ஈரோடு வாசல் (மின்னிதழ்)
மாத இதழ்
Wednesday, May 1, 2024
கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி
எனது சிறுவயது ஞாபகங்களிலிருந்து... - யோகாசக்தி மீனா
ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டு விடுவார்கள். வெயில் தகித்தாலும் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், அன்னதானம், பாணக்கம் என தூள் பறக்கும்.
பவானி2 நொய்யல் - காலிங்கராயன் தடம் 10 - க்ருஷ்
காவிரியில் இருந்து காங்கேயன்பாளையம் ஊர் கடந்து, அப்படியே கரையில் செல்லாமல் நேராக சென்றால் சாவடிப்பாளையம் பேருந்து நிறுத்தம். அந்தப் பாதையில் செல்லாமல், மீண்டும் காலிங்கராயன் கரையில் தொடர்ந்தோம். அடுத்த முக்கியமான இடம் சாவடிப்பாளையம் தாண்டி சற்று தொலைவில் சாவடிப்பாளையம்-பஞ்சலிங்கபுரம் நடுவில். அது ஈரோடு-கரூர் நெடுஞ்சாலை, ஈரோடு-கரூர் ரயில் பாதை, மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் மூன்றும் ஓரிடத்தில் அருகருகே இணையாக செல்லுமிடம். காலிங்கராயன் எனக்கு முதன்முதலில் அறிமுகமான இடம் இந்த இடமாகத்தான் இருக்கும். ஈரோடு-கரூர் சாலையில் இருந்து மொடக்குறிச்சி செல்ல ரயில் தண்டவாளத்தின் அடியில் ஒரு நுழைவு பாலம் இருக்கும்.
மழைக் காலங்களில் அந்த பாலத்தின் அடியில் எப்பொழுதும் தண்ணீர் ஓடை போல ஒரு அடிக்கு மேல் ஓடும். அதிலும் நாங்கள் வண்டியில் வருவோம். வண்டி சரியாக நடு தண்ணீரில் நடு பாலத்தின் அடியில் சைலன்சரில் நீர் புகுந்து நின்றுவிடும். இறங்கி தள்ளு தள்ளு தான். இன்று அந்த இடத்தில் எஸ் கே எம் ஒரு தொடர்வண்டி நிறுத்தத்தை சரக்கு ஏற்ற இறக்க ஏற்படுத்தி உள்ளார். இந்த ஏரியாவின் வளர்ச்சியில் அவரின் பங்கு நிறைய. பாலத்தின் இடதுபுறம் சென்றால் ஒரு கோசாலை உள்ளது. ஈரோட்டின் வடக்கத்திய தொழிலதிபர்களால் உருவாக்கப்பட்ட இடம். இதுவும் என் சிறுவயதில் இல்லை. இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து ரக மாடுகளும் உள்ளது என்றார்கள்.
மீண்டும் பயணத்துக்கு வருவோம். ஓரிடத்தில் பெரிய ஆலமரம் ஒன்று வாய்க்காலின் அந்தப்புறம் இருந்தது. அந்த இடத்தில் வாய்க்காலைத் தாண்ட ஒரு பாலம் இருந்ததால் நாங்கள் அந்த ஆலமரத்தின் அருகில் சென்றோம். விழுதுகள் எங்களை ஊஞ்சல் ஆட வா வா என அழைதத்து. அருகில் வாய்க்கால் ஆலமரத்து நிழல். இந்த வெயிலுக்கு வாய்க்காலில் குதித்துவிட்டு இந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருப்பது எவ்வளவு மகிழ்வாக இருக்கும்? அதனை ஒட்டியே ஒரு கதிரடிக்கும் களம். ’இந்த இடம் கூட அழகாக உள்ளது. மக்களுக்கு ஒரு அவுட்டிங் போல இங்கு புத்தகம் வெளியிடலாமா?’ என பேசிக்கொண்டே கிளம்பினோம்.
அடுத்து பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலை வாய்க்காலில் குறுக்கிட்டது. இந்த இடத்தில் ஒரு சிறிய மலரும் நினைவுகள் வந்து சென்றது. காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுத்துக் கொண்டு செல்லும் பொழுது குறுக்கிடும் இந்த இடத்தைப் பற்றி #காவிரி2தேம்ஸ் நூலில் விளக்கமாக எழுதி இருப்பேன். ஒரு கல் பாலம் அதனைக் கடந்து செல்ல உதவும். அந்தக் கல்பாலத்திலிருந்து சிறுமிகள் சிறுவர்கள் வாய்க்காலில் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். நமக்கே குதித்து விளையாட தோன்றும் போது, சிறுவர்களுக்கு அங்கிருந்து செல்லவே தோன்றாது.
இன்று அது புதிய கான்ங்ரீட் பாலமாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு சற்று தள்ளி ஒரு நெல் அறுவடை செய்யும் களம், இப்பொழுது பாழடைந்து கிடந்தது.
காலிங்கராயன் வாய்க்கால் இந்தப்பகுதியில் சற்று அகன்று இருந்தது. கரையின் இடதுபுறம் வயல்வெளிகள். தூரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளத்தில் காவிரி. காலிங்கராயன் தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆன நிலையில் இருந்ததால் அப்பொழுதுதான் நாற்றங்கால் தயார் செய்துகொண்டு இருந்தார்கள். நாற்று நட்டுக் கொண்டு சற்று பசுமையாக இருந்தது. அங்கங்கு மஞ்சள். ரசித்துக்கொண்டு விரைவாக சென்று கொண்டு இருந்தோம்.
பஞ்சலிங்கபுரத்தை அடுத்து வரும் இடம் காவிரியை ஒட்டி இருக்கும் சிலுவன் கொம்பு. அங்கு பலங்கால பச்சியம்மன் கொயில் இருக்கும். 10-12 பெரிய முனிகள் அங்கு இருக்கும். அந்த முனிகள் ஆணும் பெண்ணும் கலந்த முனிகளைப்போல இருக்கும். . ஊரிலிருந்து ஞாயிறுகளில் கிடாவெட்ட சிலுவன் கொம்பு வருபவர்கள் அதிகம்.
ஒரு சிறு பாலத்தில் இருந்து வந்தவர்கள் வண்டியை நிறுத்தினார்கள். அவர்கள் கொண்டு வந்த கூடையில் இருந்ததை அப்படியே வாய்க்காலில் கொட்டினார்கள். ப்ராய்லர் கடையின் கழிவுகள். பார்த்துக் கடந்த நாங்கள் அதிர்ச்சி அடைந்து அப்படியே வண்டியைத் திருப்பி அவர்கள் முன் நிறுத்தினோம்.
