Sunday, October 1, 2023

பவானி 2 நொய்யல் - 5 - க்ருஷ்


சுண்ணாம்பு ஓடை

எங்களின் அடுத்த நிறுத்தம், சுண்ணாம்பு ஓடை மற்றும் ஈரோடு-பவானி சாலை சந்திக்கும் இடம்.  அங்கிருந்து பார்த்தால் பெருமாள் மலை தெரியும்.    மைல் 5.45.47 என எழுதி இருந்தது.   இந்த  ஓடை, பவானியில் இருந்து வரும்பொழுது RN  புதூர் தாண்டியதும், பாலக்காட்டூருக்கும்,  சுண்ணாம்பு ஓடை எனும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையில் இருக்கும்.    சாலை வழியே சுண்ணாம்பு ஓடையை கடக்கும்போது பேருந்துகளில் இருந்து எட்டிப்பார்த்து இருப்போம்.  அந்த அழகான இடம் தான்.   அந்த ஓடையின் அடியில்  மதகுகள் வைத்து காலிங்கராயன்,   சுண்ணாம்பு ஓடையைக் கடக்க வைத்திருக்கிறார்.  


அதனை குமுளி மதகு அல்லது ஸ்பைன் என்று கூறுகின்றார்கள்.   740 வருடங்களுக்கு முன்பு கட்டிய கல்லால் ஆன மதகு.  இன்றும் பயன் அளித்துக்குக் கொண்டுதான் இருக்கின்றது.  தண்ணீரைத் தேக்கி அதே கொள்ளளவு நீரை, மறுபக்கம் அனுப்பும், மேலே இருக்கும் சுண்ணாம்பு ஓடையைக்  கடந்து, மறுபக்கம் கொப்பளித்து வருகின்றது.  


நாங்கள் பார்த்த பொழுது நமது மக்கள் வாய்க்காலில் போட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும்,  விநாயகர் சதுர்த்தி கும்பிட்டுவிட்டு தூக்கிப்போட்ட பிளாஸ்டிக் பைகளில் உள்ள பூக்களும், அந்த குமுளி மதகில் மிதந்து கொண்டு இருந்தது.   நாங்கள் கரையில் வரும்பொழுது அங்கங்கு நீரில் அவை குழந்தைகள் மழைநீரில் விடும் காகிதக்கப்பல்  போல பயணித்துக்கொண்டு கூடவே வருத்தத்தை ஊட்டியது.   மதகை ஒட்டி அந்த கழிவுகளை எடுத்துப்  போட்டு போட்டு போட்டு அது ஒரு சிறு பெருமாள் மலை போல அந்த இடத்தில் குவிந்து கிடந்தது.   இந்த குமுளி மதகு ஆச்சரியக் குறி என்றால் அதனை அடைக்கும் அளவு சம்பவம் செய்து கொண்டிருக்கும் நமது மக்கள் ஒரு கேள்விக்குறி.  


நாங்கள் சென்ற சமயம், குமுளி மதகின் மறுமுனையில் நாய் ஒன்று உப்பி மிதந்து கொண்டு இருந்தது.  அவ்விடத்தில் கழிவுகளோடு இதுவும் தேங்கி மிதந்தது.   தவறுதலாக விழுந்ததா,  செத்துப்போன நாயை வாய்க்காலில் விட்டார்களா  அல்லது கொரோனா காலகட்டத்தில் உணவு கிடைக்காமல் இது தற்கொலை செய்து கொண்டதா என தெரியவில்லை.    

குமுளி மதகினை வியந்து, நம் மக்களுக்காக வருந்தி  சுண்ணாம்பு ஓடையை கடந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.  


பேபி வாய்க்கால்


அந்த ஓடையை தாண்டிய உடனே  பேபி வாய்க்கால் ஆரம்பமாகும்.  பேபிவாய்க்காலில் தோல், சாய கழிவுகள் சேர்ந்து கொள்வதால்,   அவை காளிங்கராயனில் கலக்காமல் இது தடுக்கிறது.   ஆனாலும் காலிங்கராயன் நம்மக்களால் மாசு பட்டே இருந்தது.

இதுவரையில் காலிங்கராயன் காவிரி கரையில் இருந்து அதிகமாக விலகவில்லை.  

பிச்சைக்காரன் பள்ளம் ஓடை


அடுத்த நிறுத்தம் இது. ஈரோட்டுக்கான பெயர்க்காரணம் வந்ததற்கான ஒரு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை.   இந்த ஓடைக்கும் பெரும்பள்ளம் ஓடைக்கும் இடையில் தான் ஈரோடு.  இந்த இரு ஓடைக்கு இடையில் இருந்ததால் ஈரோடை.   இன்று ஈரோடு மாநகர் எல்லை காலிங்கராயன் தொடங்கும் இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.  ஆம் அணைநாவிதன் பாளையம் மாநகராட்சியின் கீழ் வரும்.  ஒரு மாதிரி அமீபா போல கால்வாய்களின் வழி தான் நமது ஊரில் எல்லை பிரிப்பு இருக்கும்.  அமெரிக்காவில் எப்படி மார்சின் வைத்து கோடு போட்டது போல மாநில எல்லைகளை பிரித்து இருப்பார்கள் என்பது சிறுவயது முதல் ஆச்சர்யம்.

