Friday, September 1, 2023

கட்டப்பட்ட கைகள் - ராதா மனோகரன்

 




ஒரு 3 ஆண்டுகளுக்கு முன்னால் ஆசிரியர் என்ற சொல்லுக்கு, அந்தப் பதவிக்கு, அந்த மனிதருக்கு அவ்வளவு மரியாதை இருக்கும். ஊருக்குள் வாத்தியார் என்றால் தனி அந்தஸ்து. பெரும்பாலும் சைக்கிளில் தான் வருவார்கள். அவர்களை எங்கு பார்த்தாலும் வலது கை விரிந்துகொண்டு நெற்றியின் ஓரத்துக்கு சென்று விடும். உதடுகள் "குட் மானிங் சார் /டீச்சர் என்று ராகம் பாடும். இன்றைக்கும்  சில ஆசிரியர்களை நினைக்கும் பொழுது நன்றி உணர்வு தானாக வரும்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ராமசாமி வாத்தியார் என்பவர் எனது ஆங்கில ஆசிரியர்.வெள்ளை சட்டை, மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி, கையில் ஒரு 3 அடி நீளக்குச்சி இவரது தோற்றம் கோபம் ,மகிழ்ச்சி எதையும் பிரித்துப் பார்க்க முடியாத உணர்ச்சி.அவர் நடையிலும்,பாடம் எடுக்கும் பாங்கிலும், மாணவர்களை அணுகும் பாணியிலும் ஒரு நேர்த்தி இருக்கும் முகத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும். இவர் மீது மாணவர்கள் அனைவருக்கும் மரியாதை கலந்த பயம் இருக்கும்.

இவரின் அணுகுமுறை love and law ....

வகுப்பில் ஒரு மாணவன் தூங்கிக் கொண்டிருந்தால் அட்டெண்டரை அழைத்து சொந்த காசில் டீ வாங்கி வரச் சொல்லி, மெதுவாக அவன்  அருகில் சென்று மென்மையாக எழுப்பி" தம்பி போய் முகம் கழுவி விட்டு இந்த டீயை வெளியில் அமர்ந்து குடித்து விட்டு  வகுப்புக்கு வா " என்பார்.ஒரு நாளும் திட்ட மாட்டார். அதிலுள்ள சூட்சமமே ஒரு முறை டீ குடித்தவன் அடுத்த முறை மிக மிக கவனமுடன் அவரது வகுப்பில் இருப்பான் என்பதே.  அதே ஆசிரியர் வீட்டுப் பாடம் செய்ய வில்லை என்றால் உள்ளங்கையைத் திருப்பி நடு விரலை வளைத்து மணிக்கட்டில் முட்ட வைப்பார்.  பார்ப்பவர்கள் விரல் ஒடிந்து கையோடு வந்துவிடும் என நினைக்கும் அளவுக்கு அந்த மாணவன் அஷ்ட கோணலாக நெளிவதும் கெஞ்சுவதும்  என குரங்காட்டம் நடத்திக் கொண்டிருப்பான். அதை சர்வ சாதாரணமாக நடத்துவார். அவரை விட்டு நகர்ந்து வந்து கையை உதறி உதறி விரல் இன்னும் தொடுத்துக் கொண்டுதான் இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். (அதன் பின்னர் நாம் எவ்வளவு முயற்சித்தாலும் அந்த விரல் நுனி மணிக்கட்டைத் தொடாது)  அன்றிலிருந்து முதல் வீட்டுப் பாடமாக ஆங்கில புத்தகம் பையிலிருந்து தெரித்துக் கொண்டு வெளியே  வரும்.

அந்தக் கையில் இருக்கும் தடி ஒழுக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப் படும். ஒழுக்கம் தவறினால்  மண்டியிட்டு கைகள் இரண்டையும் பின்னால் முறுக்கி தடியால் உள்ளங்கால்களில் வெளுத்து வாங்குவார்.