”என்ன பண்ணறீங்க” என்றார் அண்ணன்.
“அது வந்து சார்…”. அவர் எங்களை அலுவலர்களாக நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
”தண்ணிய அசுத்தபடுத்த எப்படீங்க மனசு வருது” என ஆரம்பித்து கொஞ்ச நேரம். கடிந்து கொண்டார்.
” சாரி சார்.. இனிமே இங்க கொட்டலைங்க” என்றார்.
நாங்கள் பார்த்தவரை வாய்க்கால் தண்ணீரை மாசு படுத்துவதில் இந்த ஊர் அந்த ஊர் என சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் அல்ல.
- தொடர்வோம்.
ஊருசுத்தி - தனபால் பவானி
பயணங்கள் என்பது கவலைகளை மூட்டைகட்டி மூளையின் மூலையில் போட்டுவிட்டு மனதையும் நினைவுகளையும் எப்போதுமே ஈரமாகவே வைத்திருப்பவை. காலங்கள் பல கடந்தபோதும் எப்போதோ போய் வந்த பயணங்களின் சுவடுகள் இதமாய் கொடுக்கும் ஒத்தடம் போல வெதுவெதுப்பாய் சுட்டபடி மனதின் எல்லா பக்கங்களிலும் இருந்து எட்டிப்பார்க்கும். அப்படி எப்போதோ போய் வந்த பயணமொன்று இன்னும் இதமாய் நினைவுகளை மீட்டுகிறது கம்பிகள் அறுந்தபின்னும் இசை கசியும் ஒரு வீணையைப்போல.
நீண்ட நாட்களாகவே "பொன்னியின் செல்வன்" கதை நடந்ததாக கூறும் இடங்களுக்கு ஒருமுறை போய்வரவேண்டுமென ஆசை உள்ளுக்குள் உழன்றுகொண்டே இருந்தது. சரியான நட்பும், சரியான காலமும் வாய்த்துவிட்டால் நினைத்ததை விட அதிகமான இடங்களையும் அனுபவங்களையும் நினைவுகளில் சுமக்கலாம் என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படித்தான் அந்த பயணமும் அமைந்தது.
2016 செப்டெம்பர் மாத இறுதியில் சென்னையிலிருந்து தொடங்கிய பயணத்தில் முதலில் போனது "ஆலம்பாறை கோட்டை". சென்னையிலிருந்து மகாபலிபுரம் வழியாக போனால் 110KM தூரத்தில் உள்ளது இந்த பழங்கால சிதிலமடைந்த கோட்டை. இதை “கோட்டை” என்று சொல்வதை விட கோட்டை இருந்த இடமென்று சொல்வதுதான் பொருந்தும். ஒரு காலத்தில் இந்நகரை ஆண்ட மன்னர்கள் கடல் வழி வணிகங்களுக்காக உருவாக்கிய கோட்டையாக இருக்கலாம். செங்கற்களால் மட்டுமே கட்டப்பட்டிருந்த கோட்டை முற்றிலும் சிதைந்து தோட்டத்து பங்களாவின் மூலையில் குடிசைக்குள் சிறைவைத்த வயதான பாட்டியைப்போல தன் அனுபவத்தையெல்லாம் இழந்து உதிர்ந்து நிற்கிறது. இடிந்து விழுந்திருந்த சுற்றுச்சுவர்களின் இடைவெளிகளை நுழைவு வாயில்களாக மாற்றி நின்றுகொண்டிருந்தது. பிரம்மாண்ட அணிலொன்று கடல்பார்த்தபடி உட்கார்ந்திருப்பது போல இருந்தது உடைந்துகிடந்த அந்த சுவர். ஒருகாலத்தில் அது கலங்கரைவிளக்கமாக கூட இருந்திருக்கலாம். இதைப்போலவே கிணறு வடிவில் ஒரு தொட்டி , பல ஜன்னல்கள் வைத்த பெரிய அறை, படிக்கட்டுகள் நிறைந்த மாடிக்கு போகும் வழி, படகுத்துறை, கடலுக்கு நடுவே குட்டி தீவு போல மணல்திட்டு என எத்தனையோ விஷயங்கள் ரசிக்க ரசிக்க ரம்மியமாய் இருந்தது. இப்போதும் அந்த மன்னர்களின் ஆட்சியாகவே இருந்திருந்தால் எத்தனை அழகாய் இருந்திருக்குமென்ற கேள்விக்கு பதிலாய் பெருமூச்சொன்று மட்டுமே வந்தது. போகன் படத்தில் வரும் “செந்தூரா” பாடலில் இதை அத்தனை அழகாக வீடியோவாக காட்டியிருப்பார்கள். புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடம்.
ஆலம்பாறை கோட்டையிலிருந்து அடுத்ததாய் நாங்கள் போன இடம் பிச்சாவரம். சிதம்பரத்துக்கு அருகே கடலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆலம்பரையிலிருந்து 120KM வரும். "பேக் வாட்டர் லேக்" என்று சொல்லும் கடல்நீர் நிரம்பிய ஏரியில் படகுசவாரி. தசாவதாரம் படத்தில் கமலை சிலையோடு கட்டிக்கொண்டுபோய் நீருக்குள் மூழ்கடிக்கும் இடம். இங்கு தண்ணீரில் வளர்ந்திருக்கும் "சுரபுன்னை" மரங்களால் நிரம்பிய தீவுகள் குட்டிகுட்டியாய் நிறைய இருக்கின்றன. இந்தக்காடுகளை "அலையாத்திக்காடுகள்" என அழைக்கிறார்கள். இங்குள்ள மரங்களின் காய்களில் இருந்துவிழும் விதைகளால் மீண்டும் மரங்கள் வளர்வதாக சொல்லப்படுகிறது. விதவிதமான படகுகள் போக்குவரத்தை சுற்றுலாத்துறை செய்திருக்கிறது. அதைப்போலவே "விதவிதமான" கட்டணங்களும் உண்டு. நாங்கள் போனது துடுப்பு போடும் வகை படகில். இதில் படகோட்டியாக வந்தவர் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே வந்தார். அதிகாரிகள் தங்கும் விடுதி தண்ணீர் சூழ்ந்த நடுமையத்தில் சுனாமியின் தாக்கத்தால் இடிந்து கிடந்தது. சட்டென செடிக்குள் இருந்து பறக்கும் விதவிதமான பறவைகள், நீளமாய் வளர்ந்த மரத்தின் வேர்கள், படகுகள் போகும் பாதைக்கு தக்கவாறு வளர்ந்திருக்கும் மரங்கள் என இதை நினைக்கும்போதே அமேஸான் காடுகளின் பிரம்மாண்டத்தையும் பயத்தையும் உணர முடிகிறது. கட்டிடங்களின் நடுவே மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஒருமுறை இங்கு சென்றால் காடுகளின் நடுவே வாழும் வாழ்வின் ஒரு சில மணிநேரங்களை உணரலாம்.
