Friday, September 1, 2023

மனமே.... நலமா! - சுகன்யா

 




இன்றைய கால சூழலில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பரவலாகச் சொல்வது 'I feel depressed' (நான் மனச்சோர்வாக உணர்கிறேன்) என்பது கொரோனா காலத்திற்குப் பின் இதனைச் சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவே உணர முடிகின்றது. இதற்கான காரணம் என்னவாக இருப்பினும், எப்படி கையாள்வது, என்ன செய்ய வேண்டும் குறிப்பாக என்ன செய்தல் கூடாது எனும் புரிதல் முக்கியத் தேவையாக உள்ளது.

 
முதலில் இங்கு நடப்பவை என்ன என்பதை புரிந்து கொள்ள மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் துறை வல்லுனர்களும் என்ன சொல்கின்றனர் என்பதை பார்ப்போம். WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு சமீப காலத்தில் மனச்சோர்வு எனும் நோய் உலக அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றது. குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து வயதினரும் இந்நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
பொது மக்களுக்கு இந்நோய் பற்றிய புரிதல் ஏற்படுவதில் பெரும் சிக்கல் தொடர்ந்து நிலவி வருகின்றது. அதற்கான காரணங்களில் ஒன்று எந்தக் கட்டத்தில் நாம் மருத்துவரை அணுக வேண்டும் என்ற புரிதலில் நிலவும் குழப்பமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. முன்பெல்லாம் ஒரு செயலைச் செய்யும் முன் ஒரு சவாலை சந்திக்க நேர்கையில் 'I feel tensed' (நான் படபடப்பாக உணர்கிறேன்) என்று சொல்வோம். இன்று இந்த வார்த்தையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைத்துள்ளதோ என்று தோன்றுகிறது.
 
அதற்குக் காரணம் தற்போதைய காலத்தில் படபடப்பை உணர்பவர்களில் எண்ணிக்கை குறைத்துள்ளது என்பதல்ல. மாறாக நாம் வேறு உணர்வு நிலைகளுக்கு உண்டான சொற்களை மாற்றி பயன்படுத்த துவங்கியுள்ளோம். இதனை உணர்ந்து யாரும் செய்வதில்லை. நம்மைச்  சுற்றி உள்ளோர் பயன்படுத்தும் சொற்கள் நம்மையுமறியாமல் நம் அகராதியில் சேர்ந்து விடுகிறது. நாமும் 'I feel stressed' எனச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றோம். சிறிய அளவிலான படபடப்பு என்பது ஒரு செயலை சிறந்த முறையில் செய்து முடிக்க நமக்கு பெரும்பாலான நேரத்தில் உதவக் கூடியதே.
 
படபடப்பின் வீரியம் கூடுகையில் அது பதற்றமாக(anxiety) உருமாறுகிறது. பதறிய காரியம் சிதறும் என்பது இந்த நிலையில் ஏற்படக்கூடியது. மனதின் நிதானத்தில் சிறு தடுமாற்றம் ஏற்படும். உதாரணத்திற்கு தேர்வு காலத்தில் நன்றாக படித்திருந்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை சரியாகத் தெரிந்திருந்தும் அந்த கேள்விக்கு விடை முழுவதுமாக எழுதியிருக்க மாட்டோம் அல்லது விடை எழுதாமலே கோட்டை விட்டிருப்போம். இவை சிறிய அளவு பாதிப்பு என்றாலும் பதற்றத்தைக் குறைக்க / கையாள சில யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். உதாரணமாக பரிட்சை அறைக்கு சில நிமிடங்கள் முன்பே செல்லுதல், தயாரிக்கும் முறையில் சில யுக்திகள் பின்பற்றுதல் போன்றவை.
 
இந்த பதற்றம் தன்னால் கையாள முடியாத நிலையை எட்டும் போது தான் பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. யுக்திகளையும் யோசனைகளையும் வழங்க ஒரு பயிற்றுனர் போதுமாக இருக்கும்அடடே இதை இப்படி கூட கையாண்டுவிடலாமா இது தெரியாமல் போச்சே என்ற மனநிலை ஏற்படுமளவு இருந்தால் சரியான வழிகாட்டுதல் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
 
இந்த நிலையில் வரக்கூடியதே நேரத்தை நிர்வகித்தல் மற்றும் முடிவு எடுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற பல. ஆனால் அடுத்த கட்டமாக நடுக்கம் ஏற்படுதல், மூச்சு விடுவதில் சிக்கல், தூக்கமின்மை, தொடர் பய உணர்வு, உணவின் அளவில் மாற்றம், செரிமானக் கோளாறு போன்ற இயல்பு வாழ்வை பாதிக்கும் எந்த தொந்தரவு ஏற்பட்டாலும் மருத்துவரை நாடுதல் அவசியம். இவை anxiety disorder எனும் மனப் பதட்ட நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அவசியம் ஏற்படின் மாத்திரைகளோ அல்லது மனநல ஆலோசனையோ தகுந்த வல்லுனரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நம்மை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்.
 