கனிவும் கண்டிப்பும் நிறைந்த ஆசிரியர்.

அவர் அடிப்பார் என்று பயந்து தன்னை சரிப்படுத்திக் கொண்ட மாணவர்கள் உண்டே தவிர அடித்தார் என்று வெறுத்தவர்கள் எனக்குத் தெரிந்து எவருமில்லை. அதை இரண்டு தருணங்களில் உணர்ந்தேன். ஒருமுறை அவர் நாய்க்கடி பட்டு மிகவும் சிரமப்பட்டு விடுப்பில் இருந்த பொழுது மதிய உணவு இடைவேளையில் (மாணவர்கள்) கூட்டம் கூட்டமாக அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று பார்த்து வருவோம்.

அவர் இறந்த செய்தியைக் கேட்டு திரண்ட மாணவர்களும் சிந்திய கண்ணீரும் சொல்லும் அவர் மாணவர்கள் மத்தியில் பிடித்த இடத்தை.

ஒரு முறை கூட கண்டிக்கப் பட்டவனின் பெற்றோர் பள்ளியில் வந்து கேள்வி கேட்ட ஞாபகம் எனக்கு இல்லை. கண்டிக்கப்பட்டவன் வீட்டில் சென்று சொல்ல மாட்டான் சொன்னால் அங்கும் கண்ணமோ காதோ பழுத்துவிடும். பள்ளிகளில் ஆசிரியர்களிடம் கூறப்பட்டதே கண் காதுகளை விட்டு விட்டு  அடி வெளுத்தெடுங்கள் என்பது தானே. ஒழுக்கமும், கட்டுப்பாடும் கற்றுத் தரப்பட்டது பள்ளிகளில் தானே...பாடம் கற்றுத்தரும் ஆசிரியருக்கு கண்டிக்கும் உரிமை ஏன் இல்லை?. அடித்துதான் திருத்த வேண்டும் என்று சொல்லவில்லை. கல்வி – கற்றல் அடித்துத் திணிக்கப் பட முடியாதது. அது மாணவனின் கற்றல் திறன், திறமை, ஆர்வம், கற்றல் சூழல் போன்ற பல காரணிகளை சார்ந்தது. அதை அணுகும் முறை அடித்தல் அல்ல. அனால் ஒழுக்கம் முழுக்க முழுக்க சிறு வயது முதல் உருவாக்கப் படுவதே. சிறு சிறு தவறுகள் செய்யும் பொழுது ஏன் கண்டிக்கக் கூடாது? . தவறுகள் எல்லை மீறும் போது ஏன் அடிக்கக் கூடாது? நான் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கு சட்டமும் என் பெற்றோரும் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். ஆசிரியரை மாணவனும் பெற்றோரும் மதித்து அவரைப் பார்த்து மாணவர்கள்பயந்த நிலை தலை கீழாக மாறி உள்ளது.    

என்று  ஆசிரியரின்  கையும்  வாயும்  கட்டப்பட்டதோ அன்றே ஒழுக்கம் என்ற முரட்டுக்காளை மூக் கனாங்கயிறை அவிழ்த்துக் கொண்டது. குட்டி யானைக்கு மதம் பிடித்துக் கொண்டது. ட்டம் ஒரு புறம் .....பெற்றோரின் உறுமல் மறுபுறம்...... சிறிய சிறிய தவறுகளைக் கூட கண்டிக்கும் சுதந்திரமும் தைரியமும்  தெய்வத்திற்கு முன்னால் வைக்கப் பட்ட குருவிற்கே இல்லை என்றால் அடுத்து வரும்  தெய்வம் வாயடைத்துதானே போகவேண்டும்....

ஆசிரியர்களின் கைகள் கட்டப் பட்டது மட்டுமே மாணவர்களின் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு காரணமா?


அடுத்த இதழில் தொடரும்.........


1 comment:

  1. ஆசிரதயர் தினத்திலீ சிந்திக்க வைத்த எழுத்து!

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...