அன்றைய இரவு மன்னார்குடியில் நண்பரின் வீட்டில் நல்ல ஓய்வுக்குப்பின் விடிந்த காலையில் கிளம்பி தஞ்சாவூர் போனோம். வழியெங்கும் தஞ்சை நெற்களஞ்சியத்தின் அழகு கண்கொள்ளா காட்சி பச்சை போர்த்திய நெல்வயல்கள், சாலையின் இரண்டு பக்கமும் வளர்ந்து நிற்கும் அரணாய் நிழல் பரப்பும் புளியமரங்கள் அழகு. தஞ்சை சென்றதும் முதலில் சோழர்கள் அருங்காட்சியகம் போனோம். அருங்காட்சியகத்தின் கண்ணாடி பேழைக்குள் இருக்கின்றன சோழர்கள் பயன்படுத்திய பொருட்களும் உலகிற்கே சவால் விட்ட தமிழர்களின் வீரத்திற்கு துணைநின்ற சில ஆயுதங்களும். அதே இடத்தின் அருகில் ராஜராஜ சோழனின் மணிமண்டபத்தில் குடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள், இன்றைய தமிழ்நாட்டின் சில "வீரர்கள்". உலகெங்கும் தமிழனின் வீரத்தை கல்வெட்டுகளில் பதித்த அந்தமாவீரனின் மணிமண்டப சுவர்கள் சுமந்துகொண்டிருக்கின்றன, யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு போன பழைய காதலிகளின் பெயர்களை.
தஞ்சை அரண்மனையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பழங்கால பொருட்களின் வரிசையில் இருக்கிறது அம்மிக்கல்லும், ஆட்டாங்கல்லும். தங்கக்காசுகளையும், நகைகளையும் போட்டு வைக்கும் மிகப்பெரிய மரப்பெட்டிகளில் இன்னும் அந்த வீரம் உறங்கிக்கொண்டிருக்கலாம். அந்த அரண்மனையில் நடக்கும்போது "ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட , சோழர்குல தில" என்று நீளும் கம்பீர சொற்கள் காதுகளுக்குள் உருளுவதை உணரமுடிந்தது. தலையாட்டி பொம்மைகளின் பிரம்மாண்ட உருவ சிலைகள் அரண்மையின் இருபக்கங்களிலும் தலையாட்டாமல் இருந்தன. பயிற்சி ஆசிரியர் கல்லூரியில் இருந்து வந்த பெண்கள், தன் மகனை தேர் ஏற்றிக்கொன்ற மனுநீதி சோழனைப்பற்றி கேட்ட கதையால் புருவம் உயர்த்திய போது தெரிந்தது கல்விமுறை கட்டமைப்பின் மீதான வருத்தம். அரண்மனை வெளியே தலையாட்டி பொம்மைகள் செய்யும் கடைகள் சாலையின் இரு பக்கங்களிலும் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் வேலை செய்யும் அத்தனை பேரும் உளிகளை பயன்படுத்தாத சிற்பிகள்தான்.
சூரியன் மறையத்தொடங்கிய மாலையில் இருந்து இரவு வரை தஞ்சை பெரியகோவிலின் அழகை பிரமிப்பு அகலாமல் ரசிக்க முடிந்தது. இதற்கு முன்னால் பலமுறை போயிருந்தாலும் இந்தமுறை பொறுமையாய், நிதானமாய் ரசித்து ரசித்து பார்க்க பலவிஷயங்கள் இருந்தன. கோவில் முழுவதும் ராஜராஜசோழனின் மேற்பார்வையில் கட்டியிருப்பதன் நேர்த்தி இருக்கிறது. கோவில் முழுவதும் கற்கள் அடுக்கிய இடங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஆனால் நந்தியின் வலப்பக்கம் இருக்கும் ஒரு சிறு கோவிலில் கற்கள் கோணல் மாணலாய் வைத்து கட்டப்பட்டிருக்கும். இதை ராஜராஜசோழன் இருக்கும்போது கட்டியிருக்க வாய்ப்பு மிகக்குறைவு. பரந்துவிரிந்த புல்தரையில் ஓடி விளையாடும் குழந்தைகளை ரசிக்கும் கோவில் சிற்பங்கள், யானையிடம் ஆசிர்வாதம் வாங்க பயப்படும் ஒரு புதுப்பெண், கைப்பேசியில் செல்பி எடுக்கும் இரண்டு குழந்தைகள், வாண்டுகளிடம் சிக்கிக்கொண்ட கைப்பேசியை பிடுங்க துரத்திக்கொண்டு ஓடும் தகப்பன், எறும்புக்குழி மீது நின்றுவிட்டு கடிக்கும் எறும்புகளை திட்டியபடி நகரும் ஒரு வாலிபன், திருநீறை கணவனின் நெற்றியில் வைத்துவிட்டு அது கண்களில் விழுந்துவிடாமல் இருக்க கைகுவித்து ஊதும் ஒரு மனைவியென இன்னும் ரசிக்க நிறைய விஷயங்கள் அங்கே இருந்தன. எத்தனை முறை கிடைத்தாலும் இனிக்கும் காதலியின் முத்தங்களைப்போல எத்தனை முறை ரசித்தாலும் குறையாத பிரமிப்பின் உச்சம் தஞ்சை பெரியகோவில்.