பதட்டம் என்பதற்கும் பதட்ட நோய்என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமெனில் எது ஒன்று உங்கள் இயல்பு வாழ்வை, அன்றாட செயல்பாடுகளை பாதிக்கிறதோ அப்பொழுது தகுந்த ஆலோசகரை அணுக வேண்டும்.
 
இயல்பான பதட்டம் அதிகரிக்கையில் போதிய திறன் நம்மிடையே இல்லாத பட்சத்தில் அது அழுத்தமாக உருவாகிறது. இதையே stress மனஅழுத்தம் என்கிறோம். தொடர்ந்து ஒருவர் இவ்வாறான அழுத்தத்தில் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
 
ஒருகட்டத்தில் மனஅழுத்தம்  என்பது உடல் சார்ந்த உபாதைகளாக மாற்றம் பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், அடிக்கடி கோபம் வருதல், தூக்கம், உணவு, பசி, செரிமானம், ரத்தத்தின் கூறுகளில் மாற்றம் தொடங்கி இருதய பாதிப்புவரை பல நோய்களுக்கு மூலக்காரணியாக இந்த மனஅழுத்தம் அமைந்து விடுகிறது.
 
சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, நிர்வகிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி (stress management) போன்றவை வருமுன் காப்போம் என நமக்கு உதவி வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இவை பற்றிய போதிய புரிதல் இன்றி சிறு குழந்தைகள் கூட 'I feel stressed' என சொல்வதை கேட்க முடிகிறது. பெரியவர்கள் சரியான உணர்வு நிலையை புரிந்து சரியான வார்த்தைகளை பயன்படுத்துவது வளரும் தலைமுறைக்கு புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். அதே சமயம் அவர்கள் உலகினுள் சென்று அவர்களது மொழியை நாமும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.
 
இக்குழப்பங்களுக்கு இடையே இன்னொரு குழப்பம் மனக்குழப்பம் என்றால் என்ன? ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் conflict. எனக்கு ஒன்று வேண்டும் அதேசமயம் எனக்கான நியாயமான காரணமும் உண்டு அதை வேண்டாம் என்று சொல்ல. இவை மனப்போராட்டத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் பல வகைகளும் உண்டு.
 
இப்போராட்டத்தின் விளைவாக நாம் முன் கூறிய எந்த படிநிலைக்கும் செல்லலாம். மனஅழுத்தம் ஏற்படலாம், பதட்டம், படபடப்பு என இம்மனப் போராட்டம் நம்மை இழுத்துச் செல்லும். இப்படி நிலைகளின் அதீத நிலையாக மனப்போராட்டமும் குழப்பமும் அதிகமாகும்போது ஏற்படுவதே மனச்சோர்வு (Depression).
 
மனச்சோர்வு என்பது நான் சோர்வாக (tired) உணர்கிறேன் என்பதல்ல. ஒருவரது மனம் மிகவும் பலகீனமடைந்து, தான் செய்ய வேண்டிய செயல்களை செய்ய முடியாமல், சில சமயங்களில் சிந்திக்கவும் முடியாமல் முட்டுச்சந்தில் முட்டி நிற்பது போன்ற நிர்கதியான நிலை. மனம் கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் நிற்பது.
 
வைட்டமின்-டி போன்ற சத்துக்குறைபாடு தொடங்கி உடலின் சில சுரப்பிகளின் அளவு, மூளையில் ஏற்படும் மாற்றம் என இதற்கான காரணிகள் பற்பல. இவைதான் என பொதுப்படுத்தி கூறிவிட முடியாது. உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மனநல மருத்துவர் ஆய்ந்து சொல்ல, அதற்கான மருத்துவத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
உடல் சார்ந்த காரணங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தபின் மனநல ஆலோசகர் ஆலோசனைப்படி தெரபி எடுத்துக் கொள்ளலாம். இவை எதுவும் கடக்க முடியாதது அல்ல. ஆனால் இவற்றைப் புரிந்து கொள்ளாமல் காலமும் சூழலும் அனைத்தையும் மாற்றும் என்று காத்திருத்தல் நம்மை அடுத்த நிலைக்கு நகர விடாமல் தடுக்கும் என்பதையும் தாண்டி தற்கொலை எண்ணம் தொடங்கி பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
 
மனச்சோர்வின் அளவு மற்றும் காரணத்தைப் பொறுத்து மாத்திரைகள் மட்டுமே ஒருவரை மீட்டெடுக்கலாம் அல்லது தொடர்ந்து ஏதேனும் பயிற்சி தேவைப்படலாம். எனவே ஒருவருக்கான வைத்திய முறையோ அல்லது மீள எடுத்துக் கொண்ட காலமோ பிறருக்கும் பொருந்தும் எனப் பொதுப்படுத்தி ஒரு மாத சிகிச்சை தேவை, மூன்று வாரங்கள் போதும் என்று எந்த வரையறைக்குள்ளும் வைத்து விடமுடியாது. பொதுவாக மருந்து ஒருவருக்கு சரியாக வேலை செய்யும் ஆனால் இன்னொருவருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதுபோல, சகஜ நிலைக்கு திரும்புவதற்கான காலம் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.  
 