காலிங்கராயன் குமுளி மதகின் வழி, பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை அடியில் கடக்கிறது.   இது சற்று நீண்ட குமுளி மதகு.  பிச்சைக்காரன் பள்ளம்  சாயக்கழிவுகள் மற்றும் நகரின் சாக்கடை கழிவுகள்  தாங்கி ஓ(ட்)டையாக(?) சென்று கொண்டு இருந்தது.   

இந்த ஓடை, பவானியில் இருந்து வரும்பொழுது அக்ரஹாரம் தாண்டி கிறிஸ்து ஜோதி பள்ளி அருகே ஈரோடு-பவானி சாலையை கடக்கும். ஈரோடு-சத்தி சாலையில் CNC கல்லூரி தாண்டி வருவதும் இந்த ஓடை தான்.  வைரபாளையம் டம்ப் யார்டு வரை செல்லும் இந்த ஓடை, அங்கு காவிரியில் கலக்கிறது. அப்படியே கலக்கிறதா அல்லது மறுசுழற்சி செய்யப்படுகிறதா அல்லது மறுசுழற்சி செய்வதுபோல காட்டப்படுகிறதா என தெரியவில்லை. 


காவிரியின் நிலை என்ன என்பது வேறு ஆராச்சிக்கான தளம்.  ஆனால் சற்று தொலைவு  நீர் பயணிக்கும் பொழுது கூழாங்கற்கள் மணலோடு சேர்ந்து அது சுத்திகரிப்பு அடைகிறது எனவும் கூறுகிறார்கள்.  பெங்களூரின் வர்த்தூர் ஏரியில் இருந்து வரும் மாசடைந்த நீர் சற்று தொலைவு வந்ததும் நல்ல நீராக மாறுவதாக குறிப்பிடுகிறார்கள்.  ஆனால் அதற்கு தொடர்ந்து நீர் வரவேண்டுமே

 

ஈரோடு-பள்ளிபாளையம் சாலை 


இப்படியாக நாங்கள் அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள், மக்கள் என இந்த சிக்கலுக்கானவர்களைப் பற்றி பேசிக்கொண்டே ஈரோடு-பள்ளிபாளையம் சாலையை அடைந்திருந்தோம்.   சாலையைக் கடந்து வண்டியை நிறுத்தினோம்.  சாலையைக் கடக்கும் முன்பே வாய்க்காலின் வலது கரையில், சாலையை ஒட்டி அழகியலோடு இருந்தது மேல்மலையனூர் அம்மன் கோயில்.  காலிங்கராயனை மேலும் அழகாக்குவது அங்கங்கு இருக்கும் இதுபோன்ற குட்டி குட்டி கோயில்கள் தான்.  

வாய்க்கால் தண்ணீர் அந்த கோயிலைப் பளிச்சென கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டே இருந்தது.  கோயிலை ஒட்டி, அதன் கரையில் லுங்கி மற்றும் சட்டையில் இருவர் அமர்ந்து இருந்தார்கள்.   ஒரு  கையில் நீண்ட தூண்டில்.  மறு கையில் பாதி கரைந்த பீடி.   ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை பொறுமையாக காத்துக் கொண்டு இருந்தார்கள்.  இந்த காட்சியும் வாய்க்கால் முழுக்க காண முடியும்.


சேலம் செல்லும் பேருந்தும், பேருந்தில் பயணம் செல்வோர்களும் அமைதியாக காலிங்கராயன் கால்வாயின் அழகை ரசித்த வண்ணம் பயணம் செய்து கொண்டு இருந்தார்கள். 


சாலையில் ஒரு 200 மீட்டர் தொலைவு சென்றால்,  காவிரிக் கரையில் உள்ள ஆத்மா எனும் மின் தகன மேடைக்கு செல்லும் வழி பிரியும்.   ஈரோடு ஆத்மா ஒரு அமைதியான இடம். இறந்தோர்க்கு இறுதிச்சடங்கு செலுத்தும் இந்த இடம் எகிப்தின் பிரமிடு போல வடிவமைக்கப்பட்டு இருக்கும். "வீட்ல இருந்து ஆத்மாவுக்கு இத்தனை மணிக்கு போறாங்க.. அங்க வந்துடுங்க" என்பது நம்மூரின் இறுதி அஞ்சலியின் போது நடைபெறும் ஒரு உரையாடல்.  மின் தகனம் நடைபெறும் போது அனைவரையும் அமர வைத்து ஆன்மா சாந்தி அடைய இசையை ஓட விடுவார்கள். மனம் எங்கே எங்கேயோ சுற்றி என்ன என்னவோ செய்யும்.  


ஆத்மாவில் இருந்து இன்னும் சற்று சேலம் சாலையில் சென்றால் காவல்துறை தடுப்புகள்.  'ஈரோடு மாவட்ட எல்லை முடிவு நன்றி மீண்டும் வருக' எனும் பலகைகள் கண்ணில் தென்படும்.  காவிரி பாலத்தை தாண்டினால் நாமக்கல் 

மாவட்டம் அன்போடு வரவேற்கும்.   


அதே சாலையில் நேர் எதிரே சென்றால் ஈரோட்டின் நுழைவாயில் கருங்கல்பாளையம்.


பயணிப்போம்....


No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...