மூன்றாம் நாள் கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சையிலிருந்து 80KM தொலைவில் தஞ்சையைப்போலவே அழகான கோவில்தான். ஆனால் அத்தனை கூட்டமில்லாதது வருத்தம். நாங்கள் போனபோது கருவறை பூட்டப்பட்டிருந்தது. உள் நுழைந்ததும் இடப்பக்கம் இருக்கும் கிணற்று தண்ணீர் அத்தனை ருசி. சுற்றியுள்ள மதில் சுவர்களில் பல கற்கள் காணாமல் போயிருந்ததால் நிறைய இடங்களில் வெறுமை. கோவிலை சுற்றி ரசித்துவிட்டு திரும்பினோம். கோவிலின் வெளியே உள்ள தெப்பக்குளத்தில் நிறைய அழுக்கடைந்த கொஞ்சமான தண்ணியில் ஒரு ஆமை தலைநீட்டி பார்த்துவிட்டு ஒளிந்துகொண்டது. பொன்னியின் செல்வனில் பூங்குழலி படகோட்டும் கோடியக்கரை பகுதிக்கு போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஊருக்கு திரும்பும் வழியில் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது வந்தியத்தேவன் குதிரையின் குளம்படி சத்தம் காதுகளில் கேட்பதாக தோன்றியது. இருகரைகளையும் தொட்டபடி ஓடிய கொள்ளிடம் ஆற்றில் ஒரு சொட்டு கூட தண்ணீரில்லாமல் வறண்டு கிடந்தது. மிகப்பெரிய அளவில் மணல் திருட்டு நடந்ததற்கான ஆதாரத்தை அங்கங்கே இருந்த குழிகள் கதறியபடி கூறிக்கொண்டிருந்தன கேட்பதற்குத்தான் ஆளில்லை. நிறைவான மனதோடும், குறையாத கனவோடும் ஊர் திரும்பினோம்.
இப்போதும் கூட எப்போதாவது போரடித்தால் வண்டியை எடுத்துக்கொண்டு ஊருசுத்த கிளம்பிவிடுவதுண்டு. பெரும்பாலும் தனிமையின் துணையோடு போகும் பயணங்களில் ஒரு சுதந்திரத்தை உணர முடியும். வெளியே போய் ஊருசுத்த போதிய நேரம் இல்லையென்றாலும் உள்ளூரில் நான்கு தெருக்களுக்குள் ஒரு ரவுண்ட் போய்விட்டு வந்தாலே மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி பாயும். அது ஒரு போதை போல, ஊருசுத்துவதும் ஒருவித போதைதான். ஒவ்வொரு பயணத்தின் போதும் பல ஜன்னல்கள் திறக்கத்தான் செய்கின்றன, பல ஆச்சரியங்கள் பூச்சொரிகின்றன, மனதின் இடுக்குகளில் பரவசம் வந்து அப்பிக்கொள்கிறது, சுத்தமான காற்று நுரையீரலின் ஆழம் வரை செல்கிறது, பழைய கவலைகள் மறக்கின்றன, புதிய மனிதர்கள் கிடைக்கிறார்கள்.
பயணங்கள் எத்தனை தூரம் நீள்கிறதோ அத்தனை புது விஷயங்களை மனது உள்வாங்கிக்கொள்கிறது. இன்னும் இன்னும் பயணிக்க சிறகுகள் விரிக்க ஏங்குகிறது. தமிழ்நாட்டிலேயே எத்தனையோ இடங்கள் இன்னும் பார்க்க வேண்டியுள்ளது. காலங்களும் நட்புகளும் அதற்கு இசையும் தருணங்களில் இன்னும் பயணிக்கணும், இன்னும் ஊருசுத்தணும்.
இரகசியம் - Abu G
"எண்ணம் போல் வாழ்க்கை" என்னும் கூற்றை நாம் அனைவரும் அறிந்திருப்போம். வாழ்க்கையில் எல்லாமே எண்ணங்களால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அனைத்து எண்ணங்களும் நிஜமாக உருப்பெறவில்லை. வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டும் தான் கிடைக்கிறது. சிலருக்கு தெரிந்த இரகசியம் (இலக்கை அடைவதற்கு) பலருக்கும் பயன்பட வேண்டும். நம்முடைய எண்ணங்களை நாம் மேம்படுத்திக் கொண்டால் நிறைவேறா எண்ணங்களையும் நிஜமாக மாற்றி முழுமையான வெற்றியை அடையலாம்.
Monday, April 1, 2024
தோழி எந்தன் தோழி - 1 - ஜெயலலிதா
கிச்சனில் வேலையாக இருந்த காயத்ரியிடம் வெளியே இருந்து ஓடி வந்த புஷ்பா “அம்மா உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்காரும்மா. பார்த்தாக்க டவுனுக்காரரு மாதிரி தெரியறாரு. உங்க பேரைச் சொல்லித் தான் விசாரிச்சாரும்மா “ என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.
“ யாரு புஷ்பா ?. இதுக்கு முன்னாடி இவரு நம்ம வீட்டிற்கு வந்திருக்காரா என்ன?” புஷ்பாவிடம் கேட்டாள் காயத்ரி.
புஷ்பா கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக இதே வீட்டில் காயத்ரிக்கு உதவியாக இருப்பவள். காயத்ரியின் சுக துக்கங்களில் உண்மையான அக்கறை கொண்டவள்.
“ இல்லம்மா, இதுக்கு முன்னாடி இவரு நம்ம வீட்டுக்கு வந்த மாதிரியே தெரியலம்மா. வயசு கூட கிட்டத்தட்ட அம்பது வயசு, நம்ம ஐயா வயசே இருக்கும்னு நினைக்கறேன். ஆனாலும் ஆளு ஷோக்கா இருக்கறாரும்மா “ என்று வந்தவரை வர்ணித்தாள் புஷ்பா.
“ சரி, வா போய்ப் பார்க்கலாம்” என்ற காயத்ரி “ ஆமா வந்தவரை வாசல் கேட்லயே நிக்க வெச்சிருக்கியா இல்ல வீட்டுக்குள்ளே வரச் சொன்னியா புஷ்பா” என்று கேட்டாள்.
“ என்னம்மா நீங்க இப்படி கேட்டுப்புட்டீங்க…! நம்ம வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் எனக்கு தெரியாதா என்ன. அவரை உள்ளே வரச்சொல்லி முன்கூடத்துல உக்கார வெச்சுட்டு தான் வந்திருக்கேன்மா” என்றாள் பெருமையாய் புஷ்பா.