இக்காலகட்டத்தில் மனச்சோர்வு எனும் பிடியில் சிக்கியுள்ளவரை பாதுகாத்தலும்  தேவையான அரவணைப்பை வழங்கும் பொறுப்பும் அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கு உண்டு. Primary care giver என்று சொல்லப்படும் அந்நபரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சுற்றத்தினர் குறைந்தது அவர் தனக்கு முக்கியமான நபர் என்று நினைக்கும் நபர் அவருக்கு ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருத்தல் அவசியம். இவர் நம்மை புரிந்து கொண்டார் எனும் உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த சுற்றம் நான் வாழ்வதற்கு தகுந்த இடம் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தும். புரிந்து கொள்ளுதல் என்பது வேறு ஏற்றுக் கொள்ளுதல் என்பது வேறு. நாம் செய்யும் செயல்களை நமது சுபாவத்தை இயல்பை நம்மை நாமாக எந்த விதிகளுக்கும்  உட்படுத்தாமல் இவர் இதற்காக இப்படி செய்கிறார் நடந்து கொள்கிறார் என நமது இடத்திலிருந்து ஒருவர் சிந்திப்பது என்பது புரிந்து கொள்ளுதல். அதனை அவ்விதமே சரி என தனது கோட்பாடுகளுக்கும் பொருத்தி சரி தவறு என்ற ஆய்வுக்குள் உட்படுத்தினாலும் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒத்துக்கொள்ளுதல் ஏற்பது.
 
மனச்சோர்வில் இருப்பவரின் நிலையை சூழலை செயல்பாடுகளை எதிர்வினைகளை ஏற்க முடியாவிட்டாலும் அவரை புரிந்து கொண்டோம் என்ற உணர்வை முதன்மை நபர்கள் தர வேண்டும். அவர்களுக்கான தேவை சமாதானங்கள் அல்ல. நம்பிக்கை மட்டுமே. எல்லாம் சரியாகிவிடும், மாறிவிடும் என்பவை வெறும் சொற்களாக அவர்களை சென்று சேர்வது அவர்களுக்கு வெற்று சமாதானமாகத் தோன்றலாம். புரிந்துணர்வுடன் கூடிய ஊக்கம் நம்பிக்கையை நிச்சயம் விதைக்கும். ‘எந்த நேரமும் நான் ன்னோடு உடனிருக்கிறேன் நீ மீண்டு வா!’ என்பது தற்கொலை எண்ணம் இருப்பின் அதனை கையாள நிச்சயம் உதவும். நீ தனியாக இல்லை என்ற உணர்வை தொடர்ந்து நாம் அவருக்கு ஏற்படுத்த வேண்டும்.
 
சமீபமாக மனநலம் பற்றிய பேச்சு அதிகரித்திருப்பது ஆறுதலான செய்தி எனினும் இவை தொடர்ந்து பேசப்பட வேண்டியது முக்கியம். இந்தியாவில் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையைவிட தற்கொலையினால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் என்றால்  அதிர்ச்சியாக இருக்கக்கூடும். ஆம். 2021ல் சாலை விபத்தினால் ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை 1,55,622, கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,52,742. ஆனால் தற்கொலைகள் 1,64,033.
 
இந்த அதிக எண்ணிக்கைக்கு மனச்சோர்வு நோய் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனைப் பற்றிய புரிதலும் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவதும் மனசோர்வுக்கு ஆட்பட்டவரை கையாள உடனிருப்பவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியத் தேவையாக உள்ளது.
 
Key Words
Tension – படபடப்பு ; Anxiety - பதட்டம் ; Stress – மனஅழுத்தம்;  Conflict – மனக்குழப்பம்; Depression - மனச்சோர்வு

 

 Reference

https://www.who.int/news-room/fact-sheets/detail/depression

https://apps.who.int/iris/bitstream/handle/10665/254610/WHO-MSD-MER-2017.2-eng.pdf

https://main.mohfw.gov.in/sites/default/files/National%20Mental%20Health%20Survey%2C%202015-16%20-%20Mental%20Health%20Systems_0.pdf

https://ncrb.gov.in/sites/default/files/ADSI-2021/adsi2021_Chapter-1A-Traffic-Accidents.pdf

https://www.macrotrends.net/countries/IND/india/suicide-rate

https://www.worldometers.info/coronavirus/country/india/

  




3 comments:

  1. Very useful and well presented!

    ReplyDelete
  2. தேர்ந்த எழுத்துகள்
    ... தேவைப்பட வேண்டிய எழுத்துகள்..👍

    ReplyDelete
  3. தேர்ந்த தரவுகள். அழுத்தமான கருத்துகள்.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...