவாடி வரை பத்திரமாக கொண்டு சேர்த்தவரின் பெயரை நினைவில் நிறுத்தவில்லை .

நிகழ்ந்த நல்லவற்றையும் நிகழ்த்திய நல்லவர்களையும் நினைவில் நிறுத்திக் கொள்ள பழக வேண்டும். மனம் எதை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்கிறதோ அது தானே நிற்கும். சத்தியமங்கலம் வனத்துறை செக் போஸ்ட் தாண்டியதும் சில நிமிடங்களில் இரண்டு புள்ளி மான்கள் கண்ணில் பட்டன. 

மலைப்பயணம் கூடுதல் பிரியமானது . மேனி வருடும் குளிர்ந்த காற்றும், பார்க்கும் இடமெங்கும் படர்ந்திருக்கும் பசுமையும், அருகே உள்ள மலைத்தொடர்களின் உச்சியில் தெரியும் விரல் உயர மரங்களின வரிசையும் எப்போதும் பரவசப்படுத்தும். எத்தனை இருந்தும் இன்னும் வேண்டும் என கேட்கும் மனது - மூடுபனிக்கு ஆசைப்பட்டது. 

“என்ன சுற்றுலாவா செல்கிறாய் ? அடங்க மாட்டாயா? ", என்றது அறிவு.

எங்கள் பயணத் திட்டபடி , மாலை 4 மணிக்கு மங்கை மேடம், தாளவாடி KCT பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் சுரேஷ்குமார் சார், நான் மூவரும் தாளவாடியில் இருந்து பெங்களூரு நோக்கி கிளம்பியிருக்க வேண்டும். DIDAC Conference 2023 இந்த ஆண்டும் பெங்களூருவில் நடைபெறுகிறது. 

கடந்த நவம்பரில் சென்னை வேதா அகாடமியின் செய்தி மலரில் வெளிவந்த DIDAC 2022 கட்டுரை ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.  இது குறித்து கட்டுரை ஆசிரியர் மற்றும் வேதா அகாடமியின் நிறுவனர் திரு. வேதா டி. ஸ்ரீதரனிடம் உரையாடிய போது - இந்திய அளவிலும், சர்வதேச அளவில் கல்விச்சந்தை(?) எப்படி எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே பார்வையிடலாம் என்று கூறினார் .

அன்றே 2023ல் செல்ல முயற்சிக்கலாம் என்று எண்ணம் பதிந்தது. அடுத்தடுத்த நாட்களில் அதை முற்றிலும் மறந்திருந்தேன். இந்த ஆண்டு அறிவிப்பு வெளியானதும், இருந்த அலுவல்களுக்கிடையே பெரிதாக ஆர்வம் காட்டாமல் தான் இருந்தேன் . செப்டம்பரில் Amaze Academy பள்ளியில் நடைபெற்ற “AWARENESS ON LEARNING DISABILITIES” நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. KCT பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் சார் மற்றும் ஆசிரியர்களும் வந்திருந்தனர். 

நிகழ்வைத் தொடர்ந்த உரையாடலில் தான் DIDAC குறித்து பேச்சு திரும்பியது. DIDAC கருத்தரங்கில் சர்வதேச அளவிலான கற்றல்/கற்பித்தல் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைந்திருக்கும். மேலும் பல்வேறு கல்வி சார்ந்த அமைப்புகளின் பயிலரங்குகள் நடைபெறும் என்றும் தெரிந்து கொண்டேன். 

சுரேஷ்குமார் சார், மங்கை மேடம், நான் - மூவரும் செல்லலாம் என்பது உறுதியானது . DIDAC Conference 2024 ல் கலந்து கொள்ள அவரவர் பள்ளியின் பெயரில் DIDAC இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் . 

காலை முதல் மாலை வரை பல்வேறு பயிலரங்குகள் நடைபெறும். 60 நிமிடங்கள் நடக்க இருக்கும் ஒவ்வொரு பயிலரங்கிற்கும் தனித்தனியாக பதிவு செய்தல் அவசியம் . ஒரு நபர் ஒரு தினத்தில் அதிகபட்சம் இரண்டு பயிலரங்குகளில் மட்டுமே பங்கேற்கலாம்.

ஒத்திப்போடும் பழக்கம் இன்னும் ஒட்டி கொண்டிருப்பதால் பதிவு செய்யாமல் இருந்தேன். மூவரில் முதலில் பதிவு செய்தவர் மங்கை மேடம். சில பயிலரங்குகளுக்கு அனைத்து இடங்களும் பூர்த்தி ஆகி விட்டது- எனவே விரைந்து பதிவு செய்ய சொன்னார். உடனடியாக நானும் சுரேஷ்குமார் சாரும் பதிவு செய்தோம். 

காலாண்டு விடுமுறை முடிந்து இரண்டாம் பருவம் சற்று பரபரப்பாகவே துவங்கியது. இந்த குறுகிய பருவத்தைத் தான், சரஸ்வதி பூஜை, விஜயதசமி தீபாவளி என விடுமுறைகள் வரிசை கட்டிக்கொண்டு மேலும் குறைக்கும். அக்டோபர் 10 ம் தேதிக்கு மேல் தான் DIDAC நினைவிற்கு வந்தது. அக்டோபர் 17,18,19 மூன்று நாட்கள் DIDAC மாநாடு. அக்டோபர் 16 பயணம் . அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை . தொடர்ந்து ஐந்து நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் சூழலில் , நிறைய முன்னேற்பாடுகள் தேவைப்பட்டன . 

இப்படியாக அக்டோபர் 16 பெங்களூரு நோக்கி பயணம் துவங்கியது . DIDAC குறித்த எதிர்பார்ப்பை விட மங்கை மேடம் மற்றும் சுரேஷ் குமார் சாருடன் மூன்று நாட்கள் என்பது தான் பிரதானம். இருவரிடமும் இதுவரை கற்று கொண்டது ஏராளம். மங்கை மேடத்தை முதன் முதலில் ஊட்டி அருகே உள்ள அய்யன்கொல்லியில் நடைபெற்ற வேதா கோடைகால ஆசிரியர் முகாமில் 2016ல் சந்தித்தேன் .  
         
தமிழகத்தில் எந்த பள்ளியிலும் காணக் கிடைக்காத அளவிற்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மங்கை மேடத்தின் Amaze பள்ளியில் இருக்கும் - இப்படித்தான் வேதா.டி. ஸ்ரீதரன் சார் மங்கை மேடத்தை அறிமுகம் செய்தார். ஆறு வருடங்கள் கழித்து 2022ல் Amaze பள்ளிக்கு சென்ற போது ஸ்ரீதர் சார் கூறியது 100% உண்மை என்பதை உணர்ந்தேன். 

அது மட்டுமல்ல குழந்தை கருவில் உருவானது முதல் பிறந்து, ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வரும்போது அவர்கள் உலகம் எப்படியானது என்பதற்கு 25 சிறந்த புத்தகங்கள் படிப்பதும், மங்கை மேடத்துடன் சில மணி நேரங்கள் உரையாடுவதும் ஒன்று. குறிப்பாக 0-5 வயது வரை குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் மற்றும் அது சார்ந்த உளவியலில் மங்கை மேடத்தின் ஆழ்ந்த அறிவும், அனுபவமும் எங்கள் மழலையர் பிரிவு ஆசிரியர்களை சீராக வழி நடத்திக் கொண்டிருக்கிறது. 

...தொடரும்...


3 comments:

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...