“ சரி சரி கொஞ்சம் பேசாத வர்றியா…!" என்ற காயத்ரி சமையல் கட்டுக்கு அடுத்தபடியாக இருக்கும் விசாலமான சாப்பாட்டு கூடம் தாண்டி, அதற்கு அடுத்துள்ள பெருங்கூடம் கடந்து, பின் நெருங்கிய உறவினர்கள் வந்து உட்காந்து உறவாடும் பெரிய அறைதாண்டி, அதற்கு அடுத்துள்ள வீட்டின் அகலமான வரவேற்பறையைக் கடந்து முன்கூடத்திற்கு வந்தாள்.
பெரும்பாலும் முன்பின் அதிகம் பழக்கம் இல்லாதவர்களையும், அறிமுகம் இல்லாதவர்களையும் மட்டுமே முன்கூடத்தில் அமரவைத்துப் பேசுவது வழக்கம். மற்றபடி அந்த வீட்டின் விருந்தோம்பலும் உபச்சாரமும் பற்றி அந்த எட்டுப்பட்டி கிராமத்துக்கும் அத்துபடி.
கூடத்தில் அமர்ந்திருந்தவரின் பளீரென்ற சிவப்பும், உயரத்துக்கு தக்க பருமனுமாய், தகுந்த விதத்தில் “ டக் “ செய்யப்பட்டிருந்த அவரது பேண்ட் சர்ட் நேர்த்தியும், கூடவே காயத்ரியைக் கண்டதும் களைப்பையும் மீறி அவரது முகத்தில் தோன்றிய பளீரென்ற மின்னல் சந்தோஷமும், அவரது நெற்றியில் இருந்த திருநாமமும் காயத்ரியின் மனதில் பதிந்தது.
ஏதோ நினைவில் அவரையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தவளிடம் வந்திருந்தவர் “ என்னைத் தெரியலியா காயத்ரி? . நா கேசவன். ரகுராமனோட அத்தைப் பிள்ளை” .
“ ஓ…காட்….!!. சட்டுனு நினைவுக்கு வரல.ஆனா… மனசுக்குள்ளே உங்க முகம் ஆழமாப் பதிஞ்சு போன நெனப்பு. அதான் பேசக் கூட முடியல. இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா..!?” என்று சொன்ன காயத்ரியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் ஒளி.
“கேசவண்ணா எப்படியிருக்கீங்க?. வீட்டில் எல்லாரும் செளக்கியமா? அப்புறம் உங்க மாமா பிள்ளை எப்படி இருக்கிறார்?. உம்…அப்பவே அரைச்ச உளுந்து மாவு மாதிரி புஸ்புஸ்னு வெள்ளை வெளேர்னு இருப்பார். இப்ப எப்படி தொந்தியும் தொப்பையுமா ….. அடடா…நா ஒண்ணு, வந்தவரை வீட்டுக்குள்ளே கூடக் கூப்பிடாம நிக்கவெச்சுட்டு, சந்தோஷத்துல ஏதேதோ பேசிட்டிருக்கேன் பாருங்க..” என்று பரபரத்த காயத்ரி புஷ்பாவிடம் திரும்பி
“ என்ன புஷ்பா நீயும் நின்னுட்டே இருக்கறியே..? கேசவன் அண்ணாக்கு அப்புடியே கெட்டி பால்ல காபி பொடியைப் போட்டு கொஞ்சம் தூக்கலான இனிப்போட நுரைக்க நுரைக்க ஆத்திக்குடிக்கறது தான் ரொம்பப் பிடிக்கும். நீ போயி சீக்கிரமா காபி கொண்டு வா புஷ்பா..” என்ற காயத்ரி, கேசவனிடம் இதோ ஒரு நிமிசம் இருங்க, மேக்காலத் தோட்டம் போயிருக்கற என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் போட்டு நீங்க வந்திருக்கற. விசயத்தைச் சொல்லிட றேன் “ என்று சந்தோஷமாய்ப் படபத்த காயத்ரியை ஆச்சரியமாகப் பார்த்தபடியே காபி கலந்து வர உள்ளே சென்றாள் புஷ்பா.
இத்தனை வருடங்களில் தன் எஜமானியம்மாளிடம் பார்த்திராத ஒரு முகமாய் இந்தக் குதூகலம் தெரிந்தது.
பொதுவாகவே காயத்ரி அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள். தன்மை அறிந்து உதவி செய்வதில் காயத்ரியை மிஞ்ச ஆளே கிடையாது. தன்னுடைய தோழிகள் யாராவது வீட்டிற்கு வந்தாலும் கூட ஓடிச் சென்று கை பிடித்து அழைத்து வந்து அளவளாவுவாள்.மற்றபடி….
காயத்ரியின் இந்த குதூகலமும், இந்த உறவும் புஷ்பாவிற்குப் புதிதாகவே இருந்தது. புரியவும் இல்லை. ஆனாலும் காயத்ரியின் சந்தோஷமும் பரபரப்பும் இவளையும் தொற்றிக்கொள்ள வேகமாகக் காபி கலந்தாள்.
நாற்பதின் பிற்பகுதியில் நிற்கும் காயத்ரியின் முகத்தில் இப்போது தெரிந்த சந்தோஷ அலை அவளை அப்படியே இருபதுக்குள் இழுத்துச் சென்றது.
காபியை குடித்து முடித்த கேசவன் “ அப்புறம்…நீ எப்படி இருக்கறே காயத்ரி, உன்னைப் பத்தி எதுவுமே சொல்லலையே?”
“ நான் நல்லா இருக்கேன். எங்க வீட்டுக்காரர் கதிர் மாமாவைப் பத்தி தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே கேசவண்ணா. என்ன…எங்க பெரிய மாமா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்ததுக்குப் பிறகு, இவரு தன்னோட ஜாப்பை விட்டுட்டு வந்து விவசாயத்தைப் பார்க்கவேண்டியதாப் போச்சு.
வேறென்ன பண்றதுங்ணா, எங்க பெரிய மாமாவுக்கு இவரு மட்டும் தானே வாரிசு. ஒரே பிள்ளை. சோ…அப்பாவுக்கு பின்னால மகன் தானே எல்லாத்தையும் பார்த்தாகனும். அதனால இத்தனை சொத்துக்களையும் கட்டிக் காப்பாத்தனுமேன்ற பொறுப்புல வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்க வந்துட்டாருங்க.
ஆரம்பத்துல சில சமயம் நான் கூட மனசு பொறுக்காம. அவருட்ட கேட்டேன்...'ஒரு ஆபிஸரா ஜீப்புல கெத்தா போய் வந்து இருந்துட்டு, இப்ப இப்புடி ஆளு அம்போட நெலத்துல இறங்கி விவசாயம் பண்றது கஷ்டமா இல்லியா மாமா'ன்னு…?
ஆனா அதுக்கு அவரோ, 'அடியே மக்கு.. நா இருந்தது ஒரு அக்ரி ஆபீசரா. இப்ப நா பண்றதும் அக்ரிகல்சர். இதுல என்ன பெரிய வித்தியாசம்?. தியரியா எல்லார்ட்டயும் சொல்லிட்டு இருந்ததை, இப்ப பிராக்டிக்கலா பண்ணிட்டு இருக்கேறேன். இப்ப நம்ம மகசூலைப் பார்த்துட்டு மத்தவங்க எல்லாம் இது எப்படி சாத்தியம்னு எங்கிட்ட வந்து கேட்டுத் தெரிஞ்சுக்கறாங்ளே..இந்த சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காது காயத்ரி'ன்னு சொல்லுவார்
அப்புறறம்..எங்க பெரிய மாமா போன கவலையிலயே அடுத்த ரெண்டு வருஷத்துல எங்க அத்தையும் காலமாயிட்டாங்க. அதனால வீட்டுப் பொறுப்பு பூராவும் என்னுடையதாயிடுச்சுங்”.
“ ஓ….சரி, பிள்ளைங்கெல்லாம்….”
“ ரெண்டு பிள்ளைங்க கேசவண்ணா. மொதல்ல பொண்ணு. இஞ்சினியரிங் படிச்சா. இப்போ கல்யாணத்துக்கு பிறகு சென்னைல அவங்களோட கம்பெனியையே பார்த்துட்டு இருக்கிறாள். ரெண்டாவதா பையன். இப்போ பிளஸ் டூ படிச்சுட்டு இருக்கிறான். ரெண்டு பேருக்குமிடையே கொஞ்சம் அதிக கேப் தான்” என்று தன்னைப் பற்றி மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள் காயத்ரி.
அப்போது வாசல் கேட் அருகே புல்லட் சத்தம் கேட்டதும் “இதோ மாமா வந்துட்டார் கேசவண்ணா” என்ற காயத்ரி எழுந்து வாசலை பார்த்தாள்.
வீட்டிற்குள் ஆர்வமாக நுழைந்த கதிர், “ வாங்க..வாங்க..கேசவன்.எப்படி இருக்கீங்க?. பார்த்து ரொம்ப வருஷமாச்சு இல்லீங்ளா…அப்புறம் ரகுராமன் எப்படி இருக்கிறார்..” என்று கேட்டவர் அன்பு மேலிட அப்படியே கேசவனை தன்னோடு அணைத்துக் கொண்டார்.
பின் காயத்ரியிடம் “ காயத்ரி நீ போயி சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணும்மா” என்ற கதிர்வேல் கேசவனிடம் “ அப்புறம் இவ்வளவு வருஷம் கழிச்சு எங்களைத் தேடிட்டு வந்திருக்கீங்க. ரொம்ப முக்கியமான விசயமா இருக்கனும் தானே! சொல்லுங்க கேசவன்” என்றார் கதிர்.
கதிரின் சரியான கேள்வியில் கலங்கிப் போன கேசவனுக்கு மேற்க்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் கண்கள் கலங்கியது.
அதைப் பார்த்ததும் பதறிப் போன கதிர், “ என்ன கேசவன் நா எதுவும் தப்பாக் கேட்டுட்டேனா?.எனக்கு உங்களையும் ரகுராமனையும் நெனச்சுட்டாலே என்னம்மோ ரொம்ப நாள் பழகிய உணர்வு வருது. அது எனக்கே வந்துச்சா இல்ல காயத்ரி சொல்லிச் சொல்லி அவளால அவளுக்காக வந்துச்சுன்னாவே தெரியலை. ஆனா அப்படி ஒரு அன்பு. ஒரு பிடிப்பு உங்க மேல. அதான் ஆர்வம் தாங்கமுடியாம சட்டுனு வெளிப்படையாவே கேட்டுட்டேன். அதுவும் ரகுராமன் வராம, நீங்க மட்டும் இங்கே வந்ததுல, மனசுக்குள்ளே ஒரு நெருடல் கேசவன். நீங்க ஒன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க” என்று சொன்ன கதிர் கேசவனது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து இறுக்கிக் கொண்டான்.
“ நான் தப்பா எதுவும் நினைக்கல கதிர். நா சொல்ல வந்ததை எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தடுமாறிட்டு இருந்தேன். அதான் உங்களோட சரியான கேள்வி என்னைக் கண் கலங்க வெச்சுடுச்சு” என்றான் கேசவன்.
“ சொல்லுங்க, என்ன விசயம் கேசவன்?” .
தொடரும்….
"தேவர் யாம்!" என்பவரைத் தெவ்வர் எனல் - உதயபாஸ்கர் நாச்சிமுத்து
கயமை என்னும் அதிகாரத்தில் இடம்பெறும் ஒரு குறள்,
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் [குறள் 1073]
இந்தக் குறளில் மட்டுந்தான் வள்ளுவர் “தேவர்” என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், பரிமேலழகர் சொல்வதுபோல, கயவரைப் புகழ்வது போன்று வள்ளுவர் இகழ்கிறார் என்றுதான் தோன்றும். ஆழ்ந்து படிக்கும்போது, அதில் உள்ள அறச்சீற்றம் புலப்படும்.
பழந்தமிழரின் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வகை கொண்ட வாழ்வியலை முறையாகத் தொகுத்து வழங்குகிறது திருக்குறள். வள்ளுவரின் காலத்தில் தனிமனித ஒழுக்கத்தில் எவையெல்லாம் அறம், அறமற்றவை என்பதை அறத்துப்பாலில் தொகுத்திருக்கிறார். தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்வதே சமூக வாழ்வு, ஒழுக்கம் தவறினால் பிறப்பே இழிபிறப்பாகிவிடும் (ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - குறள் 133) என்கிறார் வள்ளுவர். அறத்துப்பாலில் தொகுத்திருப்பது போன்றே பொருட்பாலின் குடியியலிலும் அறம் சார்ந்த சமூக வாழ்வு, அறமற்ற சமூக வாழ்வு என்பவற்றை வகைப்படுத்தியிருக்கிறார். அறமற்ற சமூக வாழ்வின் தொகுப்பாக “கயமை” என்னும் பொருட்பாலின் கடைசி அதிகாரம் அமைந்திருக்கிறது.
பெரும்பாலான அதிகாரங்களில் தலைப்பிற்கான இலக்கணம் முதற்சில குறட்பாக்களிலேயே விளக்கப்பட்டிருக்கும். கயமை அதிகாரத்திலும் முதன்மூன்று குறட்பாக்கள் கயமையை விளக்கிவிடுகின்றன. அறம் என்பதை “அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் - நான்கும் இழுக்கா இயன்றது அறம் [குறள் 35]” (பொருள்: தீயவழி, விருப்புவெறுப்பு, கோபம், கடுஞ்சொற்கள் ஆகிய நான்கும் தவிர்த்து வாழ்வதே அறம்!) என்று நேரடியாக விளக்கும் வள்ளுவர் கயமை என்பதைக் கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் விளக்குகிறார்.
கயமையின் முதற்குறள் தோற்றத்தை (Appearence) அடிப்படையாகக் கொள்கிறது.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில் [குறள் 1071]
தோற்றத்தை வைத்து இன்னார்தான் கயவர் என்று அடையாளம் காண முடியாது என்கிறார் வள்ளுவர். இன்று தமிழ்த் திரைப்படங்களில் திருநெல்வேலிக்காரர்கள் என்றாலே கையில் அரிவாளோடு திரியும் முரடர்கள், வடசென்னைக்காரர்கள் என்றாலே சமூகவிரோதிகள் என்ற பிம்பம் அமைக்கப்படுகிறது. இங்கே இப்படி! ஆனால், வடக்கே இந்தித் திரைப்படங்களில் வரும் மதராசிகள் எல்லோரும் பட்டை போட்டுக்கொண்டு சாம்பாரை ஊற்றிக் குடிக்கும் நோஞ்சானான கோமாளிகள்! எண்பது தொண்ணூறுகளில் சர்தார்ஜிகள் எல்லோரும் முட்டாள்கள் என்பது போன்ற தோற்றத்தை அப்போதைய நகைச்சுவைத் துணுக்குகள் ஏற்படுத்தின. அவ்வளவு ஏன்? குறவர்கள் எல்லோரும் திருடர்கள் என்பதுபோல “கொறவன் மாதிரி முழிக்கிறான் பாரு!” என்றும், குயவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பதுபோல “சுத்தக் கொசவனா இருக்கிறே!” என்றும், பெண்கள் எல்லோரும் வலிமையற்றவர்கள் என்பதுபோல “மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா, ஒத்தைக்கு ஒத்தை வாடா பொட்டையா!” என்றும் சொல்வதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இவையெல்லாம் “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்னும் சமத்துவத்துக்கு எதிரானவை; அறமற்றவை! ஒருவரின் தோற்றம் அவர் நல்லவரா கெட்டவரா என்பதைத் தீர்மானிப்பதில்லை என்னும் வள்ளுவரின் சமத்துவப் பார்வையைப் பறைசாற்றும் குறள் கயமையின் முதற்குறள்!
கயமையின் இரண்டாவது குறள் மனநிலையை (Attitude) அடிப்படையாகக் கொள்கிறது.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர் [குறள் 1072]
இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கயவர் என்பதை மட்டுமே எழுவாயாகக் (Subject) கொண்டு “நன்றை அறிந்தவரை விட கயவர்கள் தம் நெஞ்சத்தில் அவலமில்லாத திருவுடையர் (Luckier)” என்று உரையெழுதி இருக்கிறார்கள். அறமற்ற சமூக வாழ்வு வாழ்வதை இழிபிறப்பு என்று வரையறுக்கும் வள்ளுவர், சமூகவாழ்வுக்குப் புறம்பான கயவர்களை Luckier என்று ஏன் புகழவேண்டும்?
கயமையின் முதலிரண்டு குறட்பாக்களைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் திருக்குறள் அறநூல் என்பது புரிபடவேண்டும். திருக்குறளைப் பொறுத்தவரை அறமே நன்று! அறம் அகம் சார்ந்தது; புறத்தோற்றம் சார்ந்ததன்று. கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் மனத்தில் அழுக்கை வைத்துக்கொண்டு புறத்தோற்றத்தில் நல்லவர்போல நடிப்பதை வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார். அதிலிருந்து சில குறட்பாக்கள்,
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் [குறள் 278]
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின் [குறள் 272]
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் [குறள் 280]
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும் [குறள் 275]
இவை நான்கும் ஒருசேர இவ்வாறு பொருள்படுகின்றன: “மனம் முழுக்க அழுக்கை நிரப்பிக் கொண்டு மாண்புடையவர்கள் போல வலம்வரும் பலர் இருக்கிறார்கள். தாம் செய்வதெல்லாம் தன்னலமிக்க குற்றம் (அநியாயம்) என்று தெரிந்தும் உயர்ந்த தோற்றம் பூண்டிருப்பதால் என்ன பயன்? மொட்டையடித்துக் கொண்டும், தாடி வளர்த்திக் கொண்டும் மெய்யறிவு பெற்றவர்போல் நடிப்பதெல்லாம் வேண்டாம்; உலகம் பழிக்கும் அறமற்ற இழிசெயல்களை ஒழித்துவிட்டாலே போதும்! தன்னை ‘பற்றேதும் இல்லாத சற்குரு’ என்று பறைசாற்றிக் கொள்வாரின் கயமை, பின்னர் வருந்தும்படியான நிலைக்கு அவர்களைத் தள்ளிவிடும்”
உண்மையில், கயமையின் இரண்டாம் குறள் Compare-and-Contrast முறையில் அமையப்பெற்ற இரண்டு எழுவாய்கள் கொண்ட குறள். கயவர்கள் அறம் என்பதை அறியாத தன்னலம் மிக்கவர்கள். அறனறியும் பேறு பெற்றவர்கள் (திருவுடையர்) தம் நெஞ்சத்தில் அவலம் இல்லாதவர்கள். ஏனெனில், அறனறிந்தவர்களின் மனம் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இல்லாதது. தன்னலமும், விருப்புவெறுப்பும், கோபமும் கொண்ட கயவர் நெஞ்சம் நாளும் அவலத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் என்பதே இந்தக் குறளின் பொருள்.
கயமையின் மூன்றாம் குறள்தான் முதலில் சொல்லப்பட்ட,
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் [குறள் 1073]
என்னும் குறள். இது கயவரின் பண்பைக் (Character) காட்டும் குறள். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தம் மனம் விரும்பியபடியெல்லாம் செய்து நடப்பதால் கயவரும் தேவரைப் போன்றவர் என்கிறார் வள்ளுவர். தேவரின் குணமும் கயவரின் குணமும் வேறுவேறல்ல என்பது இந்தக் குறளின் நேரடிப் பொருள். ஆனால், இதை பரிமேலழகர் கயவரைத் தேவரோடு ஒப்பிடும் வஞ்சப்புகழ்ச்சி என்று தன் உரையில் சொல்கிறார். ஏனெனில், வடமரபின் தாக்கத்தால் வானோர் என்பதையும் தேவர் என்பதையும் ஒரேபொருளில் பார்க்கிறார் பரிமேலழகர். ஆனால், வானோர் வேறு தேவர் வேறு என்பது வள்ளுவரின் பார்வையாக இருக்கிறது.
வானோர் என்பதை வள்ளுவர் இவ்வாறு வரையறுக்கிறார்:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் [குறள் 50]
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு [குறள் 86]
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும் [குறள் 346]
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி [குறள் 25]
இவற்றின் பொருள்: “அறனறிந்து, மக்களை நேசித்து, விருப்புவெறுப்பற்று, மக்களுக்காக வாழ்ந்தவன் வானுறையும் தெய்வமாக மக்களால் போற்றப்படுவான். அறஞ்சார்ந்து விருந்தோம்பி வாழ்வாங்கு வாழ்ந்தவன் இறந்தபின் வானத்தவர்க்கு நல்விருந்தினனாக ஆகிறான். தான், தனது என்னும் தன்னலமற்று வாழ்பவன் வானோரைவிட உயர்ந்த உலகம் புகுவான். ஐம்புலன்களையும் அடக்கி விருப்புவெறுப்பற்று வாழ்ந்ததற்கு வானோர் தலைவனான இந்திரனே சான்று!”
வானுறையும் தெய்வம் வானோர். அவர்கள் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள்! இறந்த பின்பும் தன்னலமற்று மக்களைக் காப்பார்கள் என்பது மக்களின் நம்பிக்கை. இதுவே, தமிழரின் முன்னோர் வழிபாட்டின் ஆணிவேர்! கருப்புசாமியை வழித்துணைக்கு அழைக்கும் வழக்கமெல்லாம் இந்த நம்பிக்கையிலிருந்தே எழுகிறது.
வானோர் என்பது தமிழ்ச்சொல். தேவர் என்பது வடசொல். தேவர் என்னுஞ்சொல்லை மட்டுமே வள்ளுவர் கயமை அதிகாரத்தில் பயன்படுத்தியிருக்கிறார். வானோர் என்பதை விளக்குவதுபோல தேவர் என்பதை விளக்கவில்லை. மாறாக, தேவரும் கயவரும் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்யும் குணத்தால் ஒன்றே போன்றவர்கள் என்கிறார். விருப்புவெறுப்பு அறத்துக்கு எதிரானது! வள்ளுவர் வரையறுக்கும் வானோர் வாழ்நாள் முழுக்க தன்னலமற்று வாழ்ந்து, இறந்த பின்பும் தன்னலமற்று மக்களைக் காப்பவர்கள். அதனால்தான் மக்கள் தம் குறைதீர தெய்வத்தை நாடுகிறார்கள். ஆனால், தேவர்கள் மக்களைக் காப்பவர்களாக எந்தக் கதையும் இல்லை; மாறாக, தேவர்கள் தம் குறையைத் தீர்த்துக்கொள்ள தன்னலத்துடன் ஆற்றல் மிக்க விஷ்ணுவிடம் முறையிடுபவர்கள் என்றுதான் புராணக்கதைகள் கூறுகின்றன.
மேலும், தேவர் தலைவனும் இந்திரன். வானோர் தலைவனும் இந்திரன். தேவர் தலைவன் அகலிகையின் புற அழகில் மயங்கி முறைதவறி நடந்தவன். வானோர் தலைவன் ஐம்புலன்களையும் அடக்கி விருப்புவெறுப்பற்று அறவாழ்வுக்குச் சான்றாக வாழ்ந்தவன். தேவர் தலைவனுக்கு இந்திரன் என்பது பதவி. வானோர் தலைவனுக்கு இந்திரன் என்னும் அடைமொழி அவனின் ஒப்பற்ற அறவாழ்வுக்குக் கிடைத்த சிறப்பு! இருவரும் வேறுவேறு!
ஏழே சீர்கள் கொண்ட குறளில் தேவர் என்னும் வடசொல்லை “கயமை” என்னும் அதிகாரத்தில் கயவரின் குணத்தைக் (Character) குறிக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கும் மதிநுட்பம் வள்ளுவரின் அன்றைய அரசியல். நீரும் எண்ணெயுமாக ஒட்டியும் ஒட்டாமலும் தென்னாட்டில் பயணிக்கும் வடமரபும் தென்மரபும் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ளும் இந்த அரசியல் இன்றுவரை தொடர்கிறது. சென்ற நூற்றாண்டில் பாவேந்தர் பாடிய “திராவிடர் திருப்பாடல்” என்னும் பாடல் இந்த அரசியலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருந்தும் அந்தப் பாடலிருந்து சிலவரிகள்:
கோவாழும் இல்லொன்றே கோவிலாம், மற்றவை
நாவாலும் மேல்என்னோம்! நல்லறமே நாடுவோம்!
தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்!
சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம்!
வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்!
மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்
தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க
பாவையரே, காளையரே பல்லோரும் வாரீரோ!
[பொருள்: மக்களைக் காக்கும் அறம்சார்ந்த தலைவனின் இல்லமே கோவிலாம்; மற்றவை, எதுவும் மேலான இடமில்லை! அறவாழ்வு வாழ்வோம. “நாங்களே தேவர்கள்” என்பவரை எதிரிகள் என எதிர்ப்போம்! “இறப்புக்குப் பின்னான சாவில்லாத மறுவாழ்வு” என்பதில் ஒப்புதல் இல்லை. “புண்ணியம் செய்தால் சொர்க்கம்” என்ற வரவுசெலவுப் பயனை எதிர்பார்ப்பதில்லை! இந்தக் கொள்கை நிரம்பிய திராவிடத்தைத் வீழ்த்த வடக்கர் தாவி வந்தார்! அவர்களை எதிர்க்க இளைஞர்களே இளம் பாவையரே திரண்டு வாருங்கள்!]
கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி
கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...